Sunday, July 28, 2013

கவிஞர் அ. சரவணராஜ் அண்ணாவின் முகவரி தேவை... - சற்றுமுன் கிடைத்து விட்டது.

என்னுடைய வாழ்வில் ௨௦௦௫ (2005) ம் ஆண்டில் என்னிடம் பழகிய அ. சரவணராஜ் அண்ணா (இவர் ௨௦௦௦ 2000 முதல் ௨௦௦௫  2005 ஆகிய ஐந்து ஆண்டுகளில் ஏதோவொரு ஆண்டில் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற மரபுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர்.)

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் 'துஷ்யந்த் சரவணராஜ் என்ற பெயரில் அவருடைய கவிதையொன்று வெளிவந்திருந்தது. துஷ்யந்த் என்பது அவருடைய ஆண்குழந்தையின் பெயராகத் தான் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கணிப்பு. 

அழகப்பா பல்கலைக்கழகத்தில் நான் படித்த கணினித் துறையும் அவர் படித்த தமிழ்த்துறையும் அருகருகே உள்ளன. ௨௦௦௪ (2004)  ம் ஆண்டில் என்னுடைய படிப்பை ஆரம்பித்தேன். அவர் அதே ஆண்டில் தன்னுடைய முதுகலை தமிழ் படிப்பின் இரண்டாமாண்டை முடித்து விட்டு சென்று விட்டார். ௨௦௦௫ (2005) ம் ஆண்டில் அவரைப் பற்றி கேள்விப் பட்டு அவர் வேலைபார்த்த கானாடுகாத்தானுக்குச் சென்றேன். அவரைப் பற்றி சொல்லுமாறு அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். தன்னைப் பற்றி சொன்னார். காரைக்குடியில் உள்ள என்னுடைய விடுதிக்குத் திரும்பினேன். 

நான் ஆரம்பத்தில் என்னோடு அன்பாக பழகுகிறவர்களைப் பற்றி வாழ்வியல் உண்மை நிகழ்வுகளை உள்வாங்கியோ, அவர்களுக்கும் எனக்கும் இடையில் நடந்த வாழ்வியல் நிகழ்வுகளை உள்வாங்கியோ தான் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அதுவும், அந்த நிகழ்வுகள், மனதில் ஓர் அதிர்வை, பாதிப்பை ஏற்படுத்தி விட்டால், கவிதைக்கான கரு அங்கிருந்து கிடைத்து என்னை எழுதத் தூண்ட ஆரம்பிக்கும். இதற்காக நான் எப்போதும் மெனக்கெட்டதில்லை. இப்படித்தான் ஆரம்பகால கட்டங்களில் நான் எழுத ஆரம்பித்தேன். இப்படி அவருக்காக எழுதிய மூன்று கவிதைகள்.

காதல்க்கவி - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2011/08/blog-post_5200.html

சாதனைக்கவி - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2011/08/blog-post_1666.html

கவிவள்ளல் - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2011/08/blog-post_6156.html

மறுமுறை அவரைச் சந்திக்கபோது, நான் அவருக்காக எழுதிய காதல்க்கவி என்ற கவிதையை கையெழுத்துப்பிரதியாக அவரிடம் கொடுத்தேன். வாங்கிப் படித்துவிட்டு பத்திரமாய் வைத்துக் கொண்டார். 

நான் அவருக்காக எழுதிய இரண்டாவது மற்றும் மூன்றாவது கவிதைகளை என்னுடைய வகுப்பில் கானாடுகாத்தானிலிருந்து வந்து படிக்கும் ஒரு தோழியிடம் கொடுத்தனுப்பினேன். மறுநாள் அவள் என்னிடம் வந்து "அவரை சந்திக்க இயலவில்லை." என என்னிடமே திருப்பித் தந்து விட்டாள். பல நாட்கள் கழித்தபிறகு நான் மீண்டும் கானாடுகாத்தானுக்குச் சென்றபோது அவரிடம் கொடுத்தேன். அவருடைய அறையில் அவருடைய லுங்கியை அணிந்து கொண்டு பக்கத்தில் உணவகத்தில் உண்டு, அவருடைய அறையில் உறங்கி காலையில் கிளம்பி விடுதிக்கு வந்திருக்கிறேன். அவர் அறையில், இரவு உறங்கும்போது அவர் என்ன செய்கிறார் எனப் பார்த்துக் கொண்டே தூங்கி விடுவதுண்டு. அவர் TRB க்கும் TNPSC க்கும் படித்துக் கொண்டிருப்பார். 

அவர் தற்போது கோயம்புத்தூரில், அரசுப் பள்ளியில் அரசு ஆசிரியராக நிரந்தர வேலையில் உள்ளார். என்னிடமிருக்கும் அவருடைய அலைபேசி எண்ணுக்கு (௯௯௪௩௩௩௨௧௧௬ 9943332116) கடைசியாக கடந்த ௨௦௦௯ (2009) ல் பேசினேன். அதன்பிறகு அதே எண்ணுக்கு முயற்சி செய்தேன். அழைப்பு மணி போகும். ஆனால், யாரும் பேசுவதில்லை. பலமுறை முயற்சி செய்து விட்டு அந்த எண் காலாவதி ஆகிவிட்டதாக முடிவு செய்து விட்டேன். 

ஆனால், என்னோடு பழகியவர்களுடனான நினைவுகள் எப்போதும் என்னுடனேயே இருக்கும். சில நேரங்களில் என்னையும் மீறி கண்ணீர் வரும். அதிகமாய் வலிக்கும். தனிமையில் எங்காவது சுற்றித் திரிவதுண்டு. 

௨௦௦௯ ம் (2009) ஆண்டில் அவருடைய முதல் கவிதைநூல் 'விழிநீர் வழியே விழுகிறாய்' கோவை விஜயா பதிப்பகம் மூலமாக வெளிவந்திருந்தது. கோவை விஜயா பதிப்பகம் தொலைபேசி எண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்பு பேசி அவர் பெயரைச் சொல்லி அவருடைய கவிதைநூலின் பெயரைச் சொல்லி அவர் அலைபேசி எண்கள் வேண்டும், அவருடைய கோவை முகவரி வேண்டும் என்றேன். "அவர் இங்கு அடிக்கடி வருவார். ஒரு வாரம் கழித்துப் பேசுங்கள்" என்றார்கள். அதன்பிறகு சில வாரங்கள் கழித்துப் பேசினேன். "அவர் இன்னும் வரவில்லை. வந்தால் வாங்கி வைக்கிறோம்." என்றனர். 

கோவையில் இருந்து வெளிவரும் சிற்றிதழ்களுக்கும் ஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவிற்கும் அவருடைய அலைபேசி எண்கள், முகவரி தெரிய வாய்ப்புகள் உள்ளன, அவர்கள் இந்த மின்னஞ்சலைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும். எனவே, இந்த மின்னஞ்சல் மூலமாக, அவருடைய முகவரி குறித்து கேட்கலாமா என்று நினைத்து இந்த மின்னஞ்சலை எழுதிக் கொண்டிருந்தேன். இடையில் ஒரு எண்ணம். மீண்டும் அதே அலைபேசி எண்ணுக்கு முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்து முயற்சித்தேன். சரவணராஜ் அண்ணா பேசினார். மூன்றரை ஆண்டுகள் கழித்தபிறகு இன்று சில மணிநேரங்களுக்கு முன் பேசினேன். என்னை அவருக்கு நினைவுபடுத்தினேன். ஆனந்தவிகடனில் ஒன்றரை மாதங்களுக்கு முன் அவருடைய கவிதை 'துஷ்யந்த சரவணராஜ்' என்று அவருடைய மகன் பெயரில் வந்திருப்பதாகச் சொன்னேன். உடனே அவர் "மகனுக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன் எனக்கு மகள் பிறந்து பிறந்திருக்கிறாள். சமீப காலங்களாக என்னுடைய கவிதைகள் தொடர்ந்து ஆனந்தவிகடனில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆசிரியர் குழுவிலிருந்து அடிக்கடி எனக்கு அழைப்பு வரும். உங்களுடைய அழைப்பைப் பார்த்தவுடன் அவர்கள் தான் அழைக்கிறார்கள் என நினைத்து விட்டேன்." என்றார். பிறகு "என்னுடைய இரு கவிதை நூல்களை தங்களுக்கு அனுப்ப வேண்டும். தங்களுடைய கோவை முகவரி அனுப்புங்கள்." என்றேன். அனுப்பி வைப்பதாகச் சொன்னார். 

இந்த மின்னஞ்சல் மூலமாக அவரின் அலைபேசி மற்றும் முகவரி கிடைத்து விடும் என்று நம்பிக்கையோடு இந்த மின்னஞ்சலை எழுத ஆரம்பித்தேன். அனுப்புவதற்குள் தற்போது நான் அவரிடம் பேசி விட்டேன். 

நன்றி. 

Saturday, July 27, 2013

படைப்புகள் குறித்த வரவேற்புகளில் சிலவற்றைப் பற்றி...

BCC மூலமாக மின்னஞ்சல்கள் அனுப்புவது பற்றியும் அதற்கான முக்கியத்துவத்துவத்தை பற்றியும் படித்தும் இருக்கிறேன். நண்பர்கள் சொல்லக் கேட்டும் இருக்கிறேன். பொதுவாகவே நான் எப்போதும் மின்னஞ்சல்கள் அனுப்பும்போது BCC (Blind Carbon Copy) மூலமாகவே அனுப்புவதை வாடிக்கையாக்கியிருந்து வந்திருக்கிறேன். சில வாரங்களுக்கு முன் உடல் சோர்வினாலும் களைப்பினாலும் to வைத்து நான் அனுப்பிய ஒரு மின்னஞ்சல் தேவையில்லாத மனவருத்தத்தை உண்டாக்கி விட்டது. ஒரு குழுமத்தில் உள்ள ஒரு சில நல்ல நண்பர்களை, அன்பர்களை இழக்க வேண்டியதாயிற்று. நான் என்ன செய்வது? அது போன்றதொரு சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டு விட்டேன். 

இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய சில கட்டுரைகளைப் பற்றி இருவரின் விமர்சனங்கள் என்னை யோசிக்க வைத்தன. 

முதலாவது, கவிஞர். வதிலைபிரபா அவர்களின் என் எழுத்தின் மீதான அக்கறையான விமர்சனம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நான் வத்தலக்குண்டு ஊரில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சென்றிருந்த போது சில மணிநேரங்கள் பேசியபோது இடையே என்னுடைய (அரசியல், சமுதாய அக்கறை குறித்தான) மின்னஞ்சல்களில் கடினமான வார்த்தைப்பயன்பாடுகள் குறித்து "தங்களின் பெரும்பாலான மின்னஞ்சல்களில் வன்மையான, கடினமான harshஆன வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்" என்பது போன்ற ஒரு கருத்தையும் சொன்னார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன் அழகு இராட்சசி நூல் வெளியீட்டு நிகழ்விற்கு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்னுடைய அறைக்கு ஐயா வந்தபோதும் கூட என்னிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் "சமூக அநீதிகளுக்கு எதிராக நம்முடைய மாற்றுக்கருத்தை, எதிர்ப்பை கட்டாயம் எழுத்தின்மூலம் பதிவு செய்யத் தான் வேண்டும். ஆனால், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒருவருடைய உருவத்தை வைத்து அவரை விமர்சனம் செய்வது எழுத்தாளர்களுக்கு நல்லதல்ல. அதற்காக சமூக அக்கறையை, சமூக அவலங்களுக்கு எதிராக தம்முடைய மாற்றுக்கருத்தை, எதிர்ப்பை பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை" என்ற பொருள்பட அவர் சொன்ன கருத்து என்னைச் சிந்திக்க வைத்தது. 

இரண்டாவது, நண்பர். தினைக்குளம் இரமேஷ் அவர்களின் விமர்சனம். பரமக்குடிக்கு அருகில் உள்ள ஊர் தினைக்குளம். அதனாலேயே அவருக்கு என்மீது தனிப்பட்ட அன்பு. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம், பால், பேருந்து பயணச்சீட்டு கட்டண உயர்வு குறித்தான என்னுடைய ஒரு கட்டுரைக்காக "அனைவரையும் சிந்திக்க வைக்கும் கட்டுரை. ஆனால், தரக்குறைவான வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்." என்ற பொருள்பட அவருடைய விமர்சனம் என்னைச் சிந்திக்க வைத்தது. 

இந்த இரண்டு விமர்சனங்களாலும் "தாங்கொணா துன்பங்களை இந்திய ஊழல் ஆட்சியாளர்களாலும், தமிழ்நாட்டு ஊழல்வாதிகளாலும் தமிழ்நாட்டு மக்களாகிய நாம் அனுபவித்து வருகிறோம். இருந்தாலும் கூட நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமே ஒழிய எந்தவிதத்திலும் தரக்குறைவான வார்த்தைகள் என்னுடைய படைப்புகளில் வந்துவிடக்கூடாது" என்ற எண்ணத்தை மனதில் வைத்து கடந்த ஒன்றரை வருடங்களாக எழுதி வருகிறேன். கவனம் செலுத்தி வருகிறேன். 


கடந்த மூன்றாண்டுகளில் முதல் இரண்டாண்டுகளில் ஒரு நாளைக்கு ஒரு மின்னஞ்சல் ஊடங்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு என்னிடமிருந்து போய்விடும். கடந்த ஓராண்டாக குடும்பப் பொறுப்புகள், வேறு சில கடமைகள் காரணமாக படைப்புகள் தொடர்பாக மின்னஞ்சல்கள் அனுப்புவதற்கான நேரம் ஒதுக்குவது குறைந்து விட்டது. 

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சென்னை spencer plaza வில் 'கூடுகள் சிதைந்தபோது' புகழ் அகில் அண்ணா (தமிழ் ஆத்தர்ஸ் இணைய இதழின் ஆசிரியர்) உடனான சந்திப்பில் என்னிடமிருந்து தனக்கு அடிக்கடி கவிதைகள் தொடர்பாக மின்னஞ்சல்கள் வருவதைப் பற்றியும் பேசினார்.

சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து வெளிவரும் புதுவசந்தம் மாதமிருமுறை இதழின் ஆசரியர் ஒருமுறை என்னை தொலைபேசியில் அழைத்து என்னுடைய மின்னஞ்சல்கள் குறித்தும் படைப்புகள் குறித்தும் பேசினார். 

சென்னை பெரம்பூரிலிருந்து வெளிவரும் 'நம் உரத்த சிந்தனை' இதழின் ஆசிரியர் திரு. உதயம் இராம் அவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய அலைபேசி எண்ணுக்கு முதல்முறை பேசும்போது "தங்களுடைய படைப்புகள் தாங்கிய மின்னஞ்சல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இங்கு எங்களுடைய கணினியில் தமிழ் எழுத்துரு தொடர்பாக பிரச்சனைகள் உள்ளன. எனவே, அஞ்சலில் அனுப்புங்கள்."  என்றார். மீண்டும், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு என்னுடைய அலைபேசி எண்களுக்கு அழைத்து "தங்களுடைய கவிதை ஒன்றை அனுப்புங்கள். வெளியிட வேண்டும்." என்றார். அனுப்பி வைத்தேன். 'நம் உரத்த சிந்தனை' இதழில் முதல்முறை வெளிவந்திருந்தது. அந்த இதழில் என்னுடைய புகைப்படத்துடன் என்னுடைய பெயரான முனைவென்றி நா. சுரேஷ்குமார் என்பதற்குப் பதிலாக முனைவர் நா. சு. சுரேஷ்குமார் என்று வெளிவந்திருந்தது. சில நாட்கள் கழித்த பிறகு சென்னையிலிருந்து என்னுடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. "முனைவர் சுரேஷ்குமார் இருக்கிறாரா?" என்றார். எனக்குப் புரிந்து விட்டது. அதன்பிறகு நான் "ஐயா, நான் முனைவர் இல்லை. நான் எதிலும் முனைவர் பட்டம் பெற்றதில்லை. என்னுடைய பெயர் முனைவென்றி நா. சுரேஷ்குமார். என்னுடைய பெயரை இந்த மாத இதழில் பிழையாக வெளியிட்டு இருக்கின்றனர்." என்றேன். அவர் அந்த கவிதை குறித்து பேசினார் "கவிதை நன்று." என்றும் அந்த கவிதையில் ஒரு சில வரிகளின் வார்த்தையைக் குறிப்பிட்டு தான் நினைத்த வார்த்தையைச் சொல்லி அந்த வார்த்தையைப் பயன்படுத்தினால் அந்த இடத்தில் பொருள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும் என்று சொன்னார். அவருடைய விமர்சனத்திற்கும் பரிந்துரைக்கும் நான் நன்றி சொன்னேன். 

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு தமிழர் எழுச்சி மாத இதழின் ஆசிரியர் (அவர் பெயர் சட்டென்று நினைவில் வரவில்லை.) என்னுடைய அலைபேசி எண்ணுக்கு அழைத்துப் பேசினார். நான் அலுவலகத்தில் இருந்தேன். இரவு ஏழு மணி இருந்திருக்கும் "வணக்கம் ஐயா, நான் தமிழர் எழுச்சி மாத இதழின் ஆசிரியர் (தன்னுடைய பெயரைச் சொன்னார்) பேசுகிறேன் ஐயா. தாங்கள் பெயரென்ன ஐயா. தாங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்? எங்கு தங்கியிருக்கிறீர்கள்?" என்று என்னைப் பற்றி கேட்டார். நான் சொன்னேன். "தாங்களின் கவிதையைப் படித்தேன். அந்தக் கவிதையை என்னுடைய இதழில் வெளியிடலாமா ஐயா?" என்றார். "தாரளாமாக வெளியிடலாம் ஐயா? தாங்கள் படித்து விட்டு தங்களுக்கு தங்களுடைய இதழில் வெளியிட விருப்பம் இருந்தால் வெளியிடுவதற்காகத் தான் நான் அனுப்பியிருக்கிறேன். என்னுடைய எந்தக் கவிதை ஐயா?" என்றேன். 

தமிழனக் கென்று தாய்நா டிரண்டு 
தரணியில் வேண்டும் தோழா வாடா 

என்று தொடங்கும் கவிதை என என்னுடைய "தமிழா... (இந்தியாவை) விட்டு விடுதலைகாண் (http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/08/blog-post_2673.html)" என்ற கவிதையின் முதல் இரண்டு வரிகளை பாடிக் காட்டினார். எனக்கு ஒரே ஆச்சர்யம். "இதுபோன்ற கவிதைகளை எந்த ஒரு ஊடகமும் வெளியிட மறுக்கும். அப்படியே வெளியிட்டால், இந்திய அரசாங்கத்தின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டி வரும். எந்த ஒரு ஊடகமும், ஊடக ஆசிரியரும் அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள்." என்று மனதில் நினைத்துக் கொண்டு ஆச்சர்யத்தோடும் மகிழ்ச்சியோடும் "தாராளமாக வெளியிடுங்கள் ஐயா. உங்கள் இதழின் மூலம் பலரும் இந்தக் கவிதையைப் படிப்பார்கள். அவர்களுக்குள்ளும் ஒரு மன அதிர்வு, மன எழுச்சி ஏற்படும்" என்றேன். "தங்களின் இதழின் பெயர் தமிழர் நாடு தானே" என்றேன். "தமிழர் நாடு என்று தான் பதிவு செய்யப் போனோம். இதழின் பெயரை தமிழர் நாடு என்று பெயர் வைப்பதற்கு இந்திய அரசாங்கம் மறுத்து விட்டது. அதனால் தமிழர் எழுச்சி என்று வைத்து விட்டோம். நான் வயது முதிர்ந்தவன் ஐயா." என்றார். அதன்படி இந்தக் கவிதை அவருடைய இதழில் வெளிவந்தது. அவருக்குள் என்னுடைய இந்தக் கவிதை ஒரு மன அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. 

என்னை நினைவில் வைத்து மீண்டும் அவரே சரியாக நான்கு மாதங்களுக்கு முன்பு பேசினார். "தங்களுடைய படைப்புகள் தாங்கிய மின்னஞ்சல்கள் தற்போது சில மாதங்களாக எனக்கு வருவதில்லையே. தொடர்ந்து எழுதுங்கள் ஐயா. அனுப்புங்கள் ஐயா. தங்களின் நண்பர்களையும் என்னுடைய thamizharnadu@yahoo.com, என்ற மின்னஞ்சலுக்கு தமிழர் எழுச்சி தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், படைப்புகளை அனுப்பச் சொல்லுங்கள் ஐயா. இலண்டனில் சொற்பொழிவிற்கு என்னை அழைத்திருக்கிறார்கள். செல்கிறேன். வரும் ஜூன் அல்லது ஜூலை இறுதியில் தான் சென்னை வருவேன்." என்றார். 

அழிவின் விளிம்பில் தமிழின மில்லை
மொழியின வெறியால் மூண்டது தொல்லை
வழிவழித் தமிழன் வலியின் பிள்ளை

ஒரு வருடத்திற்கு முன்பு நான் எழுதிய "நாம் தமிழர் (http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/05/blog-post_02.html)" என்ற கவிதையை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த காலகட்டம். இரவு எட்டரை மணி இருக்கும், தாம்பரம் சனட்டோரியம் மின்சார ரயிலில் ஏறுவதற்காக வேகமாக நடந்து கொண்டிருக்கிறேன். இரயில் கிளம்பப் போகிறது. அழைப்பு வருகிறது. "நாங்கள் வெல்லும் தூயதமிழ் மாத இதழில் இருந்து பேசுகிறோம். தாங்களின் பெயர் என்ன? தாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? தாங்களின் அம்மா அப்பா எங்கு உள்ளனர்?" என்பது போன்ற கேள்விகளைக் கேட்டார். இந்தக் கவிதையின் தாக்கத்தில், மன அதிர்வில் தான் நான் ஈழத்தைச் சேர்ந்தவனோ என்ற சந்தேகத்தை மனதில் வைத்தபடி கேட்கிறார் என்பதை புரிந்து கொண்டு "நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் தான் ஐயா." என்றேன். "எந்த ஊரைச் சேர்ந்தவர்?" என்றார். பிறகு சொன்னேன். இந்தக் கவிதை இவருடைய மனதை அதிர வைத்திருக்கிறது. 

நான்கு மாதங்களுக்குமுன்பு  ஒருநாள் ஞாயிறு இரவு பதினொரு மணி சுவிட்சர்லாந்தில் இருந்து அங்கு உள்ள பண்பலையின் அறிவிப்பாளராகவும் கவிஞராகவும் பாடலாசிரியராகவும் உள்ள ஈழத் தமிழச்சி தங்கை. பாமினி முதல் முறையாக என்னுடைய அலைபேசி எண்ணுக்கு அழைத்தாள். (புதிதாக வெளிவரப் போகும் சித்திரை வீதி திரைப்படத்தில் ஒரு பாடல் உட்பட பல திரைப்படப் பாடல்களை எழுதியிருக்கிறாள்.) "அண்ணா, நான் பாமினி கதைக்கிறன்." என்றாள். ஏற்கனவே முகநூலில் நட்பு வட்டத்தில் இருப்பதால் உடனே "சொல்லுங்கள்." என்றேன். "இந்த நேரத்தில் அழைக்கலாமா என்று தெரியவில்லை. இப்போது அங்கு என்ன நேரமிருக்கும் என்பதை கவனிக்க வில்லை. தங்களின் படைப்புகள் தாங்கிய மின்னஞ்சல்களை நேரம் கிடைக்கும்போது அவ்வப்போது படிப்பேன். சமீபத்தில் படித்த ஒரு மின்னஞ்சலில் கட்டுரை அருமையாக இருந்தது  அண்ணா. நான் பேசுவது தங்களுக்குப் புரிகிறதா அண்ணா?" என்றாள். "நான் வேறு மொழியிலும் நீங்கள் வேறு மொழியிலுமா பேசுகிறோம். இருவரும் நம்முடைய தாய்மொழியான தமிழில் தானே பேசுகிறோம். நன்றாகப் புரிகிறது. என்ன ஒரு குறை நான் பேசும் தமிழ் உங்களுக்கு கொஞ்சம் இழுத்துப் பேசுவது போல் வித்தியாசமாகவும் நீங்கள் பேசும் தமிழ் எனக்கு கொஞ்சம் இழுத்துப் பேசுவது போலவும் இருக்கும். மற்றபடி நன்றாகப் புரிகிறது. இந்த இளம் வயதிலேயே திரைப்படங்களில் பாடல்கள் எழுதுகிறீர்கள்." என்றேன். "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா. எனக்குத் தெரிந்த தமிழை வைத்துக் கொண்டு எழுதுகிறேன். அவ்வளவு தான்." என்றாள். 

சில நாட்கள் கழித்த பிறகு குவைத்திலிருந்து வித்யாசாகர் அண்ணா பேசும்போது "தங்கை பாமினி என்னிடம் பேசினாள் அண்ணா" என்றேன். உடனே "அவள் நல்ல தங்கையாயிற்றே. சிலமுறை, அவள் அழைத்துவிட்டு யார் கதைக்கிறீங்கள் என்று விளையாடுவாள்." என்றார்.

சில நாட்கள் கழித்து, அண்ணா சொன்னது போல், என்னுடைய அலைபேசி எண்ணுக்கு பாமினி அழைத்தாள். "யார் கதைக்கிறீங்கள், யார் கதைக்கிறீங்கள்" என்று இரண்டு முறை கேட்டு விளையாடி விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள். அதன்பிறகு இரண்டுமுறை பேசியிருக்கிறாள். நல்ல அன்பான தங்கை அவள். 

கடைசியாக அகில் அண்ணா, கனடாவிலிருந்து பேசும்போதும் இதே போல் "யார் பேசுகிறேன் என்று கண்டுபிடியுங்கள்?" என்று விளையாடினார். 

நம்மிடம் அன்பு, பொறுமை என்ற இரண்டு குணங்களும் இருக்கும்வரை நாம் தாழ்ந்துவிடப் போவதில்லை.

Saturday, July 20, 2013

நமக்கு நாமே மருத்துவர் – செவிவழி தொடு சிகிச்சை மருத்துவ நிபுணர் திரு. கோவை பாஸ்கர்

அனைவருக்கும் வணக்கம்.

ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு முன்பு நான் வேலைபார்த்த பழைய அலுவலகத்தில் என்னோடு வேலைபார்த்த அன்பர் திரு. கமாலுதீன் என்பவர் திரு. கோவை பாஸ்கர் அவர்களின் ‘செவிவழி தொடு சிகிச்சை’ குறித்த காணொளிகளை (video) எனக்குக் கொடுத்து பார்க்கச் சொன்னார். ‘பாருங்கள். தங்களுக்கு உதவியாக இருக்கும் அண்ணா.’ என்றார்.

என்னுடைய மெத்தனத்தினாலும் வேறுசில காரணங்களாலும் அவர் எனக்குக் கொடுத்த காணொளிகளை பார்க்கவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்து அந்த காணொளிகளைப் பார்க்க ஆரம்பித்தேன். பார்த்து முடித்து விட்டேன். மீண்டும் பலமுறை பார்க்க வேண்டும். அப்போதுதான் மருத்துவ அறிஞர் திரு. கோவை பாஸ்கர் சொன்ன பல கருத்துகள் மனதில் ஆழமாக பதியும். புரியும்.
எட்டு மாதங்களுக்கு முன்பே அந்த அன்பர் கொடுத்த காணொளிகளை பார்க்காமல் இருந்து விட்டோமே என்ற வருத்தம் இருந்தது. அதன் முக்கியத்துவம் இப்போது தான் புரிகிறது.

‘அரசாங்கமும் பணமுதலைகளும் ஏழை மற்றும் நடுத்தர மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்? எப்படியெல்லாம் மருத்துவம், அறுவை சிகிச்சை என்ற பெயரில் வழிப்பறி செய்து நம்முடைய பணப்பையை பதம் பார்க்கின்றனர்’ என்பது இவர் குறித்த அனைத்து காணொளி கோப்புகளையும் கேட்பர்களுக்கு, பார்ப்பவர்களுக்குப் புரியும்.

இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி திரைப்படத்தில் அக்காமாலா, கப்சி யை வெள்ளையர்களிடம் பேரம் பேசும்போது புலிகேசியாக வரும் வடிவேலு நகைச்சுவைக்காக ‘மக்கள் எப்படி நாசமாய் போனால் நமக்கென்ன? நமக்குக் கிடைக்கக் கூடிய பங்குத்தொகை (commission) கிடைத்தால் போதும்’ என்பார். அந்த வசனங்கள் நகைச்சுவைக்காக மட்டுமல்ல, நிஜத்திலும் அது உண்மை. அரசாங்கம் பணமுதலைகளுக்கு ஜால்ரா தட்டுகின்றன. அரசாங்கத்தை தன் கைகளுக்குள் போட்டுக் கொண்டு மக்களிடம் மருத்துவம், அறுவைசிகிச்சை என்ற பெயரில் வழிப்பறி செய்கின்றன.

உலக மருத்துவமே தவறு என்கிறார் இவர்.

‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்றார்கள் நம் முன்னோர்கள். இவர் உணவை எப்படி உண்ண வேண்டுமோ அப்படி உண்டால்தான் அது மருந்து’ என்கிறார்.

ஜெயா தொலைக்காட்சி, இலங்கையின் சக்தி தொலைக்காட்சி உட்பட பல நிலையங்கள் இவரை நேர்காணல் செய்திருக்கின்றன.
‘நாம் குடிக்கும் குடிநீரை கொதிக்க வைக்க வேண்டும் என்பது தவறு. சாதரன் தண்ணீரில் பல சத்துப் பொருட்களும் சில கிருமிகளும் உள்ளன. குடிநீரை கொதிக்க வைப்பதால் கிருமிகளோடு சத்துப் பொருட்களும் இல்லாமல் போகின்றன. ஒரு நாளைக்கு நாம் சுவாசிக்கும் சாதாரண காற்றில் பல இலட்சம் கிருமிகள் உள்ளே செல்கின்றன. ஆனால் அவை நம் உடலை பாதிப்பதில்லை. சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமிகள் நம் உடலை பாதிக்காத வகையில் நம் உடலே மருத்துவராக செயல்படுகையில் தண்ணீரை ஏன் கொதிக்க வைக்க வேண்டும்? தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும் என்றால் காற்றையும் கொதிக்க வைத்துத் தானே சுவாசிக்க வேண்டும்.’ என்ற தர்க்க ரீதியான வாதத்தை நம் முன்னே வைக்கிறார்.
பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்பில் விலங்கியல் (zoology) பாடத்தில் மதிப்பெண்களுக்காக படித்தோம். ஆனால் அது மதிப்பெண்கள் வாங்க மட்டுமே பயன்பட்டதே தவிர நம் உடலைப் பற்றிய அறிவை, நம் உடலில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவர் என்ற அறிவை நமக்கு தரவே இல்லை. ஏனெனில் இத்தனையும் தெரிந்தால், மாத்திரை மருந்துகள் விற்பனையாகாமல் போய்விடும் என்று பயந்து போய் அரசாங்கத்தை கைக்குள் போட்டுக் கொண்ட பணமுதலைகள் அதற்கு மேல் மருத்துவம் (M.B.B.S.,) சார்ந்து படிப்பவர்களுக்கே சொல்லித் தரவில்லை என்பதே உண்மை.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள் தான் என் நினைவிற்கு வருகின்றன.

‘பள்ளியில் கற்ற கல்வி
சொல்லிக் கொடுக்கவில்லை
வாழ்க்கையை எப்படி
வாழ்வது என்று...’

உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே என்றார் திருமந்திரத்தை எழுதிய திருமூலர். உடல் ஆரோக்கியமாக இருந்தால் உயிர் என்ற பறவை இந்த உடம்பெனும் கூட்டினுள் குடிகொள்ளும். இந்தக் கருத்தை வைத்தே நான் எழுதிய பிணம் (http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2011/09/blog-post_6352.html) என்ற கவிதையில் எழுதிய இரண்டு வரிகள்.

'உடலென்னும் கூடுவிட்டு உயிர்ப்பறவை பறக்குதடா!
உடலென்ன உறவென்ன எல்லாமே மறக்குதடா!!'

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது தமிழர்களின் பொன்மொழி. இது உடல்நலத்திற்காக சொல்லப்பட்டது. சுவர் என்பது இங்கு உடல்நலத்தைக் குறிக்கிறது.

திரு. பாஸ்கர் தன்னைப் பற்றி சொல்லிக் கொண்டு போகையில் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப தான் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக சொல்கிறார். அதற்கேற்ப தற்போது பல்வேறு உலக நாடுகளுக்குப் பயணமாகி மேடைகளில் பேசுகிறார். விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.

என்னைப் போலவே இந்த இழையைப் படிப்பவர்கள் மெத்தனமாக இருந்து விட வேண்டாம். உடனடியாக பார்க்கவும்.

இந்த இழையை என்னால் முடிந்த வரை பலருக்கும் அனுப்பியிருக்கிறேன். மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். காணொளிகளை பார்த்துக் கேட்டு விட்டு உங்கள் பதில்களைச் சொல்லுங்கள். உங்கள் உறவினர்கள், நண்பர்கள், குழந்தைகள், தாய்மார்கள், மூத்த குடிமக்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வரிசைக்கிரமமாக பார்த்தால் தான் பார்ப்பவர்களுக்கு கேட்பவர்களுக்கு புரியும் என்பதால் வரிசைக்கிரமமாக செவிவழி தொடு சிகிச்சை (Anatomic Theraphy) குறித்தான காணொளிகளுக்கான இணைய இணைப்புகளை இங்கு தொகுத்துத் தந்திருக்கிறேன்.

இணையத்தின் மூலம் வெகுநேரம் செலவு செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் Mozilla Firefox உலவியில் (Browser) Easy Youtube Video downloader என்ற கூடுதல் செயல்பாட்டு நிறுவியை (Additional Add on) நிறுவுவதன் (install) மூலம் இந்த காணொளிகளை தரவிறக்கம் (download) செய்து இணைய இணைப்பு இல்லாமல் பார்க்கலாம், கேட்கலாம். என்னால் காணொளிகளை பல மணிநேரம் அமர்ந்து பார்ப்பது கடினம். நான் அடிக்கடி பயணம் செய்பவன் என்று நினைப்பவர்கள் கேட்பொலி கோப்புகளாக (Audio files) தரவிறக்கம் செய்து கொண்டு உங்கள் அலைபேசியில் பாடல்கள் கேட்பது போலவே இதனையும் கேட்டுப் புரிந்து கொள்ளலாம்.

இவர் தன்னுடைய மருத்துவத்தின்மூலம் ஒரு ரூபாய் செலவில்லாமல் புற்றுநோய், சிறுநீரகக் கல் போன்றவற்றைக் குணப்படுத்தலாம் என்கிறார். காணொளிகளை பல முறை கேளுங்கள்.

உடலில் உள்ள உறுப்புகளில் உள்ள செல்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவில் இறந்து புதிய செல்கள் உருவாகும்போது ஐந்தாண்டுகளாக கண்ணில் குறைபாடு என்று சொல்வது தவறானது என்கிறார்.

தொண்ணூறு விழுக்காடு சிறுநீரகம் பழுதடைந்த ஒருவர் இவர் சொல்லும் வழிமுறையைப் பின்பற்றினால் ஒரு ரூபாய் செலவில்லாமல் அடுத்த நாற்பத்தெட்டு மணிநேரத்தில் மாற்றங்கள் தெரியும் என்கிறார்.

 இவர் சொல்லும் வழிமுறையைப் பின்பற்றினால் ஒரு ரூபாய் செலவில்லாமல் புற்றுநோய், கேன்சர், எய்ட்ஸ் முதலான பலவற்றை எளிதில் குணப்படுத்த முடியும் என்கிறார்.

வெளியிலிருந்து வராமல் (தீக்காயம், விபத்து, குண்டு பாய்தல், கத்தி பாய்தல் தவிர) உடலுக்குள்ளேயே வந்த நோய்களை இந்த வழிமுறைகளால் குணப்படுத்த முடியும் என்கிறார்.

இலாப நோக்கமில்லாமல், வியாபார நோக்கமில்லாமல் சமூக அக்கறையோடு ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்.

http://anatomictherapy.org/tamilbookdownload.html

-----------------------------------------------

http://www.anatomictherapy.org/ என்ற இணைய பக்கத்திற்கு சென்று இவரைப் பற்றிய தகவல்களை அறியலாம்.

இவருக்கான முகநூல் பக்கம் - https://www.facebook.com/pages/Healer-Baskar/184740001572861

Saturday, July 6, 2013

தமிழ்நாட்டுப் பேருந்துகளில் பகல் கொள்ளையடிக்கும் நடத்துநர்களும் அரசாங்கமும்

பிரபஞ்ச வாழ் தமிழர் தமிழச்சிகளுக்கு,

அடியேனின் வணக்கம்.

பணம் சம்பாதிக்கவும் நிம்மதியாக வாழவும் இந்த பிரபஞ்சம் முழுக்க பரவி வாழும் ஈழத் தமிழர்களே, தமிழ்நாட்டுத் தமிழர்களே தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களை அரசாங்கம் எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்று கேளுங்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் எப்படியெல்லாம் வாழ்வதற்கு அனுதினமும் அல்லல் படுகிறார்கள் என்று கேளுங்கள்.

கடந்த பதினைந்து நாட்களுக்கு முன் மதுரை இரயில் நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பரமக்குடி செல்ல பேருந்தில் தான் செல்ல வேண்டியிருந்தது.

மதுரை இரயில் நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்வதற்கு காத்திருந்தால் அனைத்துப் பேருந்துகளும் சொகுசுப் பெருந்துகளாக இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஐம்பது நியாய விலைப் பேருந்துகளுக்கு ஒரு சொகுசுப் பேருந்து என்ற நிலை தலைகீழாக மாறி தற்போது ஐம்பது சொகுசுப் பேருந்துகளுக்கு ஒரு நியாய விலைப் பேருந்து என்ற நிலை தான் தற்போது நிலவுகிறது. இந்த நிலை மதுரையில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகரங்களிலும் இதே நிலை தான்.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பரமக்குடி செல்வதற்கு தனியார் பேருந்துகள் அனைத்தும் அரசு நிர்ணயித்த ரூ. 34 வாங்கும்போது அரசுப் பேருந்துகளை இயக்கும் நடத்துநர் ஓட்டுனர்கள்  அனைவரும் பேருந்தின் முன்னாலும் பின்னாலும் 1 to 1, point to point, Nonstop, Express என்று எழுதப்பட்ட பதாகைகளை ஒட்டி அரசு நிர்ணயித்த ரூ. 34 வாங்காமல் அவர்கள் இஷ்டப்படி ரூ. 45 முதல் ரூ. 50 வரை வாங்குகின்றனர். இவர்களாகவே நிர்ணயித்து கொள்ளையடிக்கிரார்களா அல்லது அரசாங்கம் முடிவு செய்து கீழ் நடுத்தர (lower middle class) மற்றும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களின் உழைப்பை மறைமுகமாக உறிஞ்சுகின்றனரா என்று தெரியவில்லை.

ஒரு காலத்தில் இராமேஸ்வரத்திலிருந்து பரமக்குடி வழியே தாம்பரம் வரை செல்லும் பயணிகள் இரயிலில் கட்டணமாக ரூ. 50 வாங்கப்பட்டதாகத் தெரிகிறது. பயணிகள் இரயில் எல்லா நிலையங்களிலும் நின்று செல்வதால் கூடுதலாக ஒரு மணி நேரம் அதிகமாக பயண நேரமாகலாம் என்ற ஒரே ஒரு சங்கடம் தான். ஆனால், ஒரு சிலர் தங்களின் சுய லாபத்திற்காகவும் ஏழை மக்களின் உழைப்பைச் சுரண்டி கொள்ளையடிக்கவும் முடிவு செய்து பயணிகள் இரயில் அனைத்தையும் விரைவு இரயில் என்ற பெயரில் மறைமுகமாக கட்டணத்தை இரண்டு மடங்காக்கி தற்போது ரூ. 150 என நிர்ணயித்துள்ளனர்.

இதே யுக்தியைப் பயன்படுத்தி சொகுசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பேருந்துகளிலும் இரண்டு மடங்காக கட்டணம் வசூலிக்கப் படுகிறது.

எத்தனையோ கூலித் தொழிலாளிகள் தினம் கூலி வேலை செய்து வாங்கி செலவு சேமிப்பு என செய்ய முடியாமல் அநியாய கட்டணத்தை முனகியபடியே இப்படி ஏமாறுகின்றனர் என்பது தெரியவில்லை.

நான் சென்னையில் கடந்த ஏழு வருடங்களாக தங்கியிருந்தேன். கடந்த மூன்று வருடங்களாக சென்னைக்குள்ளும் சரி பரமக்குடிக்கு செல்வதற்கும் சரி வேறு வழியே இல்லாத சூழலைத் தவிர மற்ற சூழல்களில் பேருந்துகளைப் பயன்படுத்துவதை தவிர்த்தே வந்திருக்கிறேன். முடிந்தவரை மின்சார இரயிலோ அல்லது இரயிலோ தான் பயன்படுத்தியிருக்கிறேன்.

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பேருந்து கட்டணம் உயர்த்தப் பட்ட போது சென்னை மாநகரத் தந்தையாக திரு. சைதை துரைசாமி பதவியேற்ற கால கட்டம். முகநூல் வாயிலாக "ஏற்கனவே திமுக ஆட்சியில் பேருந்துகளை எல்லாம் சொகுசு என்று மாற்றி கொள்ளையடிக்கின்றனர். தற்போது அதிமுக ஆட்சியில் விலையுயர்வு என்ற பெயரில் கொள்ளையடிக்கின்றனர். சொகுசு என்ற பெயரில் சென்னை மாநகரத் தந்தையாக பொறுப்பேற்றிருக்கும் நீங்களும் கொள்ளையடிக்கப் போகிறீர்களா? இந்த நிலையை மாற்றி சாதாரணக் கட்டணப் பேருந்துகளை இயக்கப் போகிறீர்களா?" என்று கேட்டு விட்டு அப்போது நான் எழுதிய இரண்டு கவிதைகளின் இணைய இணைப்புகளை அனுப்பி வைத்திருந்தேன்.

பகல் கொள்ளை - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2011/10/blog-post_1166.html

பே(தா)ய்நாடு - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2011/10/blog-post_8183.html

அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில் பல மாவட்ட ஆட்சியாளர் பணியிடங்களுக்காக ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி என சமுதாய தொண்டாற்றுகிறார் என்ற சூழலில் தேர்தலில் அவரை மாநகரத் தந்தையாக வெற்றி பெற வைத்தார்கள் மக்கள். வெற்றி பெற்ற பிறகு கொள்ளையடித்து மக்களின் பணப் பையை வெள்ளையடிக்கும் வேலையை அதிமுக வோடு இவரும் விதிவிலக்கில்லாமல் செவ்வனே செய்கிறார் போலும். அரசியலுக்கு வருவதற்கு முன்பு வரை இருந்த மனித நேயமும் நேர்மை குணமும் அரசியலுக்கு வந்த பிறகு எப்படி தலைகீழாக மாறுகிறது என்பது தான் புரியவில்லை. இந்த இலக்கணத்திற்கு திரு சைதை துரைசாமியும் விதிவிலக்கல்ல போலும்.

அதிமுக வை விட்டால் திமுக, திமுக வை விட்டால் அதிமுக என்ற நிலையில் வாக்களித்து இரண்டில் எது வந்தாலும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த உழைப்பாளிகளின் பணப்பையில் இருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் கொள்ளையடிக்கும் வேலையை செவ்வனே செய்கின்றன.

விலைவாசியை கட்டுப்படுத்த ஜெயலலிதாவுக்கு திறமையில்லை. அண்டை மாநிலங்களிலிருந்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய திராணி இல்லை ஜெயலலிதாவுக்கு. ஆனால் இவையெல்லாம் வைத்து எதையாவது செய்து விட்டு ஒவ்வொரு ஆண்டும் முடிந்த பிறகும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் நாளிதழ்களுக்கும் பத்திரிகைகளுக்கும் பணத்தை கொடுத்து 'ஓராண்டு சாதனை, ஈராண்டு சாதனை' என்று மக்கள் படும் வேதனையைப் புரிந்து கொள்ளாமல் ஒரு ரூபாய்க்கு இட்லி, பத்து ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் என்று மறைமுகமாக மக்கள் அனைவரையும் கையேந்த வைத்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய வாக்கு வங்கியை பலப்படுத்த என்னென்ன செய்ய வேண்டுமோ அவையெல்லாம் செய்கிறார்.

இவர் ஆட்சியை விட்டு கீழிறங்கிய பிறகு வேறு ஒருவர் வந்தபிறகு 'அம்மா இட்லி, அம்மா தண்ணீர்' எல்லாவற்றையும் நிறுத்தி விடுவார். ஒரு ரூபாய்க்கு இட்லி, பத்து ரூபாய்க்கு தண்ணீர் என பழக்கப் பட்டவர்கள், அடிமையானவர்கள் அதன்பிறகு இன்னும் அதிகமாக அல்லல் படுவார்கள்.

இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் தமிழகம் தண்ணீர் கிடைக்காமல் பாலைவனமாக வாய்ப்பு உள்ளது. பிழைக்க வழி தேடியும் நிம்மதியான வாழ்க்கைக்கு வழி தேடியும் வெளிநாடுகளுக்கு புலம் பெயரும் ஈழத் தமிழர்களே, தமிழ்நாட்டுத் தமிழர்களும் உங்களைப் போலத்தான். இந்திய இனத் துவேசம் நிறைந்த ஆட்சியாளர்களாலும் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தமிழ்நாட்டு அரசியல் வியாபாரிகளாலும் அல்லல் படுகின்றனர். வேறு வழியில்லாமல் வெளிநாடுகளுக்குப் பிழைப்புத் தேடி வருகின்றனர்.

பணக்காரர்கள் வாழ்க்கையை பொழுது போக்காக வாழ்கின்றனர்.

ஏழைகள் வாழ்வதற்கு போராடுகிறார்கள். நடைபாதைகளில் வாழ்கிறார்கள்.

சென்னையில் இப்போதும் நடைபாதையிலும் பூட்டிய கடைகளின் வாசல்களில் வசிக்கும் நடைபாதைவாசிகளைப் பார்க்கலாம்.

மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கமும் அரசு அதிகாரிகளும் அரசியல் வியாபாரிகளும் சட்ட திட்டங்களும் மக்களுக்கு எதிராக இருக்கும் சூழலில் நமக்கென்ன, நமக்கென்ன என்று அனைவருமே ஒதுங்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய எண்ணம் செயல் வடிவம் பெறுவதற்கு தூண்டுகோலாக இருப்பவை பேச்சும் எழுத்தும் தான்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா பதவியேற்ற போது தினமலர் நாளிதழில் 'இலவசம் என்ற பெயரை விலையில்லா என்று மாற்றியதே ஜெயலலிதா ஆட்சியின் மிகப்பெரிய சாதனை' என்று மக்களை மூளைச் சலவை செய்யும் அளவிற்கு அப்பட்டமான பொய்யான செய்தியை வெளியிட்டிருந்தது. தமிழ்நாட்டு மக்களுக்கு ஜெயலலிதாவால் இழைக்கப்படும் அநீதிகளை வெளி உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய ஊடகங்கள் கத்தை கத்தையாக பணத்தை வாங்கிக் கொண்டு ஜால்ரா தட்டி நக்கிப் பிழைக்கும் வேலையை செவ்வனே செய்கின்றன. செய்து கொண்டிருக்கின்றன.

இந்தத் தாக்கத்தில் வேதனையோடு நான் எழுதிய ஒரு ஹைக்கூ

விலையில்லா இலவசங்கள்
கோடிகளில் கல்வி
அரசியல் வியாபாரிகள்

என்னுடைய சிறுவயதில் முனைவென்றி பள்ளிக்கூடத்தில் மனதார

'இந்தியா என் தாய்நாடு. இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறவா சகோதரர்கள்.....'

என்று சொன்ன அதே கள்ளம் கபடமில்லா உள்ளம் தான் ஓராண்டிற்கு முன்

'இந்தியன் என்றொரு இனமிங் கில்லை
இருந்தால் தமிழர்க் கதுவே தொல்லை'

என்று சிந்திக்க வைத்து எழுத வைத்தது.

சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது போல தமிழ்ந்நாட்டு மக்களாகிய நாம் வாக்கு என்ற மிகப் பெரிய ஆயுதத்தை பயன்படுத்த தெரியாமல் வாக்களித்து யார் வந்தாலும் 'என்னுடைய பணத்தைக் கொள்ளையடி, என்னை பிச்சையெடுக்க வை, விலையில்லா இலவசங்களைக் கொடு' என்று மறைமுகமாக கேட்டு ஆப்பைத் தேடிப் போய் அமர்ந்து கொள்கிறோம்.

அதே கள்ளம் கபடமில்லா உள்ளம் தான் தற்போது ஒரு புதிய உறுதிமொழியை பின்பற்ற வைத்திருக்கிறது. அந்த உறுதிமொழி இதுதான்.

'இனிமேல் என் தாய்நாடான தமிழ்நாட்டில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு வாக்களிக்க செல்வதில்லை அல்லது வாக்களிக்கச் சென்று என்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக வாக்களிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கும் சின்னத்தில் வாக்களித்து விட்டு வருவேன் என உறுதியளிக்கிறேன்.'

ஏற்கனவே பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்த நிலையில் பேருந்துகளில் சொகுசு என்ற பெயரில் மறைமுகமாக இன்னும் விலையை உயர்த்தி கொள்ளையடிப்பதற்காக எல்லாப் பேருந்துகளையும் சொகுசு என்று பெயர் மாற்றி (ஏற்கனவே பயணிகள் இரயிலை எல்லாம் விரைவு இரயிலாக மாற்றி பயணிகள் இரயிலே இல்லாத நிலையை உருவாக்கி கட்டணத்தை உயர்த்தியதைப் போலவே) நியாய விலைப் பெருந்துகளையே ஒழிக்கும் நடவடிக்கையில் அதிமுக அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்தப் பேருந்துக் கட்டணக் கொள்ளை குறித்து யாரும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்களா என எனக்குத் தெரியவில்லை.

தவறாமல் இந்த பதிவை அனைவரும் படிக்கவும். மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி. 

இவர் இல்லாத் தமிழ்நாடு

தன்னலம் கருதாமல், அரசியலில் பதவிக்கு ஆசைப்படாமல் வாழ்ந்த தலைவரையே 'ஜாதி வளர்த்த தலைவர்' என்று தூற்றும் இந்தத் தமிழ்ச் சமூகம் நன்றி மறந்த தமிழ்ச் சமூகம் தான்.

இவரைப் போன்ற நல்ல தலைவர்கள் கிடைக்கவில்லையே என்று ஏங்கும் என்னைப் போன்றவர்களுக்கு மத்தியில் இவரைத் தேர்தலில் தோற்கடித்த இந்த தமிழ்நாட்டுத் தமிழினம் நன்றி மறந்த இனம் தான்.

அவ்வப்போது நான் சந்திக்கும் நண்பர்களில் ஒரு சிலர் இவரைப் பற்றி 'சாதி வளர்த்த தலைவர், சாதி வளர்த்த முதல்வர்' என்று சொல்லுவார்கள். எனக்கு மனதிற்கு வருத்தமாகவே இருந்தது. அவ்வப்போது அந்த வார்த்தை என் மனதை வலிக்கச் செய்தது. அந்த வலி இன்று இந்தக் கவிதையைத் தந்திருக்கிறது.


யாரு இவரு – எந்த
ஊரு இவரு
விருதுநகரு – இந்த
ஊரு இவரு

விடுதலையும் பெற்றிடவே
பாடு பட்டாரு – அவரு
படிப்பைவிட்டு குடும்பம்விட்டு
சிறையைத் தொட்டாரு
(யாரு இவரு)

மதியஉணவு திட்டத்தினை
கொண்டு வந்தாரு – அவரு
மனிதமதை மதிப்பதற்குக்
கற்றுத் தந்தாரு
(யாரு இவரு)

குழந்தைகளின் கல்விக்காக
உதவி செஞ்சாரு – அவரு
வாழ்வினிலே அனுபவத்தை
மனதில் நெஞ்சாரு
(யாரு இவரு)

குழந்தைகளின் சிந்தனையை
செதுக்கி வச்சாரு – அவரு
அரசியலில் நேர்மைதனை
தினமும் தச்சாரு
(யாரு இவரு)

எந்தப் பள்ளிக்கூடத்தில
அவரும் கற்றாரு – அவரு
படிக்காத மேதையின்னு
பேரும் பெற்றாரு
(யாரு இவரு)

தாய்மொழியில் மேடைதனில்
பேசி வந்தாரு – அவரு
நாடுபல நம்உடையில்
சுற்றி வந்தாரு
(யாரு இவரு)

நாடு,மக்கள் நலம்பெறவே
வாழ்ந்து வந்தாரு – அவரு
தொண்டுசெய்ய வரந்தனையே
வாங்கி வந்தாரு
(யாரு இவரு)

தனக்கென்று திருமணமும்
செய்யாதவரே – தன்
கட்சிவளர்க்க மற்றவரை
வையாதவரே
(யாரு இவரு)

ஏறத்தாழ பத்தாண்டு
முதல்வர் ஆகினார் – இவரு
அரசரையே உருவாக்கும்
திறமை ஏகினார்
(யாரு இவரு)

மொழி வளரப் பாடுபட்ட
தலைவர் இவருதான் – புதுப்
பிரதமரையே பரிந்துரைத்த
இவரு பவருதான்
(யாரு இவரு)

தான்நினைத்த நேருமகளை
தலைவர் ஆக்கினார் – அவள்
யாரென்று இவரையேதான்
திருப்பித் தாக்கினாள்
(யாரு இவரு)

கருப்புநிறக் காந்தியென்று
போற்றி வந்தாங்க – அவங்க
தேர்தலிலே இவருக்குத்தான்
தோல்வி தந்தாங்க
(யாரு இவரு)

விளக்கையணை சொல்லிவிட்டு
படுத்து விட்டாரு – பிறகு
படுத்தவுடன் நிம்மதியாய்
உயிரை விட்டாரு
(யாரு இவரு)

தன்னலமே கருதாத
தங்கத் தேருதான் – அவரைக்
கேட்டாலே பாமரனும்
புகழும் பேருதான்
(யாரு இவரு)

முடிவுகளை எடுப்பதிலே
மன்னன் தானுங்க – அவரு
போலவொரு மனுசனுந்தான்
இன்று வேணுங்க
(யாரு இவரு)

இவர்போல மனுசங்களைப்
பெற்ற நாடுதான் – இன்று
இவரில்லாத் தமிழ்நாடு
ஊழல் காடுதான்
(யாரு இவரு)

Tuesday, July 2, 2013

அழகு இராட்சசி கவிதை நூலினைப் பற்றி பிரசுரித்த ஊடகங்கள்

என்னுடைய 'அழகு இராட்சசி' என்ற முதல் கவிதை நூலினைப் பற்றி விமர்சனங்கள், நூல் அறிமுகம் ஆகியவற்றை பிரசுரித்த வெற்றிநடை, தமிழ்நலக்கழகம், அருவி போன்ற ஊடகங்கங்களுக்கு என் நன்றி.




Thursday, June 6, 2013

குமுதம் (12-06-2013) இதழில் என்னுடைய 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' ஹைக்கூ நூலின் நூல் அறிமுகம்

குமுதம் (12-06-2013) இதழில் என்னுடைய 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' ஹைக்கூ நூலின் நூல் அறிமுகம் வெளியாகியுள்ளது.

குமுதம் இதழின் ஆசிரியர் குழுவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


Saturday, May 25, 2013

பிப்ரவரி 27 2013 அன்று வந்தவாசியில் நடந்த 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' நூல் அறிமுக விழா

முதலில் நான் கவிஞர் மு. முருகேஷ் ஐயா அவர்களைப் பற்றி சொல்லவேண்டும்.
“குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்” என்ற என்னுடைய இரண்டாவது கவிதைநூலிற்குஅணிந்துரை வேண்டி மு. முருகேஷ் ஐயாவின் முகவரிக்கு (சென்னை அஞ்சலக ஊழியரின் எடை சரிபார்ப்பிற்குப் பிறகு) ஐந்து ரூபாய் அஞ்சல்தலை ஒட்டி அனுப்பி வைத்தேன். வந்தவாசிக்கு என்னுடைய அஞ்சல் சென்று சேர்ந்தபோது அங்கிருந்த அஞ்சலக ஊழியர் பத்து ரூபாய் அஞ்சல்தலை ஒட்டவேண்டும். ஐந்து ரூபாய் அஞ்சல்தலை தான் ஒட்டப்பட்டுள்ளது என்று ஐயாவிடம் அபராதக் கட்டணம் வசூலித்து விட்டு என்னுடைய அஞ்சலை அவரிடம் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு தான் தெரிந்தது சென்னை அஞ்சலக ஊழியரின் கவனக்குறைவினால் தான் இந்த குளறுபடி நடந்திருக்கிறது என்று. ஐயாவும் பெருந்தன்மையோடு என்னுடைய அஞ்சலை ஏற்றுக் கொண்டார். அணிந்துரையை விரைவில் அனுப்பி வைத்தார்.

கடந்த பிப்ரவரி 27, 2013 அன்று சென்னையிலிருந்து கிளம்பி வந்தவாசிக்கு காலை 8.30 க்கு முன்னதாகவே சென்றடைந்தேன். மு. முருகேஷ் ஐயா அவர்கள் என்னை தன்னுடைய அகநி (அவருடைய மூன்று பெண் பிள்ளைகளின் முதல் எழுத்துகளின் சேர்க்கை.) இல்லம் அழைத்துச் சென்றார். அவருடைய இலக்கிய இணை (மனைவி = மனை+வி, மனையை ஆளக்கூடியவள் மனைவி அல்லது மனையாள். ஆனால், ஐயா எப்போதுமே தன்னுடைய காதல் மனைவியை இலக்கிய இணை என்றே அடையாளப்படுத்தி வருகிறார்.) கவிஞர் அ. வெண்ணிலா அவர்களை மீண்டும் சந்திக்கலாம் என்ற ஆர்வம் இருந்தது. (கடந்த 20  ஜனவரி அன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்த போது மு. முருகேஷ் – அ. வெண்ணிலா மற்றும் அவருடைய மூன்று பெண் பிள்ளைகளைச் சந்தித்தேன்.) அ. வெண்ணிலா அவர்கள் திரைப்படத்துறையில் வசனம் எழுதுவது தொடர்பாக சென்னைக்குச் சென்றிருப்பதாக முருகேஷ் ஐயா சொன்னார்.
அவருடைய அறையையும் அ. வெண்ணிலா அவர்களுடைய அறையையும் பார்த்தேன். அலமாரியில் ஏராளமான நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான விருதுகள், பரிசுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
அ. வெண்ணிலா அவர்களுடைய தாயாரையும் சந்தித்தேன். அவருடைய வீட்டில் காலை உணவு உண்டேன்.
காலை 10.30 க்குத் துவங்க வேண்டிய வெளியீடு அரை மணிநேரம் காலதாமதமாகத் துவங்கியது.
சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். கவிதை நூலிற்கு அணிந்துரை எழுதிய மூவரில் ஒருவரான கவிஞர் மு. முருகேஷ் ஐயா அவர்கள் நூலைப் பற்றி விவரித்தார். பெண்ணியம், தலித்தியம், ஈழவிடுதலை தொடர்பாகவும் பேசினார்.
என்னுடைய கவிதைநூலின் தலைப்பு குறித்து ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது, ‘குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்’ என்ற தலைப்பில் குழந்தைகள் என்ற வார்த்தை பன்மையிலும் பொம்மைகள் என்ற வார்த்தை பன்மையிலும் கடவுளும் என்று ஒருமையிலும் எழுதியிருக்கிறார் என்று குறிப்பிட்டுப் பேசினார்.
இன்னொரு சிறப்பு விருந்தினர் குழந்தைகளைப் பற்றி பேசினார். “குழந்தைகளுக்கு புரிதல் இருக்கும்போது நினைவாற்றல் பெருகும்” என்ற கருத்தை முன்வைத்து பேசினார்.
வந்தவாசி நூலகர் எனக்கு கதராடை அணிவித்து தமிழின் மீதும் என் தமிழ்த்தாயை கவிதைகளாக எழுதும் என்மீதும் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்.
சிறப்பு விருந்தினர்கள் பலரும் தங்களுடைய சிற்றுரைகளை ஆற்றினர்.
ஏற்புரையில் நான் பேசும்போது (வெளியீடு காலதாமதமாக ஆரம்பித்தபடியால் நிறைய பேச இயலாத சூழல்) முருகேஷ் ஐயா கேட்ட கேள்விக்கு பதிலளித்தேன். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வாக்கிற்கேற்ப கடவுள் ஒருவன் தான். எனவே பன்மை தேவையில்லை. எனவே இங்கு கடவுள் கடவுள்கள் ஒருமையா பன்மையா என்ற குளறுபடிக்கோ குழப்பத்திற்கோ வேலையில்லை என்ற கருத்தை சொன்னேன்.
எங்க வீட்டு விஷ்ணுப் பாப்பா பிறந்தபோது அவனுக்காக ஒரு சில ஹைக்கூ கவிதைகளை எழுதினேன். அதன்பிறகே இந்த கவிதைகளை குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும் என்று ஒரு நூலாக்கினால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது.
குழந்தைகளின் உள்ளங்களில் கடவுள் வாழ்கிறான்.
“குழந்தைகளுக்கு புரிதல் இருக்கும்போது நினைவாற்றல் பெருகும்” என்ற பேசிய சிறப்பு விருந்தினரின் கருத்தை உளவியல் ரீதியாக விளக்கினேன். பொதுவாக குழந்தைகள் ஒரு எழுத்தை ஆரம்பத்தில் எழுத முயற்சிப்பதில்லை வரைய முயற்சிக்கின்றன. ஒரு பொருளைப் பற்றிய எண்ணம் நம் மூளைக்குள் உதயமானவுடன் அந்தப் பொருள் படமாக மனதில் விரிகின்றது. உதாரணத்திற்கு மரம் பற்றி எண்ணுகிறோம் என்றால் முதலில் மரம் படமாக மனதில் விரிகின்றன. அதன் பிறகே வார்த்தைகள் வெளிவருகின்றன. எனவே குழந்தைகளுக்கு படங்கள் மூலமாக கதைகளை, கருத்துகளைச் சொல்லுங்கள் என்றேன். அதோடு என்னுடைய “உள்ளம் உருக்கிப் போனாயடா” (முழுக்க முழுக்க காதல்) என்ற நான்காவது கவிதைநூலின் முதல் கவிதையின் முதல் சில வரிகளை அங்கு பகிர்ந்து கொண்டேன்.
படங்களைப்
பார்த்துப் பார்த்தே
வார்த்தைகளை
வரையக் கற்றுக்கொள்ளும்
குழந்தைகளைப் போலவே
...................
...................
..........................
வெளியீடு முடிந்தவுடன் அவருடைய இரண்டு நூல்களை (ஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை – ஹைக்கூ குறித்தான கட்டுரை நூல், வரும்போலிருக்கிறது மழை – ஹைக்கூ நூல்) எனக்குப் பரிசளித்தார்.
விற்பனையான கவிதைநூல்களுக்கான பணத்தை என்னிடம் தந்தார். “குழந்தைகளுக்கான மாலைநேரப் பள்ளி தானே நடத்துகிறீர்கள். இந்தப் பணத்தை நான் ஏதாவதொரு ஆதரவில்லாத குழந்தைகள் இல்லம் தேடிச்சென்று குழந்தைகளுக்கு செய்வேன். அதற்கு நீங்களே உங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு இந்த தொகையை செலவிடுங்கள்” என்று சொல்லி அவரிடமே கொடுத்தேன்.
அனைவரும் மதிய உணவு உண்டோம். நான் அவரிடமிருந்து அன்போடு விடைபெற்றேன்.
கடந்த பிப்ரவரி 25ம் தேதி தினமணியிலும் (தமிழ்நாடு முழுவதும் வெளிவரும் தினமணி பதிப்பகங்கள்) கடந்த பிப்ரவரி 27ம் தேதி தினமணியிலும் (திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட தினமணி பதிப்பகங்கள்) நடைபெறப் போகும் கவிதை நூல் வெளியீடு தொடர்பான செய்திகள் வெளியாயின.  கடந்த மார்ச் 01 தினமணியில் (திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட தினமணி பதிப்பகங்கள்) நடைபெற்ற கவிதைநூல் வெளியீடு தொடர்பான செய்திகளையும் புகைப்படங்களையும் பிரசுரித்திருந்தார்கள்.







Thursday, May 9, 2013

பா.ம.க. ராமதாசுக்கு பிடிக்காத புத்தகம்... - அழகு ராட்சசி

கவிதை நூலின் பெயர்: அழகு ராட்சசி.

ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

விமர்சனம் எழுதியவர்: தமிழ்ச்செல்வன், மதுரை.

2016ல் தமிழகத்தின் முதல்வர் ராமதாஸ்தான். இந்த கனவு ராமதாஸ்க்கும் அவரது மகன் அன்புமணிக்கு இருக்கிறது. அதற்கு அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் சாதி . தருமபுரி,மரக்காணம் பகுதிகளில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது,( தன்சாதியை விட உயர்சாதிகளின் மீது தாக்குதல் நடத்துவதில்லையே ஏன்? இவர் மட்டுமல்ல எல்லா சாதிபயல்களும் அப்படிதான்).தமிழக முழுவதுமான சாதிய தலைவர்களை அழைத்து கூட்டம் போடுவது, காதலுக்கு எதிராக பேசுவது, 500 பேருந்துகள் எரிப்பு, வட மாவட்டங்களில் பதட்டம். என தற்போது ஊடகங்களுக்கு பரபரபான செய்தி களம் அவர்தான்.

அப்படிபட்டவருக்கு பிடிக்காத புத்தகம் ..... ''அழகு ராட்சசி'' - காதல் கவிதைகளின் தொகுப்பு. படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.காதல் குறித்து ஒவ்வொரு பக்கதிலும் தனது கவிதையை ரசனையோடு பதிவு செய்திருக்கிறார்.
படித்து முடித்ததும் இரண்டு விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்தது.ஒன்று இந்த புத்தகத்தை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் படிக்கவேண்டும். இரண்டு காதலிப்பவர்கள், காதலித்தவர்கள், இனி காதலிப்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.கவிதைகளில் சில...

நீ என்னை செல்லமாய் 
திட்ட வேண்டும்
என்பதற்காகவே
குறும்புகள் செய்யத் தோன்றுகிறது
உன்னிடம்...

நீ கண்ணாடி பார்த்து
உன்னழகை
சரிசெய்து கொள்கிறாய்
அனைவரும்
உன்னை பார்த்து
தங்களின் அழகை
சரி செய்து கொள்கிறார்கள்...

அழகு என்ற தலைப்பில்
கவிதை எழுதச்சொன்னார்கள்
உன்பெயரை மட்டும்
எழுதிக் கொடுத்துவிட்டு
வந்தேன்
முதல் பரிசு
கிடைத்தது எனக்கு...


நான்
காதல் முன்னேற்றக் கழகம்
என்று ஒரு
கட்சி ஆரம்பிக்கலாமென்று
இருக்கிறேன்
பொதுச்செயலாளர்
நீ தான்...
ஆனால்
ஒரு நிபந்தனை

கட்சியின்
காதல் பரப்பு செயலாளராக
நான் மட்டும் தான்
இருப்பேன்...

தொகுப்பு   முழுவதும் காதலை நிறுத்தி, நிதானமாக அனுபவித்து எழுதியிருக்கிறார் கவிஞர் முனைவென்றி நா.சுரேஷ்குமார். தினதந்தி,தினமலர்,மாகாகவி போன்ற தினசரிகள், சிற்றிதழ்களில் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. பதிப்பகத்தின் அழகான வடிவமைப்பு கவிதைகளுக்கு அழுகுக்கு அழகு சேர்த்திருக்கிறது. அட்டைபடமே அழகு ராட்சசி தான். என்ன நண்பர்களே ராமதாஸ்க்கு நிச்சயம் இந்த புத்தகம்  பிடிக்காது இல்லையா?. கவிதை தொகுப்பாளருக்கு ஒரு வேண்டுகோள் முடிந்தால் ஒரு பிரதியை ராமதாசுக்கு அனுப்பவும்.

Wednesday, February 6, 2013

"குவைத் தமிழோசை மாமன்றம் சார்பில் வித்யாசாகர் அண்ணாவுக்கு பன்னூல் பாவலர் விருது"

அனைவருக்கும் வணக்கம்,

கடந்த வெள்ளிக்கிழமையன்று (01-02-2013) குவைத் நாட்டில் கெய்த்தான் எனுமிடத்தில் "மூவேந்தர் அரங்கம் அமைத்து "குவைத் தமிழோசை கவிஞர் மன்றம்" மிகவும் பிரம்மாண்டமாக நடத்திய இன்பத் தமிழ் இசைவிழாவில் வித்யாசாகர் அண்ணாவுக்கு அவருடைய இலக்கியப் பணிகளைப் பாராட்டி  அவரை கௌரவிக்கும் வகையில் "பன்னூல் பாவலர்" விருது வழங்கி சிறப்பித்தது.  இம் மகிழ்வான செய்தியை உங்கள் அனைவரோடும் பகிர்நதுக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

வீட்டிலேயே அடைந்து கணவனே கதி என்றிருக்கும் மனைவிகளுக்கு அரணாக இருக்கும் கணவன்கள் நலம் பயக்கும் பூரிப்பை மகிழ்ச்சியை தரும் நலன்களாக விளங்க உதவும் நோக்கத்தோடு, முன்பே மன்றத்தில் சொல்லி அவருக்குக் கிடைக்கயிருந்த விருதினை அண்ணியின் கைகளால் வாங்கச்சொல்லி தன்னுடைய குடும்பத்தினரையும் குடும்ப உறுப்பினர்களையும் பெருமைப்படுத்தியிருக்கிறார்.

மேலும் ஏற்புரை ஏற்கையில் அவர் பேசியதை அறிந்து அண்ணாவிடம் தொடர்புகொண்டு என்ன பேசினீர்கள் என்றேன், அதற்கவர் மின்னஞ்சலில் என்னிடம் பகிர்ந்துக் கொண்டதை அப்படியே இங்கு உங்களின் பார்வைக்குத் தருகிறேன்:

"என்னம்மா  அன்று எனக்காக வாங்கிய விருதுகளை
 இன்று என் செல்லம்மா வாங்கினாள்
 நாளை இந்த சின்னம்மாளும் வாங்குவாள்...” என்று நம்பிக்கொள்கிறேன்..

இனமது தாழாது
உயிரதன் மதிப்பிலும் கூடி
உயர்ந்தவர் பலர்பேசும் மொழியதுவாகி
மழலைகள் கொஞ்சும் ரசமென்றோங்கி
கால வனப்பெய்தி வளமது சேர
வையகந்தன்னில் வெல்லும் தமிழ்; அங்கே நிற்கட்டுமிந்த தமிழோசையின் புகழுமென்று வேண்டி; எல்லோருக்குமெனது சிறந்தாழ்ந்த வணக்கத்தை முன்வைக்கிறேன்..

பொதுவாக ஒரு விருது என்பது அப்படைப்பாளியின் படைப்பினை மேலும் பலருக்கு அடையாளம் காட்டி, அதுவரை உழைத்த உழைப்பை அங்கீகரித்து' மேலும் வரும் பல வெற்றிக்கு வழிநல்கி' வென்று' வளர்ந்து' இச்சமூகத்திற்கு மேன்மைச் சேர்க்கவல்லது என்பதை இதற்குமுன் பெற்றுள்ள வேறுசில விருதுகளினால் அறிந்திருக்கிறேன்.

இருப்பினும் வெறும் விருதிற்கான நோக்கமல்ல எனது எழுத்தின் நோக்கம்; அது எனக்குக் கீழுள்ளோரை என்னளவிற்கேனும் உயர்த்துமொரு உயரிய பொறுப்புள்ள முயற்சியென்பதைச் சொல்வதில் நன்றிக்கடன் படுகிறேன்.

அதோடு, எனைவிடவும் சிறப்பாக எழுதும் எண்ணற்ற படைப்பாளிகள் பலர் இங்கிருக்க; அவர்கள் அனைவரின் சார்பாகவும் இவ்விருதை நான் பெறுவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

மாதந்தோறும் தவறாது கூட்டம் நடத்தி எமது தாய்மொழி தமிழது நிலைக்க தனது பங்கினையும் பெரும்பான்மையாக சிறப்பாக ஆற்றிவரும் இத்தமிழோசை மாமன்றத்தின்மூலம் இவ்விருதைப் பெறுவதில், அதிலும்; உங்கள் முன் பெறுவதில் பெருமையும் நிறைவுமடைந்து, நன்றியோடு விடைகொள்கிறேன்.

பெருமக்கள் இந்த விருதிற்கானக் காரணத்தை எனது எழுத்திற்குள் தேடுங்கள், நியாயமெனில் நற்கருத்துக்களைப் பிறரிடமும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். மனிதம் நிலைக்க; மொழியால் உணர்வால் நட்பால் இணைந்திருங்கள். எழுத்தினாலும் ஒரு நல்ல சமுதாயம் படைப்போம்.. " என்று பேசி விழாவை சிறப்பித்திருக்கிறார்.

கடந்த தீபாவளிக்கு முன் ‘குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்’ என்ற என்னுடைய இரண்டாவது கவிதைநூலிற்கு உடனடியாக அணிந்துரை தந்ததோடு குவைத்திலிருந்த படியே அலைபேசி ஊடாக கவிதைகளைப் பற்றி பேசி விமர்சித்து மகிழ்ச்சியுடன் பாராட்டவும் செய்தார்.

அவர் தீபாவளியின் போது சென்னை வந்திருகையில் அவரைச் சந்திக்க அவரின் இல்லத்திற்குச் சென்றிந்தேன். திருவள்ளூர் அருகிலுள்ள ஒரு கோவிலுக்கு அவரின் குடும்பத்தோடு சேர்ந்து செல்லும் வாய்ப்பும் எனக்கு ஏற்பட்டது. நிறைய பேசினோம், அவர் பேசியதிலிருந்து மனித உணர்வுகளை, மனித நேயத்தை மதிக்கும் நல்ல மனிதர் தென்பட்டார் என்றே எண்ணினேன். (அவர் அருகில் வந்து அவரோடு பழகிப் பார்த்தவர்களுக்கும், அவரின் படைப்புகளையும் பதிவுகளையும் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு நான் சொல்வது மிகையில்லை என்ற உண்மைப் புரியும்.)

தன்னுடைய சில நூல்களை எனக்குப் படிக்கக் கொடுத்ததோடு ‘அழகு ராட்சசி’ என்ற என்னுடைய முதல் நூலின் பத்துப் பிரதிகளையும் மொத்தமாக விலை கொடுத்து வாங்கி என்னை உற்சாகப்படுத்தவும் செய்தார்.

அவருடைய நூல்களின் முன்னுரைகளில் அவரின் வார்த்தைகளோடு ஒரு சில செய்திகளை நான் இங்கே சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

“ஒரு பொறியியல் மாணவனின் ஆண்டுக் கட்டணத் தொகை பன்னிரெண்டாயிரமும் நிராதரவாக நின்ற பெண்மணிக்கு பணவுதவி செய்து குவைத்திலிருந்து தாயகம் அனுப்பும் பொருட்டு தொகை எட்டாயிரமும் கொடுத்துதவ வாசகர்களாகிய நீங்களன்றி காரணம் வேறு யாருமல்ல என்பதை முழு நன்றியோடு தெரிவிக்கிறேன்.”

“கவிதைநூல் விற்பனையிலிருந்து கிடைத்த பணத்தில் ஈழத்து மக்களுக்கு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறைய குடும்பங்களுக்கு அரிசியும் பருப்பும் வாங்கித்தரப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை இங்கே நன்றியுடன் தெரிவிக்கிறேன்.”

இப்படி அவர் தனது புத்தகங்களில் சில பொதுச் சேவைப் பற்றிய தனது நன்றியுணர்வுகளைப் பகிர்ந்து, என்ன காரணம் அண்ணா என்று கேட்டதற்கு, இதைப் பார்க்கையில் இன்னும் பலருக்கு நாமும் இப்படி உதவவேண்டும் எனும் எண்ணம் வரலாமில்லையா அதனால் தான் அதையெல்லாம் புத்தகத்தில் பகிர்ந்துள்ளேன் என்றார்.

அதோடு, அவருடைய இல்லத்தில் அம்மாவோடு பேசிக் கொண்டிருந்தேன். கீழ்க்கண்டவாறு தன்னுடைய மனவுணர்வுகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார். (அவற்றில் எனக்கு நினைவில் நின்ற சிலவற்றை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்)

“இரவு முழுவதும் எழுதிக் கொண்டிருப்பார். எழுதியபடியே தூங்கிப் போவார்.” என்றும்

“திருச்சியில் ஒரே மேடையில் ஐந்து விருதுகளை வாங்க அவருக்குபதிலாக  நான்  சென்றபோது மிகச்சிறப்பாக என்னை வித்யாசாகரின் அம்மா என்றில்லாது தனது தாயைப்போல அவர்கள் வரவேற்று அன்பாகப் பார்த்துக்கொண்டனர் ” என்றும் என்னோடு அந்தம்மையார் தனது மகன் பற்றிய மகிழ்வினைப் பகிர்ந்து கொண்டார்.

அண்ணா நமக்குத் தெரிந்து பிறந்தநாள் பாடல், காதல் பாடல் மற்றும் சமூகச் சிந்தனைப் பாடல்களை எழுதியிருந்தாலும் விரைவில் திரைப்பட பாடலாசிரியராகவும் அறிமுகமாகவிருக்கிறார் என்பதையும் மகிழ்வோடு தெரிவிக்கிறேன். அவருடைய மனம்போலவே எல்லாம் அவருக்கு நல்லபடியாகவே நடக்கிறது.

இந்த இளம்வயதில் கவிதை, கட்டுரை, புதினம், நாவல், சிறுகதை என முப்பதுக்கும் மேல் நூல்களை இன்னும் வெளியிட்டுக் கொண்டிருக்கும் அண்ணாவுக்கு சகோதர அன்பிலும் சக படைப்பாளியாகவும் மனமகிழ்ச்சியோடு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

(எப்படியோ சோம்பேறித்தனம் காரணமாகவும் மற்ற சில வேலைகளினாலும் அண்ணாவைப் பற்றி ஒரு பதிவை அப்போதே இடவேண்டும் என்ற எண்ணம் இன்று இந்த இழையோடு சேர்த்து இப்போது தான் நிறைவேறியிருக்கிறது. தமிழோசை கவிஞர் சங்கத்திற்கு எனது நன்றி)




Wednesday, January 9, 2013

குரும்பை

நூலின் ஆசிரியர்: கவிஞர் வதிலைபிரபா

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

‘மகாகவி’ இதழின் ஆசிரியரும் உலகத்தமிழ் சிற்றிதழ்கள் சங்கத் தலைவரும் ஓவியா பதிப்பக உரிமையாளருமான கவிஞர் வதிலைபிரபா அவர்கள் எழுதிய சிறுகதை நூல் இது. இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் மனித உணர்வுகள் சார்ந்தும் மண்ணியம் சார்ந்தும் எழுதப்பட்டுள்ள விதமும் கதையை நகர்த்திக் கொண்டுசெல்கிற விதமும் படிப்பவர்கள் மனதை ஈர்ப்பதாகவும் மனதில் பதியும்படியாகவும் ஒவ்வொரு சிறுகதையையும் படித்து முடிக்கும்போதும் வாசகர்கள் மனதில் ஏதோவொரு தாக்கத்தையும் ஏக்கத்தையும் ஏற்படுத்தி விட்டுப் போகிறதாகவும் இருக்கிறது. குடும்ப உறவுகளை தொலைத்து நிற்கும் இன்றைய தமிழ்ச்சமூகத்தில் இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் குடும்ப உறவுகளின் அருமைபெருமைகளைச் சொல்லி நம் அனைவரையும் குடும்ப உறவுகளின் நிழலில் சற்றே இளைப்பாற வைக்கின்றன.

எய்ட்ஸ் நோயாளியான மாதவனின் மனநிலை, அவனின் மனைவி மகா அவனை வெறுக்காமல் சுட்டுவிரல் பிடித்து ஒரு குழந்தையை கூட்டிச் செல்கிறாள் என முத்தாய்ப்பாக முடித்த விதம் அருமை. நிர்கதியாய் நிற்கும்போது வாழ்க்கைத் துணையின் அருமையை, உண்மையான அன்பை, அரவணைப்பை உணர்வுப் பூர்வமாக ‘ஈர வேர்’ என்ற இந்தச் சிறுகதையில் கூறியிருக்கிறார்.

ஒரு காலத்தில் கவிதைகளின்மேல் ஆர்வங்கொண்டு சுகந்தன் என்ற புனைப்பெயர் கொண்ட கிருஷ்ணன் கவிதைகளை எழுதுவதும் அவன் நண்பன் விடும் சிகரெட் புகையைக் கூட கவிதை என்று வர்ணிக்கும் விதமும் இரசிக்கும்படி உள்ளது. அவன் கவிதை எழுதிக் கொண்டிருப்பதை பார்த்து அவன் அம்மா ‘ஏண்டா இதுவா உனக்கு சோறு போடப் போவுது வேற ஏதாவது வேலவேட்டி இருந்தாப் பாரு’ என்று சொல்வது உண்மை.   அந்தக் கிருஷ்ணன் காலப்போக்கில் கடற்கரையில் பஜ்ஜி விற்பவனாக வாழ்வதும் அவனுடைய நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்த கவிதை, அவனுடைய மனைவி மூலமாக பஜ்ஜி மடிக்கின்ற தாளாக பூச்செண்டு நாளிதழுக்குக் கிடைப்பதும் என சிறுகதையை மிகவும் விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறார் சிறுகதை நூலின் ஆசிரியர் கவிஞர் வதிலைபிரபா. அவனின் கவிதை முதல்முறையாய் பூச்செண்டு இதழில் வெளிவருவதும் இந்த விடயம் பற்றி தெரியாத கிருஷ்ணன் தொடர்ந்து பஜ்ஜி விற்கச் செல்வதாக முடிக்கும்போதுதான் இந்தச் சிறுகதையின் தலைப்பு ‘மாய மான்கள்’ என்பதன் அர்த்தம் மறைமுகமாகப் புரிய ஆரம்பிக்கிறது.

‘அம்மா சாமியான இடம்’ என்ற சிறுகதை பூமி வெப்பமயமாதலைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. மாதவனின் மகள் அவனிடம் வெப்பம்னா என்ன? சூடுன்னா என்ன? எனக் கேட்டுவிட்டு ‘பூமிக்கு யாருப்பா நெருப்பு வச்சது?’ எனக் கேட்பது வாசகர்களாகிய நம் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. ஒரு குழந்தைக் கதாப்பாத்திரத்தின் மூலம் இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்க வைத்ததன்மூலம் குழந்தையின் அறிவாற்றலையும் நம்முடைய சமூக அக்கறையின்மையையும் காட்டுகிறது. கையில் ஒரு செடியை வைத்துக் கொண்டு ‘வீட்டுக்கு வீடு மரம் வளர்த்தா பூமியில் வெப்பம் குறையுமாம். இனிமே அம்மா சாமியான இடம் முழுகாதுல’ எனக் கேட்கும்போது மழலையின் மூலம் கருணையையும் அன்பையும் வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.

எத்தனை வசதிகள் நிறைந்த வீடு என்றபோதும் தன்னுடைய பிள்ளைகள் தன்னுடன் இல்லையே என்ற ஏக்கத்தில் வயதான பெற்றோர் எதிர்பார்த்துக் காத்திருப்பது குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்துவதாக ‘வீடு’ என்ற சிறுகதை அமைந்திருக்கிறது.

தென்னந்தோப்பா? மகளின் திருமணமா? என்ற நிலை வரும்போது மகளின் திருமணம்தான் முக்கியம் என குரும்பை (தென்னங்குருத்து) விட்ட தென்னந்தோப்பையே விற்கும் நிலை என பெற்ற தகப்பனின் பொறுப்புணர்ச்சியைக் காட்டுகிறார். குத்தகைக்காரனுக்கெல்லாம் கருணை காட்டிய தன்னுடைய கிணறு தோப்பு தன்னிடம் கிடைத்தபிறகு கிணற்றுத் தண்ணீர் வற்றிப் போனதை நினைத்து சின்னச்சாமி கவுண்டர் மனம் வருந்துவதை வாசகனையும் வருத்தப்பட வைத்து காட்சிப் பதிவுகளாகியிருக்கிறார் ஆசிரியர்.

தன்னுடைய இருமகள்களையும் ஒன்றாகப் பார்க்கும் தாய்ப்பாசத்தை பட்டுச்சேலையின்மூலம் சொல்லிவிட்டுப் போகிறார் ஆசிரியர்.

தலைமுறை இடைவெளியின் காரணமாக கணவன் மனைவி இடையே அன்றாடம் நிகழும் ஊடலையும் அதன்பிறகு நிகழும் கூடலையும் ‘புரிந்துகொள் மனமே’ என்ற சிறுகதையின்மூலம் பக்குவமாக கதை சொல்லியிருக்கிறார்.

‘சிவகாமிப் பாட்டி’ என்ற சிறுகதையில் தாய்க்கும் மகனுக்கும் உள்ள நெகிழ்ச்சியான பாசஉறவை உணர்த்துகிறது.

பண்ணையாரிடம் வேலைபார்க்கும் சின்னச்சாமி கூலித்தொழிலாளியாக படும்துன்பத்தை ‘பிழைப்பு’ சிறுகதையின்மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த சிறுகதையை படித்த போது நான் சிறுவயதில் படித்த பேரறிஞர் அண்ணா எழுதிய செவ்வாழை என்ற சிறுகதையை நினைவுபடுத்துகிறது.
கட்டபஞ்சாயத்தின் மூலம் நீதியை புதைக்கும் காட்டுமிராண்டிகளின் நிலையை, நீதிமன்றத்தின்மூலம் நீதி கிடைக்கும் என்ற விடயத்தையை கதாப்பாத்திரங்களின் மூலம் உணர்த்தியிருக்கிறார்.

குரும்பை – மொத்தத்தில் மண்வாசனையுடன் குடும்ப உறவுகளைச் சொல்லும் பதிவுகள்.

Friday, December 28, 2012

குழந்தைகளைத் தேடும் கடவுள்

நூலின் ஆசிரியர்: கவிஞர் ச. கோபிநாத்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

இந்நூல் கவிஞரின் இரண்டாவது நூலாகும். இந்நூலில் பல்வேறு கருப்பொருள்களில் ஹைக்கூ கவிதைகளை செறிவுடன் படைத்துள்ளார்.

‘கோடுகள் நெளியும் கோலம்
நிமிர்ந்து நின்றது
அம்மாவின் கலைத்திறன்’

தாய்மார்களின் கலைத்திறனை, அவர்களின் உழைப்பை உணர்த்துகிறது.

தான் ஒரு ஆசிரியர் என்பதால் மனனக் கல்விமுறையைப் பற்றி காட்சிப் படுத்தியுள்ளார்.

தாய் தந்தையர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு மட்டுமே பெற்றோர்களாக இருக்க முடியும். ஆனால் ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் கோடான கோடிக் குழந்தைகளுக்கும் தாயாய்த் தந்தையாய் விளங்கக் கூடியவர்கள். அதனாலேயே பள்ளி ஆசிரியரான கவிஞரும் குழந்தைகளைப் பற்றிய கவிதைகளை யாத்துள்ளார்.

அறிவியல் சாதனங்களால் விளையும் தீமைகள், பூமி வறட்சியின் விளைவு, தனிக்குடித்தன வாழ்க்கையைப் பற்றி, நன்றி மறக்காத நாய்களைப் பற்றி என காட்சிகளை நம் கண்முன்னே தருகிறார் தன்னுடைய ஹைக்கூகளின் வழியே.

‘பசுவின் காம்பில்
இனிதே சுரக்கிறது
தாய்மை’

பசுவின் காம்பில் பால்தான் சுரக்கும் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். கவிஞரின் பார்வையில் தாய்மை புலப்படுகிறது.

காதலைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

‘நம்மை அறிந்தே
நாம் தொலையும் உலகம்
காதல்’

தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்திற்கும் வறட்சிக்கும்  இராமநாதபுரம் மாவட்டத்தையே உதாரணமாகச் சொல்லுவார்கள். இன்றும் தமிழகத்தின் பெரும்பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில்,

‘வீணாகவில்லை
குழாயில் ஒழுகும் நீர்
தாகம் தணிக்கும் பறவை’

என்ற ஹைக்கூ, பறவையைப் பாடுகிறது. இப்படி வீணாகிறதே தண்ணீர் என்று சொல்ல முற்படுபவர்கள் முன் தாகம் தணிக்கும் பறவையைக் கண்டு அப்படி சொல்லாமலேயே சென்று விடுவார்கள்.

ஜாதிகளைக் கண்டு கொதித்தெழுகிறார் இப்படி.

‘நாகரீக மனிதன்
நாற்றமெடுகிறது
ஜாதிய மணம்’

மூட நம்பிக்கைகளைப் பற்றி, காணாமல் போன தமிழர் விளையாட்டுகள் பற்றி என தன் ஹைக்கூ கவிதைகளால் வாசர்கள் மனம் நிறைக்கிறார்.

மொத்தத்தில், குழந்தைகளைத் தேடும் கடவுள் – சமூக நலனைத் தேடும் மனிதன்.

Thursday, December 27, 2012

அவளின்று நான் இறந்தேனென்று அர்த்தம்கொள் - நூல் விமர்சனம்

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

இன்றைய நடைமுறை உலகில் காதல் என்பது ஒரு பொழுதுபோக்காக, தற்காலிக போதைப்பொருளாக மலிந்து கிடப்பதற்குக் இன்றைய இளைஞர்களின் காதல் குறித்தான புரிதல் குறைபாடேயன்றி வேறொன்றுமில்லை.

ஒரே மேடையில் ஐந்து விருதுகளைத் தட்டிச் சென்றும் அந்தச் சுவடே தெரியாமல் இன்னும் இன்னும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் கவிஞர் எழுதிய முழுக்க முழுக்க காதல் உணர்வுகளாலேயே வடிக்கப்பட்ட கவிதைகள் இந்நூலில் உள்ளன.

இன்றைய காதல் எப்படி இருக்கிறது, இன்றைய இளைஞர்கள் சமுதாயம் காதலை எப்படிப் பார்க்கிறது? என ஆங்காங்கே சொல்லிக்கொண்டு போகிறார் கவிஞர்.

தெருவில் நடந்து செல்கையில் காதல், மௌனத்தில் காதல், பார்த்துப் பார்த்தே காதல், கைகுலுக்கிய இறுக்கத்தில் காதல், தனித்தனியே திருமணம் ஆகியும் தத்தமது குடும்பத்தினரை விடுத்து பார்வைகளால் காதல் என காதலை அணுஅணுவாய் இரசித்தும் ருசித்தும் நகர்த்திக் கொண்டு போகிறார் கவிஞர்.

‘வெளியிலிருந்து கதவை
உள்ளே திறக்கும்போதும்
உள்ளிருந்து கதவை
வெளியே திறக்கும்போதும்
இடித்துக் கொள்ளும்
யாரோ ஒருவரில்
என்றேனும் ஒருநாள்
நீயாக இருக்கமாட்டாயா?’

என்ற வரிகள் காதலின் வலியை ஏக்கத்தை உணர்த்துகிறது.

‘காலம் காலமாகத்தான்
காதலிக்கிறார்கள்
நீயும் நானும் மட்டும்
எப்படியோ
எதிரியாகிப் போனோம்
ஜாதிமதப் பேய்களுக்கு’

என்ற வரிகளில் ஜாதிக்கொடுமையின் அழுத்தம் தெரிகிறது.

‘பைத்தியமென்று
சொன்னாலும் சொல்வார்கள்
சொல்லட்டுமே,
இல்லாவிட்டாலென்ன
சேர்த்தாவைக்குமிந்த சமூகம்?’

என்ற வரிகளில் எள்ளல் சுவையோடு சமுதாயச் சாடலும் இருக்கிறது. உண்மைதான் கவிஞரே.

தன் காதலி சுவாசிக்கும் காற்றை சபித்துவிட்டு காற்றை தானாக மாறவேண்டும் என்று விரும்புகிறார் கவிஞர்.

ஐம்பெரும் பூதங்களோடு சேர்த்து ஆறாவது பூதமாக காதலைச் சேர்ப்பது புதுமையான உவமையாகத் தெரிகிறது கவிஞரே.

தன் காதலி மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கும் அழகை, அவள் கண்ணாடியை மேலுயர்த்தும்போதும் நெற்றியில் விழுந்த முடியை தள்ளிவிடும் அழகை என இரசனையோடு எழுதியிருக்கிறார்.

தனக்குத் திருமணமாகியும் திருமணமே செய்துகொள்ளாத தன்னுடைய காதலி தன்னைப்பார்க்க தன் வீட்டிற்கு வந்து தன் மனைவியோடும் குழந்தைகளும் அம்மாவோடும் பேசிவிட்டு வாசற்படி கடந்து போகையில் தன் கையில் திணித்துவிட்டுப் போன காகிதத்தில் மரணம் என்று எழுதி வைத்திருப்பதைப் பார்த்த நிமிடத்தில் தெருவில் மரணித்து வீழ்ந்து கிடக்கும் காதலி தனக்கு மரணத்தின் மீதியைத் தருவதாகச் சொல்வது வேதனையின் உச்சம்.

பூக்கடைக்கு வந்த தன் காதலி தான் விரும்பும் பூ விரும்பும் விலையில் வாங்குவதற்காக ஒவ்வொரு கதையாகக் கேட்டுக் கொண்டே செல்கிறார். கவிஞர் சொல்கிறார் சிறப்பாக.

‘நீ பேசும் விலையும்
கேட்கும் பூவும்
சற்று நேரத்திற்கு
கிடைக்காமல்தான் போகட்டுமே’

மனமொன்றிக் காதலித்தால் வானத்தையும் பூமியையும் ஒன்றாக்கி விடலாம் என்று காதலின் மேன்மையை அழகாக எடுத்துரைக்கிறார் கவிஞர்.

தன் எழுத்துக்களால் இக்கவிதை நூல்வழி காதலுக்கு அழகு சேர்த்த கவிஞர் வித்யாசாகர் அண்ணாவுக்கு என் நன்றியும் இதயங்கனிந்த வாழ்த்துகளும்.

மொத்தத்தில், அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம்கொள் – சமூக அக்கறையுடன் கூடிய காதல் கவிதைகளின் அணிவகுப்பு.

மீசை முறுக்கிய காடு

நூலின் ஆசிரியர்: கவிஞர் வாலிதாசன்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

பொதுவாகவே நான் ஒரு நூலைப் படிக்கும்போது ஒரு வாசகனுடைய மனநிலையிலேயே படிப்பதுண்டு.

‘மீசை முறுக்கிய காடு’ என்ற இந்தக் கவிதை நூலின் ஆசிரியர் கவிஞர் வாலிதாசன் அவர்கள் பச்சையப்பா கல்லூரியில் முதுகலை தமிழ் படிக்கும் மாணவர். இந்தக் கவிதைநூல் அவருடைய எத்தனையாவது கவிதைநூல் என்ற விபரங்கள் இல்லை. கடந்த 04-11-2012 க்கு முன்னரே இவரும் நானும் முகநூல் கணக்கில் நண்பர்களாக அறிமுகமாகியிருந்தாலும் 04-11-2012 அன்று தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் ஹைக்கூத் திருவிழாவில் நானும் அவரும் நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. உருவத்தைப் பொறுத்தவரை அவர் கரடுமுரடாகத் தெரிந்தாலும் அவருடைய இந்தக் கவிதைநூலின்வழி மண்ணை நேசிக்கக் கூடிய, இந்த சமூகத்தை நேசிக்கக்கூடிய, ஈழத்தை ஈழவிடுதலையை நேசிக்கக் கூடிய நல்ல மென்மையான மனிதர் தென்படுகிறார்.

இந்தக் கவிதைநூலிலிருந்து முழுக்க முழுக்க மண்வாசனை வீசிக் கொண்டிருக்கிறது. தற்போது என்னுடைய குடும்பம் வசிக்கும் முகவை மாவட்டத்தின் ஒரு சிற்றூரிலிருந்து வந்திருக்கிறார்.

மதுரை, இராமநாதபுர வட்டார வழக்கு வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.

தன்னுடைய முதல் கவிதை மூலமாக இலக்கியத்தின் இன்றைய நிலை குறித்து ஆதங்கப்படுகிறார். இன்றைய அவரச உலகில் தாய் தன் குழந்தையை பள்ளிக்கு வழியனுப்பும் அவசரத்தையும் அக்குழந்தையின் மனநிலையையும் ஒரு கவிதையில் படம்பிடித்துக் காட்டுகிறார். விறகு வெட்டி வீடுவீட்டுக்கு சாப்பாடு வாங்கிச் சாப்பிடும் ஒரு பெண்ணின் துன்பத்தை, மழைபெய்து ஒழுகும் ஓட்டைக் குடிசையில் வசிக்கும் ஏழைகளின் துன்பத்தை, குப்பையோடு குப்பையாய்க் கிடக்கும் ஒரு பிச்சைக்காரனின் அவலத்தை, ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ‘என்னை ஏன் பெத்தம்மா?’ என்று கேட்கும் தன் மகனிடம் ‘நீ பிறக்க ஏறாத கோவில் இல்ல, சுத்தாத சாமி இல்ல, போகாத மருத்துவர் இல்ல’ என்று அவனைத் தூக்கிக் கொஞ்சும் அம்மாவின் ஆனந்தக் கண்ணீரைப் பார்த்து அன்று முழுவதும் சாப்பிடாமல் இருந்த அந்த மகனின் பாசப்பிணைப்பை, வெளிநாடு சென்று திரும்பி மீண்டும் தன் தாயகத்திற்கே திரும்பிவிடும் பறவைகளின் மூலம் நாட்டுப்பற்றை, குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் தாய்மார்கள் ஓய்வின்றிச் செய்யும் வேலைகளைப் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் நாய் என முத்தாய்ப்பாய், மறந்துபோன கிராமத்தின் கிராம உறவுகளின் உன்னதங்களை உணர்ந்து ஏங்கும் ஏக்கம், குடிகாரனின் குடும்பத்தில் பிற குடும்ப உறுப்பினர்கள் படும் இன்னல்களை, வறுமையின் காரணமாகவும் குடும்பச் சூழல் காரணமாகவும் பள்ளிக்குச் சென்ற பெண் படிப்பை நிறுத்திவிட்டு பஞ்சாலைக்குச் செல்லும் நிலையை என கவிதைகள் நமக்கு மண்வாசனையை அள்ளித் தெளிக்கின்றன.

மலடிப்பட்டம் சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயை மூங்கிலாகவும் பிறந்த குழந்தையை புல்லாங்குழலாகவும் உருவகப் படுத்திய விதம் அருமை. இதுபோன்ற உவமைக் கவிதைகளை அதிகம் எழுதுங்கள் தோழர்.

‘புல்லாங்குழலை ஈன்ற
மூங்கில்க் காடானவள்
மூச்சடக்கிக் கிடந்தாள் மயக்கத்தில்’

அனைவர் மனதிலும் பதியும் வரிகள். இந்த ‘அறைக்குள் அடைபட்ட புல்லாங்குழல்’ தாய்மையின் சிறப்பை மேன்மையை உணர்த்துகிறது.

வறுமையில் வாடும் குடும்பத்தில் அடிக்கடிச் சண்டையிடும் தாய் தந்தைக்கு மத்தியில் பிள்ளைகள் படும் அல்லல்களோடு வீட்டின் மேல் உள்ள பாசப்பிணைப்பைக் கவிதையாக்கியிருக்கின்ற விதம் அருமை.

‘அதட்டி அதட்டியே
அம்மாக்களின் ஆயுட்காலம்
அருகியே போகிறது’

என்ற வரிகள் அப்பாக்களால் அதட்டப்படும் இன்றைய தாய்மார்களின் நிலையைக் காட்டுகிறது.

பெரும் வணிக நிறுவனங்களின் குள்ளநரித் தனத்தையும், பதவி நாற்காலியைப் பிடிக்க ஊழல்வாதிகள் செய்யும் துரோகங்களையும், வணிகமாகிப் போன கல்வியையும், கும்பகோணத் தீவிபத்தைப் பற்றி, மக்களாட்சியின் இழிநிலையைப் பற்றி, அதிகார வர்க்கங்கள் செய்யும் கொடுமைகளை என சமூக அவலங்களை நாடிபிடித்துக் காட்டுகிறார்.

‘மீசை முறுக்கிய காடு’ என்ற கவிதையில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் தாக்கத்தை சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

அணில் கடித்துதிர்த்த நாவல் பழங்களைப் பொறுக்கும் போது உள்ள காட்சிகளைக் கவிதைகள் மூலமாக கண்முன் நிறுத்துகிறார் கவிஞர்.

படிப்பறிவே இல்லாத தலைமுறையிலிருந்து பிறந்து தேர்வில் அடிக்கடி தோல்வி அடைந்து இறுதித் தேர்வில் தேர்ச்சியடையத் தூண்டுகோலாகும் படிப்பறிவில்லாத பாசத்தாயின் நெகிழ்ச்சி அருமை.

‘செல்வமில்லாதவனுக்கு
அவிழாத வேசிமகளின்
நூலாடை போல’

என்று அரசு அலுவலகக் கோப்புகளைப் பற்றியும் ஊழல், கையூட்டு ஆகியவற்றைப் பற்றியும் நரம்பு புடைக்கக் கவிதைகளின் ஊடாக உரக்கக் கத்தியிருக்கிறார் கவிஞர்.

ஏழைகளைப் படைக்காதே என இறைவனிடம் ஒரு கவிதையின் மூலம் கோரிக்கை வைக்கிறார் கவிஞர்.

சம்பாதிக்க வெளிநாடு போன ஒருவனின் மனைவி வறுமையின் பிடியில் வாடகை கொடுக்க முடியாமல் அந்த வீட்டு உரிமையாளரிடம் தன் கற்பைப் பறிகொடுத்த பிறகு வெளிநாட்டுப் பணம் வீட்டுக் கதவைத் தட்டுவது அவலத்தின் உச்சம்.

இன்னொரு கவிதையில்

‘ஏழைக்கேற்ற வாழ்வும்
வாழ்வுக்கேற்ற ஏழையும்
வெள்ளத்தனைய மலர்நீட்டம்போல்
ஜனித்துக்கொண்டே உலகில்’

என்ற வரிகள் வேதனைமிகுந்த நிதர்சன உவமை.

குழந்தையை அநாதையாய் விட்டுப்போன தாயைப் பற்றி, ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்கள் செய்த கொடுமைகளை, விபச்சாரியின் மனவலியை, வியர்வை சிந்தும் உழவனின் நிலையை தன்னுடைய கவிதைகளின் ஊடாக விளக்குகிறார் கவிஞர்.

ஜாதிக்கொடுமையைப் பற்றிய ஒரு கவிதையில்

‘கோவில்த் திருவிழாவின் பெயரில் கலவரம்’

என்ற வரியிலும்

‘எதையும் மாற்றி
எதிலும் மாறாத் தமிழன்
வாழ்வு என்று ஜீவிக்கப்போகிறது?’

என்ற வரிகளிலும் நம் தமிழ்த்தேசிய உறவுகளின் மீதான ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார் கவிஞர்.

வெற்றிலைப்பாக்கு உண்ணும் கிராமத்துப் பாட்டியின் செயல்களை இரசிக்கும் ஒரு குழந்தையாக மாறியிருக்கிறார் கவிஞர்.

வசிக்க இருப்பிடம் இன்றி மரநிழல் தேடியும் உணவு தேடியும் அலையும் கிராமத்துப் பாட்டியின் நிலையை, புயலின் கோரமுகத்தை, பாட்டிக்கும் அம்மாவுக்கும் உள்ள பாசப்பிணைப்பை, தனக்கென செங்கற்களால் வீடு கட்டிக் கொண்டிருக்கும் இயேசு சிங்களக் கழுகுகளுக்குப் பயந்து கட்டி முடிக்கப்படாத வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொள்ளும் நிலையை, தமிழ்நாடு என்ற நாட்டிற்குப் பக்கத்தில் உள்ள நாடான இந்தியாவில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுவதை, நாகரிக விவாகரத்துப் பற்றி, ஜாதிக்காரர்கள் அனைவரையும் தன்னுடைய உறவினர்களாக நினைப்பது தன்னுடைய மனவியாதி எனச் சொல்லும் வேதனை என கவிதைகளால் பிறரை இந்த சமூகத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறார்.

‘எவனாக இருப்பினும்’ என்ற தன்னுடைய கடைசிக் கவிதையில் ரௌத்திரம் கொள்ளும் ஒரு இளைஞன் தெரிகின்றான். நாகரிகத்தைச் சீர்குலைக்கும் பெண்களை, பெண்களை போதைப் பொருளாகப் பார்க்கும் ஆண்களை, நாட்டின் நலனைச் சீர்குலைக்கும் சக்திகளை என அனைவரையும் பார்த்துச் சொல்கிறார் இப்படி

‘நொக்காளி
எவனாக இருப்பினும்
கண்டந்துண்டமா
வெட்டுவேண்டா’

மீசை அரும்பிய வயதில் இந்தக் கவிதைநூல் ஊடாக மீசையை முறுக்கிக் கொண்டு கம்பீர நடைபோடுகிறார் கவிஞர் வாலிதாசன்.

இன்னும் நிறைய எழுதுங்கள் தோழர். உங்களுக்குள் அதிகப் படியான கோபம், சமுதாய அக்கறை, ஏதோவொரு நெருப்பு உள்ளது. நிறைய எழுதுங்கள். என்னுடைய அன்பின் கனிந்த வாழ்த்துகள்.

மொத்தத்தில், மீசை முறுக்கிய காடு – மண்வாசனை வீசும் கம்பீரம்.

Tuesday, December 25, 2012

'உள்ளம் உருக்கிப் போனாயடா' என்ற என்னுடைய நான்காவது கவிதை நூலிற்கு நான் எழுதிய என்னுரையிலிருந்து ஒரு பகுதி

பொதுவாகவே கவிஞர்களும் விஞ்ஞானிகளும் மிகவும் உணர்வுப்பூர்வமாகமானவர்களாக, மென்மையானவர்களாக இருப்பார்கள் என்பது உளவியலாளர்களின் கருத்து. அந்த மென்மையின், அன்பின் ஆழத்தைக் கண்டறிவது என்பது மிகமிகக் கடினம்.  


கடந்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அன்பான சகோதரி எனக்கு அறிமுகமானாள். அந்த அன்பு என்மேல் அக்கறையான சகோதரப் பாசம். ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அந்தப் புகைவண்டி நிலைய நடைமேடைப் படிகளில் அவள் தான் நேசித்த அந்த நடத்துநரைப் பற்றி, அவர் இவளிடம் தன்னுடைய திருமண அழைப்பிதழைத் தந்தது, தன்னுடைய காதலைச் சொல்லமுடியாமலேயே தோற்றுப்போனதை நினைத்து இரவு போர்வைக்குள் அழுதது, தன்னுடைய காதலனின் திருமண நாளைக் கூட மறக்காதது, சொல்லும்போதே அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் அவளின் முகம், அவள் தலைகோதிவிட்டபடி ‘அழாதே அக்கா’ என்று நான் சொன்ன வார்த்தைகள், அந்த சில நிமிடங்களில் எனக்குள்ளும் எழுந்த சகோதரப் பாசத்தையும் தாண்டிய தாய்மை உணர்வு இவை அனைத்தும் பத்திரமாய் என் உயிரின் ஆழத்தில் புதைந்திருக்கின்றன. 


அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் இருந்த அந்த சகோதரியின் முகம் இன்னும் என் கண்களிலேயே நிழலாடிக் கொண்டிருக்கிறது. அந்த நடத்துநர் அத்தான் எப்படி இருப்பார்? கறுப்பாக இருப்பாரா? சிவப்பாக இருப்பாரா? ஒல்லியாக இருப்பாரா? குண்டாக இருப்பாரா? குள்ளமாக இருப்பாரா? உயரமாக இருப்பாரா? அவரிடம் நான் பேசவேண்டும் எனப் பலவாறு ஒரு குழந்தையைப் போல் அவரைப் பற்றி கற்பனையில் ஒரு உருவகம் கொடுத்துப் பார்த்திருக்கிறேன். 


தன்னுடைய தோழிகள், உறவினர்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத இந்த விடயத்தைப் பற்றி அவள் என்னிடம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், சூழ்நிலையில் சொல்லியதின் பின்னணியில் என்மேல் வைத்த சகோதரப்பாசம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. என்மேல் அக்கறையுடன் இருந்த ஒரு அன்பு தெய்வம் இப்படிப்பட்ட சூழ்நிலையைத் தாங்கிக் கொண்டிருக்கிறாள் என்ற உண்மையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் பல இரவுகள் தவித்திருக்கிறேன். பல இரவுகள் யாருக்கும் தெரியாமல் கதறி அழுதிருக்கிறேன். பல நடுநிசிகளில் திடீரென தூக்கத்திலிருந்து பதறி எழுந்திருக்கிறேன். பல பயண நேரங்களில் ஜன்னலை வெறித்துப் பார்த்தபடியே கண்ணீர்த்துளிகள் கன்னம்வழி வழிந்து நிற்க மௌனமாக மனதிற்குள்ளேயே அழுதிருக்கிறேன்.


ஒவ்வொரு முறையும் அந்த புகைவண்டி நிலையம் வழியே நான் பயணம் செய்யும் புகைவண்டி நிற்கும்போது அந்த புகைவண்டி நிலைய நடைமேடைப் படிகளைப் பார்க்க நேர்ந்தால் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாதபடி பழைய நினைவுகளின் வலியும் வேதனையும் பிறக்கும்.

மேற்சொன்ன அந்தச் சகோதரியின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பத்தின் தாக்கமே நான் எழுதிய ‘அவள் உயிர் அழுகிறது’ என்ற கவிதை. இதே சம்பவத்தைச் சுமந்த நினைவின் தாக்கமே ‘உள்ளம் உருக்கிப் போனாயடா’ என்ற இந்தக் கவிதைநூல்.


என்னையும் என்னுடைய குட்டிப்பாப்பாவையும் சேர்த்து வைத்துப் பார்க்க உள்ளூர ஆசைப்பட்டவள் தெய்வீகமானவள் அந்த அக்கா. என்மேல் அன்பாக இருந்த இவளைப் போன்ற சிலரைப் பற்றி அவர்கள் பெயரிலேயே நான் கவிதைகள் எழுதியபோது ‘யாரையும்பற்றி யாருடைய குணாதிசயங்களைப் பற்றி கவிதைகள் எழுதாதப்பா, சுத்தி விட்டுடும்.’ என்று என்மேல்அதீத அக்கறைப்பட்டவள். அந்த அன்பு தெய்வம் ஒரு பிரபலமான தனியார் நிறுவனத்தில் வேலையில் இருப்பதாகவும், சில வருடங்களுக்கு முன் அவளுக்குத் திருமணம் நடந்ததாகவும் கேள்விப்பட்டேன். 


‘சுத்தி விட்டுடும்’ என்று அவள் சொன்ன வார்த்தைகள் இன்னும் பத்திரமாய் அப்படியே என் நினைவில் நிற்கிறது. நான் கவிதைகள் எழுதாவிட்டால் மனநோயாளியாக மாறியிருந்திருப்பேன். 


அந்த சகோதரி எங்கிருந்தாலும் நலமுடன் வாழட்டும். நீடூழி வாழட்டும். 

என்னுடைய வாழ்நாளின் ஒவ்வொரு வாழ்வியல் நிகழ்வுகளில் இருந்தும் அனுபவங்களில் இருந்தும் நான் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக உணர்ந்து கொண்ட உண்மை இதுதான் ‘அன்பே கடவுள்’.

Sunday, December 23, 2012

சேவல்

அதிகாலையில் கூவும் சேவலை
கொன்று தின்று
தூங்கும் மனிதனின்
வயிற்றுக்குள் இருந்தபடியே
சேவல்
சத்தமின்றி எழுப்புகிறது
உயிரியல் கடிகாரமாய் மாறி...

Monday, December 17, 2012

பாரதியே மீண்டும் வா!

ஒரு வாரத்திற்கு முன்பு என்னுடைய வீட்டு முகவரிக்கு இலக்கியச்சோலை மாத இதழிலிருந்து அஞ்சலட்டையில் அழைப்பு வந்திருந்ததாக என் தந்தை தெரியப்படுத்தினார். அந்த அழைப்புக் கடிதத்தில் இலக்கியச்சோலை ஹைக்கூ இதழில் என்னுடைய ஹைக்கூ பிரசுரமாகியிருப்பதாகவும் 16-12-2012 அன்று சென்னை திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் கலைநிகழ்ச்சியில் பரிசு வழங்கப்படுவதாகவும் தெரியப்படுத்தியிருந்தது.

அதன் அடிப்படையில் 16-12-2012 ஞாயிறு அன்று மாலை 4.15 மணிக்கு சென்றேன். கவியரங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கிருந்த நண்பர் ஒருவரிடம் அவருடைய கையில் இருந்த அழைப்பிதழைப் பார்த்தவுடன்தான் நிகழ்ச்சிநிரல் அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.

நானும் கவிதை எழுதி வாசிக்கலாம் என்ற ஆவல் எழுந்தது. வெள்ளைத்தாள் இல்லை. அப்போது ஒரு அன்பர் துண்டுப்பிரசுரம் செய்தபடி ஒரு தாளைக் கொடுத்தபடி சென்றார். அந்தத் தாளின் பின்புறம் முழுவதும் இடமிருந்தது. இரண்டாக மடித்துக் கொண்டு அவர்கள் கவிபாடச் சொல்லியிருந்த 'பாரதியே மீண்டும் வா' என்ற தலைப்பில் இரண்டு முறை எழுதினேன். கவியரங்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு நாட்டிய நிகழ்ச்சி, நூல்கள் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அங்கிருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் நான் எழுதிய கவிதையின் ஒரு பிரதியைக் கொடுத்தேன். கவிபாட அழைப்பதாக உறுதியளித்தனர். கடைசிக் கவிஞனாக  நான் அந்த மேடையில் வாசித்தக் கவிதை இதுதான்.


பாரதியே வா பாரினிலிங்கு – உன்
பாட்டினிலுண்டு அக்னிக்கங்கு – இந்தப்
பாரதம் மூழ்குது மதுவினிலிங்கு – இந்தப்
பூமியை மாற்றிடப் பாட்டெழுதிங்கு

ஆசையினாலே அழியுது பூமி – நீ
ஆயுதமேந்தாக் கவிதைச்சாமி – இந்தக்
காசையே உள்ளம் விரும்புது பூமி – நீ
காசுக்கு எழுதலக் கலியுகச்சாமி

கவிதையினாலே வளருது மொழியே – உன்
கவிதைகள் முழுதும் வாழ்விற்கொளியே – இந்தப்
புவிதனில் பாரதம் ஊழலின் ஊற்று – உன்
புலமையினாலே அறிவினை ஊட்டு

மாண்டா போனாய் பாரதிநீயே – தமிழ்
ஆண்ட புலவன் பாரதிநீயே – என்
வேண்டுதல் கேட்டே வருவாய் நீயே – நீ
வெடிப்பாய்ப் பிறப்பாய்க் கவிதைகளூடே

Monday, November 26, 2012

இந்த வருட தீபாவளி

எத்தனையோ சோகங்கள்
மறந்து திரியும்
இனிப்பான தருணத்தில்
இனிக்கவில்லை
இந்த வருட தீபாவளி

பலப்பல பட்டாசுகள் வெடித்தும்
விதவிதமாய் பலகாரங்கள் உண்டும்
ஜொலிஜொலிப்பாய் பட்டாடைகள் அணிந்தும்
இனிக்கவில்லை
இந்த வருட தீபாவளி

உறவுகள் கூடி மகிழ்ந்தபோதும்
பிறந்த மண்ணை முத்தமிட்ட போதும்
இனிக்கவில்லை
இந்த வருட தீபாவளி

வெடித்த பாட்டாசுகளின்
கரிநாற்றம் மூக்கைத் துளைத்து
வெடித்துச் சிதறிய
பிஞ்சுகளின் நினைவுகள்
மூளையைக் கீறி
கன்னம்வழி கண்ணீர் வழிய...
இனிக்கவில்லை
இந்த வருட தீபாவளி

நம்தமிழ் உறவுகள்தேடி
கடல்கடந்து ஈழம்தொட்டு
கதறியழும் நினைவுகளாய்...
இனிக்கவில்லை
இந்த வருட தீபாவளி

பால்ய நண்பர்கள்
பலரும் சந்தித்து விளையாடி
ஒருகோடி ஆனந்தம் கிடைத்தும்
இனிக்கவில்லை
இந்த வருட தீபாவளி

என் முகம்பார்த்து
பொக்கைவாய் காட்டிச் சிரிக்கும்
எங்கள் வீட்டு மழலையின்
மலர்ந்த முகம்பார்த்து
இனிக்கத்தான் செய்தது
இந்த வருட தீபாவளி

Friday, November 9, 2012

அழகு ராட்சசி கவிதைநூலுக்கு கவிஞர் வாலிதாசன் எழுதிய நூல் விமர்சனம்.

கவிதை நூலின் பெயர்: அழகு ராட்சசி.

ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

விமர்சனம் எழுதியவர்: முகவை வாலிதாசன்

னக்கு 4.11.12 அன்று நடைபெற்ற ஹைக்கூத்திருவிழாவில் முனைவென்றி நா.சுரேஷ்குமார் என்ற தோழர் அழகுராட்சசி என்கிற காதல் கவிதை நூலை என்கையில் திணித்தார் மறுபதிலிக்கு நானும் என் நூலைத்திணித்தேன். இன்று (08-11-2012) காலையில் சுமார் 3மணிநேரத்தில் படித்து முடித்தேன், கவிதைகள் அனைத்தும் காதல் மாளிகையை வார்த்தை கற்களால் கட்டி எழுப்பி இருக்கிறார் கவிஞர். பேச்சு வழக்குச் சொல்லை பயன்படுத்திருப்பது எனக்கு நெருக்கமாக்கியது. நூல்
பற்றி அவர் எழுதியிருக்கிற உவமம் அசைக்கிறது இதயத்தை.

"அவள் எங்களை அணிந்து கொள்ள மறுக்கிறாள் என உன் மேல் புகார் செய்தன உன் சிறுவயதாடைகள், அவள் பெரிய குழந்தை ஆகிவிட்டாள் அவளால் உங்களை அணிந்து கொள்ள முடியாது என்றேன் அவ்வளவுதான் கன்னத்தில் கைவைத்தபடி கதறி அழ ஆரம்பித்துவிட்டன உன் சிறு வயது ஆடைகள் அனைத்தும்." என்று கவிஞரின் கவித்துவம் பார்வை அழகியலாய் பேசிக்கொண்டு நீள்கிறது கவிதை நூல் எங்கும், "தங்களின் உடல் அங்கங்களை உடைநாகரீகம் என்கிற பெயரில் கடைவிரித்துக்காட்டும் பெண்கள் வாழும் நாட்டில் உன் அழகையெல்லாம் மறைப்பதற்காகவே சேலை சுடிதார் அணிந்து வருகிறாய் நீ" கவிதையில் சமூக அக்கறை மெலிதாய் தெரிகிறது. இப்படிச்செய்த கவிஞர் "அனைத்து வண்ணங்களாலும் குழைத்து செய்யப்பட்ட வர்ணஜாலம் நீ "என்கிறார். வண்ணங்கள் கூட்டுக்கலவை கருப்பல்லவா? அறியாமல் செய்கிறாரோ என்னவோ. படைப்புகளில் பாசத்த கொட்டிருக்கார், வரும்காலங்களில் நூல்களின் சாரம் சமூகச்சிந்தனைகுறித்திருக்க அடியேனின் வாழ்த்துகள்

Wednesday, November 7, 2012

பிள்ளையார் சதூர்த்தி

பல்லக்கிலும் தேரிலும்
மாட்டு வண்டிகளிலும்
ஊர்வலம் போகின்றன
சிறிதும் பெரிதுமாய்
பிள்ளையார் சிலைகள்

கோஷங்கள்
முழக்கங்கள் இட்டபடி
பக்தர்கள்

கோடிகளில் கடன்வாங்கிவிட்டு
கட்டமுடியவில்லையென
பல்லிளிக்கும் புறம்போக்கிற்கு
பல்லக்குத் தூக்குகின்றன
ஊழலில் திளைத்த எலிகள்

விலையேற்றி விலையேற்றி
வாழ்வுரிமையை
கேள்விக்குறியாக்கும்
பெருச்சாளிகளுக்கு
விருப்பமில்லை
ஏழைகளைப் பற்றி சிந்திக்க...

ஊழல் செய்த
பெருச்சாளிகள் அனைத்துமே
சிறையில் சுகபோகமாய்
இருந்துவிட்டு
வெளியே வருகின்றன
தியாகிகள் போல்...

பெருச்சாளிகள் செய்த
கோடிகோடி ஊழல்களை
அடிக்கடி கரைத்துவிடுகின்றன
ஆட்டுமந்தைகள்
நினைவாற்றல் குறைபாடுள்ள
மனக்கடல்களில்...
ஆண்டுக்கொருமுறை
பிள்ளையாரை
கடலில் கரைப்பதுபோல...

சுயநினைவிற்கு வந்தவனாய்
பிள்ளையாரையும் பல்லக்கையும்
வெறித்த கண்களால் பார்த்தபடி
நிற்கிறான்
அந்த நடைபாதைவாசி

இன்னுமா இருக்கிறது காதல்?

பழங்காலந்தொட்டே நம் தமிழ்ச் சமூக இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் மற்ற மொழி இலக்கியங்களிலும் காதலின் பூரணத்துவத்தை பார்த்துப் படித்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக கவிதைகளில் காதலைப் பாடாத கவிஞர்கள் இருந்ததில்லை. தன்னுடைய காதலியைப் பற்றி கவிதைகள் எழுதத் துவங்கி மாபெரும் கவிஞர்கள் ஆனவர்களையும் நாம் அறிந்திருக்கிறோம்.



இல்லற வாழ்க்கையை இனிமையாக்குவதே காதல் தான். பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து கொள்பவர்கள்  காதலை தனியே செய்ய வேண்டும் என்று இல்லாமல் தன்னுடைய வாழ்க்கைத் துணையை நேசிக்கின்றனர். இல்லற வாழ்க்கையோடு காதலை இணைத்துக்கொண்டு போகின்றனர்.



இன்றைய சூழலில் காதல் எந்த விதமான நிலையில் உள்ளது என்று தேடிப்பார்த்தோமானால் வருத்தப்பட வேண்டியிருக்கிறது.



காதலின் மேன்மையைப் போற்ற, காதலின் பூரணத்துவத்தை அடைய அதன் மேன்மையைப் பற்றிய இன்றைய இளைய சமுதாயத்தினரின் புரிந்துணர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது.



உண்மையான அன்பிற்கு இந்தப் பிரபஞ்சத்தையே கட்டிப்போடும் ஆற்றல் இருக்கிறது. மனித உணர்வுகள் அனைத்துமே அன்பின் வெவ்வேறு பரிமாணங்கள் தான். காதலும் அன்பின் ஒருவகைப் பரிணாமமே.



நட்புடன் பழகும் ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே கூட காதல் வரலாம். காதல் தன்னிடம் உள்ள மென்மையான மனதினை தானே உண்மையாக உணர வைக்கிறது. காதல் செய்பவர்களைப் பொறுத்து காதலின் மேன்மை, உன்னதம் வேறுபடுகிறது.



வயதான தாத்தா பாட்டி கூட உண்மையாக காதலிப்பதைப் பார்க்கலாம்.



“கடைக்கண் பார்வைதனை கன்னியர்தம் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்”



என்றான் பாரதிதாசன்.



“காதலினால் மானுடர்க்கு கவிதை யுண்டாம்.

கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்”



என்றான் பாரதி.



நின்று கதைப்பதற்கு நேரமற்ற இன்றைய நவீன யுகத்தில் காதல் அரிதான ஒன்றாகிவிட்டது. அடிப்படையில் ஒரு மனிதனிடம் அழகியல் சிந்தனைகளையும், கற்பனைகளையும் உருவாக்கி அவனைக் கவிஞனாக்குவது காதல் தான். காதல் வந்த பின் உலகமே அழகாகிவிடுகிறது.



காதல் சாதிமதம் பார்க்காது. இன்றைய நடைமுறை உலகில் காதலர்கள் ஜாதி, மதம், இனம், மொழி கடந்து காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் நம்முடைய வருங்காலச் சந்ததிகள் சாதி, மத பேதமின்றி மனிதநேயம் போற்றும் மனிதர்களாக வாழ்வார்கள்.



கடற்கரை, திரையரங்குகள் போன்றவற்றிற்கு சென்றால்தான் காதலை வாழ வைக்க முடியும் என்றில்லை. எத்தனை வருடங்கள் ஆனாலும் தன்னுடைய துணையையே நினைத்துக் கொண்டு வாழும் உன்னத உயிர்கள் இம்மண்ணில் வாழும்வரை காதலின் மகோன்னதம் குறையாது.



மனிதர்கள் மட்டுந்தான் என்றில்லாமல் விலங்குகள், பறவைகள் என எல்லா உயிரினங்களும் காதலிக்கின்றன. காதலின் மேன்மையைப் பறைசாற்றுகின்றன.



உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மஹால் காதலின் அடையாளமாக இன்றளவும் விளங்குகிறது. தேவதாஸ் – பார்வதி, அம்பிகாவதி – அமராவதி, ரோமியோ – ஜூலியட் என வரற்றுப் புகழ்பெற்ற காதலர்கள் எண்ணிலடங்காதவர்கள்.



இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அன்பு நிறைந்து வழிய வேண்டுமெனில் காதல் செய்யுங்கள். காதலர்களைப் போற்றுங்கள்.



இன்றைய நடைமுறை உலகில் எத்தனையோ கொடுமைகள் காதலின்பெயரில் நடந்தாலும், இன்னும் உண்மையாய் வாழத்தான் செய்கிறது காதல்.


இக்கட்டுரை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. பண்புடன் (இணைய இதழ்) - 01-10-2012
    (இரண்டாம் பரிசு)

Wednesday, October 24, 2012

தமிழீழம்

இடிவிழுந்த தேசம் – எங்கள்
ஈழர்வாழும் தேசம்
விடியல்தேடும் தேசம் – எங்கள்
வீரத்தமிழர் தேசம்
கடலுஞ்சூழ்ந்த தேசம் – நற்
கவிதைகூறும் தேசம்
மிடிமைகொன்ற தேசம் – எங்கள்
மேன்மைபோற்றும் தேசம்

பண்பும் போற்றுந்தேசம் – தமிழ்ப்
பழமை வாழுந்தேசம்
அண்மை தூரந்தேசம் – நல்
அழகு வாழுந்தேசம்
அன்னைத் தமிழர்தேசம் – நல்
அறமும் வாழுந்தேசம்
அன்பு போற்றுந்தேசம் – தமிழ்
அருமை தெரிந்ததேசம்

Sunday, August 19, 2012

மல்லிகைப்பூ

காலையில் சூடிய
மல்லிகைப்பூ வாடியதென்று
மாலைப்பொழுதில்
குப்பைத்தொட்டியில் எறிகிறாய்

உன் கூந்தலைவிட்டு
பிரியமனமின்றி
வாடிவதங்கிப்போனது
வாடாத மல்லிகைப்பூ!!

Sunday, August 12, 2012

காமராசர்

ஏட்டுக்கறி சுவைக்காத
நாடுபோற்றும் நல்லவர்
காமராசர்
-------------------------------------------------------

சுதந்திர தினம்

அகிம்சையெனும் ஆயுதமேந்த
அடிபணிந்தனர் ஆங்கிலேயர்
கிடைத்தது சுதந்திரம்
-------------------------------------------------------

சுதந்திரம் கொடுத்த சுதந்திரத்தில்
சுதந்திரமாய்ச் சுற்றித்திரிகிறது
ஜாதி
-------------------------------------------------------

விடுதலை கிடைத்தும்
விழலுக் கிறைத்த நீரானது
ஊழல் அரசியலால்
-------------------------------------------------------

நாம் விடுதலையடைந்ததை
ஆண்டுக்கொருமுறை நினைவுபடுத்துகிறது
சுதந்திரதினம்
-------------------------------------------------------

பள்ளிகளில் மிட்டாய் கொடுக்கப்பட்டது
குழந்தைகள் நன்றி சொன்னனர்
சுதந்திர தினத்திற்கு
-------------------------------------------------------


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 15-08-2012

2. தமிழ்முரசு - 02-09-2012

3. இராணி - 09-09-2012

4. தமிழ்த்தோட்டம் (இணைய இதழ்) - 16-10-2012

5. அருவி - 10-11-2012