Sunday, September 18, 2011
இன்று என் தமிழகம்!
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே’
என்று.
இன்று என் தமிழகத்தைப் பார்த்து இப்படித்தான் பாடத் தோன்றுகிறது எனக்கு.
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்ப
பீர்வந்து பாயுது வாயினிலே’
மாகாகவி பாரதியே, என்னை மன்னித்து விடு உன் பாடலின் முதலிரண்டு வரிகளை நான் remix செய்ததற்கு.
பட்டிதொட்டி எங்கும்
புட்டிதொடாதவன்
ஆண்மகனில்லை!
இன்று என் தமிழகத்தில்...
பிச்சைக்காரன்கூட
பிச்சை கேட்பது
பசிப்பிணிக்கு
மருந்து வாங்குவதற்கல்ல...
மூன்றுவேளையும் மூச்சுமுட்ட
மதுவருந்தவே...
அரிசி மண்ணெண்ணெய் வாங்க
நியாயவிலைக்கடைகளில்
வரிசையில் நின்ற காலம்போய்
இன்று
டாஸ்மாக் கடைகளில்
டிராபிக் ஜாம்!!
கோடிகளையும்
சம்பாதித்துக் கொடுக்கிறது
கேடிகளையும்
உருவாக்கி விடுகிறது
டாஸ்மாக்!
பணமா?
குணமா?
தமிழக அரசுக்கே
வெளிச்சம்!!
நடைபாதைகளில்
பயணிகள் நடக்கத் தடை(!)
கடைக்காரர்களின்
கண்மூடித்தனமான ஆக்கிரமிப்புகள்!
எப்போதும்
திருவிழாக்கோலம் பூண்டபடியே...
மாநகர சாலைகள்!!
பேருந்துகளின்
ஜன்னலோர இருக்கைகளில்
பான்பராக் எச்சில்கறை!
சாக்கடை நறுமணம்(!) வீசும்
கூவ ஆறுகள்!!
அண்ணாந்து
பார்த்து வியக்கும்
ஏரோப்ளேன் உயரத்தில்
தங்கத்தின் விலை!
இராக்கெட் வேகத்தில்
விலைவாசிஏற்றம்!
கோடிகளில் ஊழல்!
டைம்பாஸ் காதல்!!
தாலாட்டி வளர்த்த
தாத்தாவும் பாட்டியும்
தள்ளாடும் வயதிலும்
தனிமையில் கிராமத்தில்...
எங்கள் ஊர்
பேருந்துகளின் கால்களில்
செருப்புகள் இல்லை!
அப்படியே செருப்புகள் அணிந்து
அனுமதிக்கப்பட்ட எடையை விட
அளவுக்கதிகமாய்
தலையிலும் முதுகிலும்
தோள்களிலும் சுமந்துகொண்டு
பார்வை மங்கிய கண்களுடன்
ஒவ்வொரு அடியையும்
மிகுந்த எச்சரிக்கையுடன்
எடுத்துவைத்தாலும்
செருப்புகளையும் மீறி
பேருந்துகளின் கால்களை
பதம்பார்க்கத் தவறுவதில்லை
எங்கள் ஊர் கூ(தா)ர்ச் சாலைகள்!
குடிநீர் இல்லாக்
கிராமங்களில்கூட
மூன்றுவேளையும் குடிப்பதற்கு
சாராயம்!
அவசியம் எது?
அனாவசியம் எது?
தமிழக அரசுக்கே
வெளிச்சம்!!
சந்தி சிரிக்கிறது
இவ்வுலகம்
என் தமிழகத்தைப் பார்த்து!
சிந்திக்க வைக்கிறது
இன்று என் தமிழகம்
எனைப் பார்த்து!!
அடைமழை!
அப்போதுதான்
ஓய்ந்திருந்தது!
அலுவலகம் முடிந்து
வீடு திரும்புவதற்காய்
சாலையோரமாய் நடந்தேன்!
என் கைகுலுக்கிவிட்டு
தேநீர் அருந்தச் சொன்னது
தென்றல்!
ஸ்ட்ராங்காய்
ஒரு டீ குடித்தவுடனே
மீண்டும் கிளம்பினேன்
சாலையோரமாய் நிறுத்திவைத்திருந்த
நடராஜா சர்வீசில்...!
பூக்கடைப் பெண்மணி
உரக்கக் கூவினாள்
‘எட்டு முழம்
பத்து ரூபா...
எட்டு முழம்
பத்து ரூபா...’
என்று!
கடந்து போகயிலே
அவள் முகம் பார்த்தேன்
கூவியபடியே
அவள் கண்களிலிருந்து
மீண்டும் வலுத்தது
அடைமழை...!!
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் (இணைய இதழ்) – 17-09-2011
2. திண்ணை (இணைய இதழ்) – 17-09-2011
3. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011
4. மௌனம் (மலேசிய தமிழ் இதழ்) - 01-12-2011
வீரவணக்கம்!
தீக்குளித்த செங்கொடிக்கு வீரவணக்கம் – இனி
தென்னகமே உன்பெருமை சொல்லிமணக்கும் – இங்கு
தீக்குளித்த வீரர்க்கெல்லாம் எனதுவணக்கம் - நானும்
தீபமேற்றி வழிமொழிந்தேன் நெஞ்சிலெனக்கும்
மூவரையும் தூக்கிலிடத் துடித்தகணத்தில் – நீ
முடிவெடுத்தாய் போராட்டம் என்றேசினத்தில் – இங்கு
பாவையரும் பட்டினியாய் கிடந்தகணத்தில் – நீ
பரிதவிப்பை ஒளித்தாயே உந்தன்மனத்தில்
சீமானும் நெடுமாவும் வருத்தஞ்சொல்லவே – உன்
சிலைமுன்னே நின்றபடி வருந்திச்செல்லவே – இங்கு
ஏமாளி ஆகிவிட்டான் தமிழன்மெல்லவே – இனி
எழுந்திடடா கொடுமைகளைத் துரத்திக்கொல்லவே
தரணிதனில் தென்னாட்டின் வீரமங்கையே – நீ
தமிழர்க்குப் புகழ்சேர்த்த அன்புத்தங்கையே – உன்
கருணையாலே எழுச்சிபெறும் எம்மிலங்கையே – இக்
கவிதையிலே பாடிவிட்டேன் எனதுபங்கையே
தீக்குளித்த செங்கொடிக்கு வீரவணக்கம் – இனி
தென்னகமே உன்பெருமை சொல்லிமணக்கும் – இங்கு
தீக்குளித்த வீரர்க்கெல்லாம் எனதுவணக்கம் - நானும்
தீபமேற்றி வழிமொழிந்தேன் நெஞ்சிலெனக்கும்
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011
அழகு தேவதை!
பல்லவி:
அழகு தேவதை கண்ணில் வந்தாள்!
பழகும் போதிலே பாசம் தந்தாள்!
விலகி நின்றேனே விழிகளில் கண்ணீர்!
உலவும் காற்றைப்போல் உயிரினில் காதல்!!
சரணம் - 1
ஓர்நாள் உனையே பார்க்கா விடிலே...
கூர்வாள் எனையே கொய்யும் தினமே!
போர்வாள் இடையே தேர்போல் நடையே
சேர்வேன் உனையே சோர்வேன் மனமே...
(அழகு தேவதை...)
சரணம் - 2
மறந்தேன் உனையே என்றே நினைத்து
சிறப்பாய் நடிப்பாய் செருக்காய் நடப்பாய்!
இறந்தே கிடந்தேன் இருவிழி பட்டுப்
பிறந்தே விட்டேன் பார்மீ தினிலே...
(அழகு தேவதை...)
சரணம் - 3
கொஞ்சம் ஊடல் கொஞ்சம் கூடல்
தஞ்சம் கேட்டேன் தந்தாய் காதல்!
கண்கள் மோதல் கவிதைப் பாடல்
என்னுடைத் தேடல் நீதான் நீதான்!!
(அழகு தேவதை...)
சரணம் - 4
பூவைச் சூடிடும் பூவையும் நீதான்
தேவையும் நீதான் தேவதைத் தேன்தான்!
பாவையின் அழகினை பார்த்தேன் வியந்தேன்
சேவைகள் செய்திடும் சேவகன் நான்தான்!!
(அழகு தேவதை...)
பல்லவி:
அழகு தேவதை கண்ணில் வந்தாள்!
பழகும் போதிலே பாசம் தந்தாள்!
விலகி நின்றேனே விழிகளில் கண்ணீர்!
உலவும் காற்றைப்போல் உயிரினில் காதல்!!
குறிப்பு:
இந்தப் பாடல் முடிந்தவுடன் கதறி அழுதுகொண்டே ஓடிவருகிறாள் பாட்டுடைத் தலைவி, தலைவனைக் கட்டித் தழுகிறாள் ‘உனைப் பிரிந்து வாழமாட்டேன்டா செல்லம்’ என்று. பின் அவனின் கன்னங்களில் மாறி மாறி முத்த மழை பொழிய ஆரம்பித்தாள் அவள்.
யானை பார்!
யானை பார்! யானை பார்!!
அம்பாரி யானை பார்!
அழகான யானை பார்!
அசைந்துவரும் யானை பார்!
முறம்போன்ற காது பார்!
தலையைக்கொஞ்சம் ஆட்டும் பார்!
தந்தம் கொண்ட யானை பார்!
கோயிலுக்கு போகும் பார்!
ஆசி கூறும் யானை பார்!
தூண்போன்ற காலைப் பார்!
தும்பிக்கையை நம்பிக்கையாய்
துணையாகக் கொள்ளும் பார்!
தேர்போல அசையும் பார்!
ஊர்கோலம் போகும் பார்!
பிளிறுகின்ற யானை பார்!
களிறு என்னும் செல்லப்பேர்!
தம்பிப்பாப்பா தங்கச்சிப்பாப்பா
நீயுந்தான் ஆடிவா!
வேகமாக ஓடிவா!!
யானைமாமா வந்தாச்சு!
கைதட்டி இரசிக்கலாம்!
விசிலடிச்சு குதிக்கலாம்!!
முத்துக்குமார்
ஈழத்தமிழருக்காய்
தீக்குளித்து இறந்துபோன
வீரத்தமிழனே...
தமிழகத்தில் வாழும்
ஈனத்தமிழர்களிடம் – தன்
மானவுணர்வை தட்டிஎழுப்பவா
கனல்மூட்டி இறந்துபோனாய்?
உன்
தன்னம்பிக்கை தலைக்கேறியதால்
தீக்குளித்தாயா?
தமிழகத் தமிழர்கள்
மாறிவிடுவார்கள் என நினைத்து
உன்
தன்னம்பிக்கை தலைக்கேறியதால்
தீக்குளித்தாயா?
இந்தத் தமிழ்மண்ணில்தான்
சாராய ஆறு
கரைபுரண்டு ஓடுகிறதாம்!
ஒரு கணக்கெடுப்பு
சொல்கிறது!!
இலவசம் பரவசம்
கைவசம் மதுரசம்
இது எங்கள் தமிழகம்!!!!!!!!!!!
தீபம் ஏற்றிவைக்கிறார்கள்
உனக்கு
கோபம் வரவில்லை
யாருக்கும்
பாவம் நீ...
உனக்கு
தன்னம்பிக்கை அதிகந்தான்!
பாவம் நீ..
மணமேடைப் பூக்களெல்லாம்
பிணமேடுகளில்...
காதல் பேசும் கண்களிலெல்லாம்
மரண பீதி...
எகிப்து பிரமிடுகளாய்
இலங்கை...
என்ன செய்தது
இறைக்கை??????????????????
தோண்டத் தோண்ட
பணம் கிடைத்தால்
மகிழ்ச்சி!
தோண்டத் தோண்ட
பிணம் கிடைத்தால்.....
?????????????????????????????????????????????????
உனக்கு
தன்னம்பிக்கை அதிகந்தான்!
பாவம் நீ..
அன்று நீ...
இன்று செங்கொடி......
இனிவேண்டாம்
போதும்...
இனிவேண்டாம்
போர்ப்படைக்கு வழிகாட்டலாம்!
தீக்குளிக்க வழிகாட்டலாமா????????
பத்திரிகையாளன் நீ
பண்பாளன் நீ
பகுத்தறிவாளன் நீ
சிந்தித்திருக்கலாம்
ஒருநொடி...
உனக்கு
தன்னம்பிக்கை அதிகந்தான்!
பாவம் நீ..
உன் புகைப்படத்தை
பத்திரமாய் வைத்திருக்கிறேன்!
பாரதி பிறந்த இம்மண்ணில்தான்
நீயும் பிறந்திருக்கிறாய்
என என் குழந்தைகளிடம்
எடுத்துச் சொல்ல...
குறிப்பு:
அடுத்த நாள் 30-08-2011 செவ்வாய் அன்று காலை இரு செய்திகள் வெளியாயின ‘ஈழத் தமிழர்கள் மூவருக்கும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. தூக்குதண்டனையை நிறைவேற்ற எட்டு வார தடை.’ என்று. கேள்விப்பட்ட போது மனம் இலேசானது. மனதில் நிம்மதி பிறந்தது.
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
௧. தமிழர் எழுச்சி – டிசம்பர் ௨௦௧௩
அணில் பாப்பா!
பண்புடனே நானெழுதும் பாசமுள்ள பாடலிது!!
காக்கைக்கு சோறுவைக்க கூரையின் மீதேறி
கைப்பிடி சாதத்தை கவனமாக வைப்பேனே
காக்கையை விரட்டிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில்
கைப்பிடி சாதத்தை கொறித்தேதான் தின்பாயே
பாக்கையே மெல்லுகிற பல்லில்லா பாட்டிபோல
பசியாறும் உனைத்தானே பார்ப்பேனே சிரித்தபடி
மூக்கின்மேல் விரல்வைத்தே மூழ்கித்தான் போவேனே
மூன்றாண்டு குழந்தைபோலே மூன்றாண்டு குழந்தைபோலே
(அன்பான...)
உன்னுருவை காணத்தான் என்னுடனே தங்கையுந்தான்
ஓடிவந்து பார்ப்போமே தேடிவந்து பார்ப்போமே
கண்களிலே பட்டுவிட்டால் காலையென்ன மாலையென்ன
கவலையில்லை எங்களுக்கு களிப்பிற்கு அளவில்லை
அன்னையுடன் தந்தையுந்தான் ஆடியோடி வருவாரே
ஆனந்தப் படுவாரே ஆசையுடன் இரசிப்பாரே
உனைப்போல நானுந்தான் ஓடியாட ஆசையடா
ஆனாலும் நானொன்றும் உனைப்போல குழந்தையில்லை
(அன்பான...)
கள்ளமில்லா உன்னுருவை காணுகிற பொழுதெல்லாம்
கடவுளையே பார்க்கிறேனே கைதட்டி இரசிக்கிறேனே
தொல்லையில்லா வாழ்வுனக்கு துயரமில்லா வாழ்வுனக்கு
தொடுவானம் போலேநீ தொட்டுவிடத் துடித்தேனே
எல்லையில்லா அழகுடனே எழிலாகப் பிறந்துவிட்டாய்
எதற்கிந்த பிறவியென்று ஏங்கத்தான் வைத்துவிட்டாய்
உள்ளத்தை பொருத்தமட்டில் உனைப்போல மாறிடவே
ஒருவாய்ப்பு கிடைத்துவிட்டால் இடர்கள்தான் இல்லையடா
(அன்பான...)
அன்பான அணில்பாப்பா ஆசையுள்ள அணில்பாப்பா
பண்புடனே நானெழுதும் பாசமுள்ள பாடலிது!!
வெண்ணிலாவிடு தூது!
காவிரியில் தலைசீவி
வைகையிலே விளையாடும்
வெண்ணிலாவே...
நீ
யாரையிங்கு தேடுகிறாய்
வெண்ணிலாவே...
யாரோடும் சேராத
வெண்ணிலாவே...
நீ
தரையிறங்கி வாராயோ
வெண்ணிலாவே...
அவள் நினைவால்
வாடுகிறேன்
வெண்ணிலாவே...
அவளைப்
பார்த்து வந்து சொல்வாயா?
வெண்ணிலாவே...
தேய்ந்து தேய்ந்து
வளர்கின்ற
வெண்ணிலாவே...
அவளோ
தேயாத முழுநிலவு
வெண்ணிலாவே...
அவள்
அழகுமுகம் கண்டாலோ
வெண்ணிலாவே...
உன் கர்வந்தான்
அழிந்துபோகும்
வெண்ணிலாவே...
உன் முகத்தில்
கறையுண்டு
வெண்ணிலாவே...
அவள் முகத்தில்
கறையில்லை
வெண்ணிலாவே...
பெண்களிலே
தேவதைதான்
வெண்ணிலாவே...
அவள்
என் கண்களுக்கு
குழந்தை தான்
வெண்ணிலாவே...
அன்பாக பேசும்போது
வெண்ணிலாவே...
அவள்
நாணத்தில்
முகம் சிவப்பாள்
வெண்ணிலாவே...
எனை விட்டு
அவள் பிரிந்தால்
வெண்ணிலாவே...
உயிரில்லா பிணம்
நானே
வெண்ணிலாவே...
உயிரோடு வாழ்வதுவும்
வெண்ணிலாவே...
அவள்
அழகுமுகம் காணத்தான்
வெண்ணிலாவே...
நான் எழுதிய
இப்பாடலை
வெண்ணிலாவே...
அவள் காலடியில்
கொண்டு சேர்
வெண்ணிலாவே...
அவள் நினைவால்
வாடுகிறேன்
வெண்ணிலாவே...
அவளை
பார்த்து வந்து சொல்வாயா?
வெண்ணிலாவே...
வரவேற்போம் தீபாவளியை!
தொலைத்துவிட...
நல்லெண்ணங்களை
நம் நினைவில் நிறுத்த...
வரவேற்போம் தீபாவளியை!
உணர்வுகளைத் தொலைத்துவிட்ட
தீவுகளாகிப் போன
நம் வாழ்வில்
வசந்தம் வீச...
வரவேற்போம் தீபாவளியை!
மின்னஞ்சல் அனுப்பி அனுப்பியே
உறுதியான நட்பில்
தற்காலிகமாய்
மறந்துபோன முகங்களை
தேடும் முயற்சியாய்...
வரவேற்போம் தீபாவளியை!
நேற்றுவரை காதலர்களாய்...
இன்றுமுதல் கணவன்மனைவியாய்...
இல்லற பந்தத்தில்
இணைந்த பூரிப்பில்
வரவேற்போம் தீபாவளியை!
உண்மையான அன்பு
நம் குடும்பத்தினரிடம் மட்டுமே
கிடைக்கும் என்று
உணரவைக்கும்
திருவிழா ஆதலால்
வரவேற்போம் தீபாவளியை!
புத்தாடை அணிந்து
பட்டாசு வெடித்து
வாழ்வை இரசித்திட...
வரவேற்போம் தீபாவளியை!
தீய எண்ணங்களை
தொலைத்துவிட...
நல்லெண்ணங்களை
நம் நினைவில் நிறுத்த...
வரவேற்போம் தீபாவளியை!
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. திண்ணை (இணைய இதழ்) – 23-10-2011
2. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011
3. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 01-11-2012
வளர்க முத்தாரம்!
பொதுஅறிவுப் பெட்டகம்!
புதுமைதரும் புத்தகம்!
முதியோரும் படிக்கின்ற
முத்தமிழின் பொக்கிஷம்!!
புத்தரருளும் பொன்மொழிகள்!
புத்தியைச் செதுக்கும் நல்உளிகள்!
யுத்தமில்லா உலகுகாண
யூகிக்கிறது என்னிரு விழிகள்!!
மழையில்லாத் தூவானம்!
மணக்கிறது மண்வாசம்!
ஒளியில்லா இரவினுள்ளும்
ஒளிர்கிறது முத்தாரம்!!
நவீன அறிவியல் வரலாறு!
நான்தரும் மதிப்பெண்கள் நூறு!
நவீன மானுடவுலகிற்கு
நம்பிக்கைதரும் பகலவனாய் நீமாறு!!
முயற்சியை முடுக்கிவிடும் வினையூக்கி!
முயலாமையின் வேரையே நீதாக்கிதாக்கி
அயற்சியின் சிறகை ஒடிக்கிறாய்
அறியாமையிருளை நீபோக்கிபோக்கி!!
தங்கம்போல் ஜொலிக்கிறது சுரங்கம்!
தனிமையில் என்மனமுன்னில் கிறங்கும்!
சங்கத்தமிழ் மூன்றோடு சேர்த்து
சாதனையாய் உன்புகழ் முழங்கும்!!
கவிஞனையும் வளர்த்த இதழ்!
கலாமையும் வளர்க்கும் இதழ்!
புவிதனிலே உனைத்தானே
புகழ்கிறது அனைவரின் இதழ்!!
எத்தனைதான் வாரஇதழ்
எங்கள்கையில் ஒரேஇதழ்!
முத்தாரமெனும் வாரஇதழ்!
மதிவளர வேறெங்கே புகல்??
வாழ்ந்து பார்க்கலாம் வா!
கானல்நீர் அல்ல...
இளநீர் போன்றது!
இளநீரைப் பருகப்பருக
இதம் தரும்!
வாழ்க்கையை
அனுபவிக்க அனுபவிக்க
சுகம்தரும்!
விரக்தியின் விளிம்பில்
வாழ்க்கையைத் தொலைக்காதே
நண்பா...
முகத்தில் ஓடும
கவலை ரேகைகளை
முயற்சி அழிப்பான் கொண்டு
அழித்திடலாம் வா!
வாழ்ந்து பார்க்கலாம் வா!!
வாழ்க்கை வெண்பா!
இன்பம் கிடைத்தால் இனிக்கும்! – மண்மேல்
இருக்கும் எழிலை இரசிக்கத் தெரிந்தால்
இறைவன் இருப்பான் அருகில்!!
அருகினி லிருக்கும் அன்னையை வணங்குதல்
இறையை வணங்குதற் கிணையாம்! – முறையாய்
பண்போடு நடந்து பார்போற்ற வாழ்ந்தால்
அன்பான உலகுனை மறவாது!!
வாழப்போகிறேன்!
மனங்குளிர்ந்தவர்கள் பலர்!
நான் வென்றபோது
பயந்தவர்கள் சிலர்!
நான் விழுந்தபோது
கைகொட்டி சிரித்தவர்கள்
பலர்!
நான் விழுந்த வேகத்தில்
எழுந்தபோது
வியந்தவர்கள் சிலர்!!
விழுவதும் எழுவதும்
வாழ்க்கையின் நியதி!
அழுவதும் தொழுவதும்
மூளையின் மறதி!!
நான் வீழப்போவதில்லை!
சூரியன் எத்தனைமுறை
எரித்துச் சாம்பலாக்கினாலும்
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழும்
பீனிக்ஸ் பறவைபோல்
மார்க்கண்டேயன் போல்
யுகம் யுகமாய்
நான் வாழப்போகிறேன்!!
திருநங்கைகள்!
நாங்கள்!
ஒருபாதி ஆணாய்
ஒருபாதி பெண்ணாய்
அர்த்தநாரிஸ்வரர்கள் நாங்கள்!
கருப்பை இல்லாத
பெண்கள்
நாங்கள்!
இயற்கையின் படைப்பில்
முரண்பாடுகள்
நாங்கள்!
வண்டுகள் தேன்பருகாத
மலர்கள்
நாங்கள்!
தோகையுள்ள
பெண்மயில்கள்
நாங்கள்!
எங்குபோனாலும்
அங்கீகாரம் பெறமுடியாத
ஆதரவற்றோர்
நாங்கள்!
XX குரோமோசோம்களால்
பிறப்பது ஆண்!
XY குரோமோசோம்களால்
பிறப்பது பெண்!
X,Y குரோமோசோம்களின்
குளறுபடியால்
எங்களுக்குப் பெயர்
திருநங்கைகள்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. மூன்றாம் கோணம் (இணைய இதழ்) - 25-02-2012
2. பதிவுகள் (இணைய இதழ்) - 07-03-2012
உன்முகம் காணத்தான்!
அழகான மன்னவனே!
உம்மேல ஆசவச்சேன்!
பழகித்தான் பார்த்துவிட்டேன்!
பாசமுள்ள மன்னவனே!!
உயிரோடு கலந்துவிட்ட
உன்நினைவில் வாழ்கிறேனே!
பயிர்தேடும் மழையாக
பாசம்தந்த மன்னவனே!!
ஜில்லென்று காற்றுவீச
சிலையாக நின்றுவிட்டேன்!
மழையாக நீவந்தால்
மகிழ்வேனே நானிங்கு!!
உயிரோடும் வாழ்வதும்
உன்முகம் காணத்தான்!
உயிரெனக்குப் போகுமுன்னே
என்கண்முன்னே வாஅத்தான்!!
தூக்கம்!
மூளையின் இயக்கத்தில் மின்சாரத் தடங்கல்!!
கண்களில் பிறந்த கனவுதொழிற் சாலை!
தன்னிலை மறந்து தள்ளாடும் போதை!!
மரணம் பெற்ற மகவுகளில் ஒன்று!
நரக வாழ்க்கையின் நிரந்தரமில்லா ஒய்வு!!
காதலர் வரவேற்கும் கனவு மாநாடு!
மோகம் அரங்கேறும் மோகனப் பூமேடு!!
குருட்டுப் பயணத்தில் குறட்டை ஒலியே!
இருட்டில் மிரட்டும் மௌன மொழியே!!
மரணத்தின் ஒத்திகையாய் மயக்குமிந்த உறக்கம்!
குரங்கான மனதினையே கட்டிவைக்கும் கடிவாளம்!!
பிறந்த குழந்தையின் பிஞ்சு மனம்போல!
உறங்கிச் சாய்வாய் உறக்கத்தில் பிணம்போலே!!
இருள் சூழ்ந்து இமைதழுவச் சொல்கையிலே
காரிகை வேண்டுமடா கண்ணுறங்கச் செல்கையிலே!!
கவிதை முடியுமுன்னே கவிக்கிரண்டு சந்தேகம்!
புவிதனில் உள்ளோரே பதில்சொல் வீரே!
உடலென்னும் கூட்டுக்குள்ளே உயிரெங்கு உள்ளதடா?
உடலா உயிரா உறக்கத்தில் ஒய்வுபெறுவது?
கவிதை முடியும்போது கவிக்கிரண்டு சந்தேகம்!
புவிதனில் உள்ளோரே பதில்சொல் வீரே!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) - 16-09-2012
2. பதிவுகள் (இணைய இதழ்) - 22-09-2012
3. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 15-10-2012
திரையிசை!
பல்லவி:
நானே நானே நானே – நன
நானே நானே நானே
சரணம்:
நன நானானே நனனே
நன நனனானே நனனே
நன நானானே நனனே ஓ ஓ ஓ ஓ...
நான் எழுதிய பாடல் இதுதான்.
பல்லவி:
மானே மானே மானே – என்
தாயே நீயே தானே!
சரணம் - 1
என் உறவும் நீதானே!
என் உயிரும் நீதானே!
என் நிலவும் நீதானே ஓ ஓ ஓ ஓ...
(மானே...)
சரணம் - 2
என் இரவும் நீதானே
என் பகலும் நீதானே
என் நினைவும் நீதானே ஓ ஓ ஓ ஓ...
(மானே...)
சரணம் - 3
என் கவிதை நீதானே
என் காதலி நீதானே
என் மனதில் நீதானே ஓ ஓ ஓ ஓ...
(மானே...)
சரணம் - 4
நீ எங்கே போனாயோ
என் கண்கள் தேடுதடி
என் கவிதையும் பாடுதடி ஓ ஓ ஓ ஓ...
(மானே...)
சரணம் - 5
உயிருள்ள மெழுகாக – என்
முன்னே வந்தாயே
நீ எங்கே போனாயோ ஓ ஓ ஓ ஓ...
(மானே...)
சரணம் - 6
என் அன்பே பேரழகே
நான் தருவேன் என்னுயிரை
நீ வருவாய் என்முன்னே ஓ ஓ ஓ ஓ...
(மானே...)
சரணம் - 7
தினமும் உன்னோடு – நான்
தனியே பேசுகிறேன் – நான்
கவிதை எழுதுகிறேன் ஓ ஓ ஓ ஓ...
(மானே...)
சரணம் - 8
கண்ணே உன்னாலே – அடி
உந்தன் பிரிவாலே
நம் காதல் புரியுதடி ஓ ஓ ஓ ஓ...
(மானே...)
சரணம் - 9
என்மேல் உன்மனதில்
கோபம் என்னவென்று
சொன்னால் புரியுமடி! – என்
உயிரும் எரியுதடி ஓ ஓ ஓ ஓ...
(மானே...)
பல்லவி:
மானே மானே மானே – என்
தாயே நீயே தானே!
தவம் செய்வேன்!
செய்கதவம் செய்கதவம் செய்கதவம்! – மதியே
செய்கதவம் செய்கதவம் செய்கதவம்!!
சரணம் – 1
எய்துவேன் அமரனாகும் நிலை! – எனை
ஏற்றுவாய் வழிகாட்டுவாய் சக்தி!! – திருப்
பொய்கையிலே நீந்தி நீராடினால் – பாவமெலாம்
போகுமே பரிதிமேற் பனிபோலே!! – என்
செய்கையினாலே உலகு தழைக்கட்டும்! – மனச்
சோம்பல் ஒழிய அருளிடுவாய்! – என்
பொய்மை யிருள்சூழ்ந்த மதியை – மனப்
பேய்களையும் ஓட்டிடு சாமுண்டி!!
சரணம் – 2
ஐயமெலாம் தீர்ந்து ஞானஒளியில் – என்மதி
ஐக்கியமாகிட வழியுரைப்பாய் தேவி!! – இந்த
வையமெல்லாம் தழைத்து அன்புஓங்கிட – எனக்கொரு
வழிகாட்டு காளிசாமுண்டி சக்தி!! – என்
மெய்யை மதியை பொறிகளை – உன்னருளால்
மேம்படுத்தி அருள்புரிவாய் தாயே! – என்
தாயவள் தமிழ்ப் பாடலாலே – என்
தாயுனைப் பாடியே வாழ்த்தினேனே!!
பல்லவி:
செய்கதவம் செய்கதவம் செய்கதவம்! – மதியே
செய்கதவம் செய்கதவம் செய்கதவம்!!
தாயன்பைத் தேடி...
என் நெற்றியில் ஒன்று
என் வலது கன்னத்தில் ஒன்று
என் இடது கன்னத்தில் ஒன்று
என வாஞ்சையோடு
நீ கொடுத்த மூன்று முத்தங்கள்
நினைவுகளாய் இன்னுமும்
என் நியூரான்களில்
கண்ணீரோடு கலந்திருக்கிறது!
நான் சிரித்தபோது
நீ சிரித்தாய்!
நான் அழுதபோது
நீ அழுதாய்!
உன் உணர்வுகளை மறந்து
என் உணர்வுகளை மட்டுமே
உன் உலகமென நினைத்த
என் உலகம் நீ!
நான் வணங்கும் தெய்வம் நீ!!
என் செவிலித்தாயான
தமிழன்னையை
எனக்கு முதல்முதலில்
கற்றுக்கொடுத்த
தமிழாசான்
என் அன்னையே...
நீ தான்!
இலக்கணம் படித்ததில்லை! – உனக்குத்
தலைக்கனமும் பிடித்ததில்லை!! – தமிழ்
இலக்கியம் படித்ததில்லை! – உனக்கென
இலக்குகள் எதுவுமில்லை!!
நீ கற்றுக்கொடுத்த
தமிழ்மொழியால்
உன்மகனான நான் – தமிழ்
இலக்கியத்தில்
மூழ்கிக் கொண்டிருப்பதைப்
பார் அம்மா...!
பல ஆண்டுகளாய்
நம்மிருவரையும் பிரித்துவைத்தே
வேடிக்கை பார்க்கிறது
காலம்!
பிணந்தின்னும் கழுகுகள் போல்
பணம்பண்ணும எந்திரங்களாய்
மாற்றிவிட்டது காலம்!
பசிதூக்கத்தை மறக்கவைத்து
பாசத்தைத் துறக்கவைத்து
உணர்வுகளை இழக்கவைத்து
மனிதநேயத்தை மறக்கவைத்து
மரக்கட்டைகள் போல
மாற்றிவிட்டது காலம்!
மீசை முளைத்தபின்னும் – முகத்தில்
முடி முளைத்தபின்னும்
உருவமது மாறியபின்னும் –என்
பருவமது மாறியபின்னும்
கலப்படமில்லாத தாய்ப்பாலைப்போன்ற
பரிசுத்தமான உன் அன்பைத்தேடும்
மூன்றரை வயதுப் பாலகன் நான்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் - 25-11-2011
2. பதிவுகள் (இணைய இதழ்) – 03-12-2011
3. வார்ப்பு (இணைய இதழ்) – 27-11-2011
சொல்லிவிடு பதிலை...
முந்தானை நழுவ விட்டாய்!
முந்தானை வாசம்வந்து – என்
மூச்சு முட்டுதடி கிளியே!!
சண்டாளக் காதல்வந்து
சாமத்தில் எழுப்புதடி! – நான்
கொண்டாட வில்லை
காதலர் தினத்தை!
வண்டாடும் பூவே! – காதல்ச்
செண்டாடும் தீவே!! – எனைக்
கண்டாலே வெட்கத்திலுன்
முகம் சிவப்பதும் ஏனடி? – எனைத்
திண்டாட வைப்பதில்
கொண்டாட்டமா உனக்கு?!!
இன்றாவது சொல்லிவிடு
நீதான்டா என் செல்லமென்று...!!
சிரித்துவிடு அக்கா!
காலம் நம்மை அழவைத்தாலும்
சிரித்துவிடு அக்கா! – நாளும்
சிலிர்த்தெழு அக்கா!!
நாமெல்லாம்
சிரிக்கப் பிறந்தவர்கள்!
வெற்றியைப்
பறிக்கப் பிறந்தவர்கள்!
உனக்கு
உற்றதுணை அண்ணனிருக்க
கற்றகல்வி கைகொடுக்கும்!
உறுதுணையாய் நானிருக்க - நன்றாய்
உறங்கிவிடு அக்கா!!
பட்டதுன்பம் மாறிவிடும்! – நம்
பரிசுத்த மனம் வென்றுவிடும்!!
கவலைவேண்டாம் அக்கா!!
காலம் கொடுத்த வேதனையை
வேதனை கொடுத்த சோதனையை
நாம் மாற்றுவோம் சாதனையாய்!
காலம் செய்த பாதகத்தை
நாம் மாற்றுவோம் சாதகமாய்!
பசித்துவிட்டால்
புசித்துவிடு அக்கா! – உணவை
புசித்துவிடு அக்கா!!
சிரித்துவிடு அக்கா! – கவலைமறந்து
சிரித்துவிடு அக்கா!!
இரசித்துவிடு அக்கா! – இயற்கையை
இரசித்துவிடு அக்கா!!
இறைத்தன்மை என்றுமே ஒன்று! – நம்
இன்பத்தமிழைப் பேசிக்கொண்டு
நம்பிக்கையோடு நேர்வழி சென்று
காலங்கொடுத்த துன்பத்தை வென்று
பழைய வரலாறு உடைப்போம்!
புதிய சரித்திரம் படைப்போம்!!
இக்கரையில் நாங்கள்!
அக்கரையில் நீங்கள்!
அக்கறையுடன் உன் வேலை செய்!
சிக்கனமாய் பணச்செலவு செய்!
எக்கணமும் மன மகிழ்ச்சிகொள்!
இப்படி நான்
சொல்லவில்லை அறிவுரை!
இவற்றை நீ
இன்றே செய் பரிந்துரை!!
நீ அழுதுவிட்டாய் கண்ணீர்வழி!
நானும் அழுதுவிட்டேன்! – உயிர்நோக
எழுதிவிட்டேன் இன்றே கவிதைவழி!
என்றுமாறும் நம்மிதய வலி?
உன் அழுகை கண்டு
நான் எழுதினேன் இக்கவிதையை!
காலம் மாற்றும் நம் சோகக்கதையை!!
உன் மழலைகொஞ்சும் ஓசை
மனம்மகிழும் ஓசை
என் காதில் விழும்நாள்
வெகுதொலைவில் இல்லை!!
உன் புன்னகை போதுமே அக்கா!
எனக்கு வேறெதுவும் வேண்டாமே அக்கா!!
புத்துலகு செய்குவோமே...!
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
அநுபல்லவி:
யுத்தமில்லா உலகுகாண...
இரத்தமில்லா உலகுகாண...
(புத்துலகு)
சரணங்கள்:
புத்தம்புது காலையிலே புதுவிடியல் கண்டிடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
கத்துங்குயிலின் கீதம்கேட்டு கலைகளையே வளர்த்திடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
(புத்துலகு)
நோய்களில்லா நாளினையே நாமும்எதிர் பார்த்திடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
வாய்மையுள்ள உள்ளத்தினை வரமாய்நாமும் பெற்றிடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
(புத்துலகு)
கல்வியறிவும் கலவியறிவும் கலந்தேநாமும் வாழ்ந்திடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
இல்வாழ்வையே இனிதாக்கவே இனிதேகாதல் செய்திடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
(புத்துலகு)
பாட்டில்நாமும் பாரதியாகி பாரினையே வென்றிடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
ஏட்டிலுள்ள ஒழுக்கமெல்லாம் இயற்கைநியதி ஆகிடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
(புத்துலகு)
பல்லவி:
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) – 23-12-2011
பிரியும்போது...
அன்னைத் தமிழ் பேசும்
தமிழர்கள் நாம்!
உள்ளூரிலேயே வாழ்ந்துங்கூட
ஒருவர் முகம்
ஒருவர் பாராமல்
வாழ்வதும் ஏனென்று
காரணத்தைத் தேடுகிறேன்!
வாழ்க்கையைத் தேடுகிறேன்!
வாழ்க்கையில் தேடுகிறேன்!!
வானத்தைப் பார்க்கிறேன்!
வானவில்லைப் பார்க்கிறேன்!
கவிதைவழி பாடுகிறேன்!
கனவுகளும் காண்கிறேன்!!
சிரிப்பைவிட கண்ணீரைத்தான்
அதிகமாய்த் தந்திருக்கிறது
வாழ்க்கை...
குறும்பாய்ப் பார்த்து
அரும்பாய் மலர்ந்தது
காதல்!
எறும்பாய்ச் சேர்த்துவைத்தேன்
ஆசைகளை!
வார்த்தையைவிட வலிமையானது
கண்ணீர்!
வாழ்க்கையிலே இனிமையானது
காதல்!!
கண்ணீருங்கூட அமுதமடா
மகிழும்போது...!
கண்ணீருங்கூட அமிலமடா
பிரியும்போது...!!
பிரியாதேடா செல்லம்...
பச்சிளங்குழந்தை போலவே
உன்னோடு பேசிச்சிரித்து
விளையாடிக் கொண்டிருக்கிறேன்
நான்!
குழந்தையிடமிருந்து
பொம்மையைப் பிடுங்குவதுபோல்
என்னிடமிருந்து
உன்னைப் பிரிக்கிறது
நேரமும் காலமும்!
பொம்மையைப் பிரிந்து
குழந்தை அழுவதுபோல்
உன்னைப் பிரிந்து
நான் அழுகிறேன்!
தற்காலிகமாய்க் கூட
என்னைவிட்டு
பிரியாதேடா செல்லமென்று...
பிணம்!
ஒலிகேட்கும் செவியிரண்டும் ஒலியின்றிப் போனதென்ன!!
செவியிரண்டும் விழியிரண்டும் செயலிழந்து போனதனைக்
கவிவழியே மரபோடு கவிஞனிவன் பாடுகிறேன்!!
உடலென்னும் கூடுவிட்டு உயிர்ப்பறவை பறக்குதடா!
உடலென்ன உறவென்ன எல்லாமே மறக்குதடா!!
காலிரண்டு மூன்றாகி காலங்கள் மொட்டாக!
மேலிருந்து அழைப்புவர மூன்றுகால் எட்டாக!!
மீளாத தூக்கத்தில் மூழ்கிவிட்ட தசைப்பந்து!
காலனாலே காலமாகி கவிபாடும் இசைச்சிந்து!!
ஒருதுளி விந்ததுவே அண்டத்தோடு கலந்துவிட
கருவானாய் தாய்வயிற்றில் கல்லறையில் மலர்ந்துவிட!
பிறந்தபோது பேர்வைத்துப் புகழ்கின்றார் பெற்றோர்!
இறந்தபோது பிணமென்று இகழ்கின்றார் உற்றார்!!
ஏனிந்த மாற்றமென்று எவரேனும் சொல்வீரா?
‘நான்யார்?’ தெரிந்துகொண்டு நமைநாமே வெல்வீரா?
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. மகாகவி – 01-03-2011
2. காற்றுவெளி (இலண்டன் இதழ்) - 12-05-2012
3. விதை2விருட்சம் - 25-05-2012
4. அரசியல் டுடே (இணைய இதழ்) - 29-11-2012
பச்சைக்கிளியே...
பாசமுள்ள பச்சைக்கிளியே
பச்சைப்பசேல் சோலைகளிலே
பறந்துதிரியும் பச்சைக்கிளியே
‘கிரீச் கிரீச்’ சத்தமெழுப்பும்
கிள்ளைமொழிப் பச்சைக்கிளியே
சிரித்துப்பேசி விளையாடிமகிழும்
சிறார்களைப்போன்ற பச்சைக்கிளியே
அம்மா என்றால் அம்மா என்பாய்
அப்பா என்றால் அப்பா என்பாய்
தம்பி என்றால் தம்பி என்பாய்!
தத்தித்தத்தி நடந்துவருவாய்!!
அனைத்துலக மாந்தர்கட்கு
அன்பைநீதான் போதிக்கிறாய்!
உன்னைப்பார்த்து உன்னைப்பார்த்து
உணர்வோம்நாங்கள் அன்பைநாளும்!!
நான் யார்?
என்நினைவுக்கும் எட்டாமல்...
கண்ணுக்கும் தெரியாமல்...
கற்பனைக்கும் எட்டாமல்...!!
‘நீ யார்?’ என
நேராய்க் கேட்டேன்!
‘நீ யார்?’ என்றது
நினைவிலே அக்குரல்!
‘நீ நானா? நான் நீயா?’
அக்குரலிடமே கேட்டுப்பார்த்தேன்!
உரக்கச் சிரித்தது
அக்குரல்!
‘இக்கேள்விக்கான விடையை
நீ கண்டறிந்துவிட்டால்
நீயும் ஒரு ஞானிதான்’
என்றது அக்குரல்!!
முத்தங்கள் பலநூறு தா!
2005 ம் ஆண்டு நவம்பர் மாதம் என்னோடு படித்த பெண்ணின் திருமணத்திற்கு என் காதல் தேவதை சேலை கட்டி வந்திருந்தாள். திருமணம் முடிந்தபிறகு ஒரு தோழியிடம் விடைபெறுவதற்காய் அந்தத் தோழியை நோக்கி நடந்தேன். அந்தத் தோழிக்கு நேரே பின்னால் அவள் நின்று கொண்டிருந்தாள். தன்னிடம்தான் பேச வருகிறான் என அவள் நினைத்து வெட்கப்பட்ட படியே ஓடிப்போய் சுவரின் பின்னால் ஒளிந்து கொண்டாள். அங்கிருந்து விடைபெறும்போது நான் மட்டும் வரவில்லை. வெட்கப்பட்ட என் குட்டிப்பாப்பாவையும் என் மூளைக்குள் சுமந்துகொண்டு விடைபெற்றேன். 2009 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் கற்பனையில் நான் உருவாக்கி வைத்திருந்த சாலையில் நடக்க வைத்தேன். அப்போது தோன்றிய பாடலிது. சேலை கட்டிய என் காதல் தேவதை, குட்டிப்பாப்பா தேவதை எவ்வளவு அழகாக இருப்பாள் தெரியுமா?
சேலைகட்டி வந்தமயில் சோலையிலே கூவும்குயில்
காலையிலே என்முன்னே நடந்தாள்! – நானும்
மாலையிடும் ஆசைகொண்டு வேளைவரும் நாளையெண்ணி
சாலையிலே அவள்பின்னே நடந்தேன்!!
கார்மேகக் கூந்தலோடு வார்த்தமுகப் பொலிவோடு
சேர்த்தெடுத்த அகிலாக மங்கை! – அவளைப்
பார்த்தவுடன் என்னுள்ளே வார்த்தைவழிக் கவிதையாக
பூத்துவிட்டாள் எழிலான மங்கை!!
கச்சணிந்த முன்னழகில் மச்சமுள்ள இடையழகில்
மிச்சமுள்ள பெண்ணழகில் மயங்கி! – நானும்
கச்சணிந்த முன்னழகை மச்சமுள்ள இடையழகை
அச்சமுடன் பின்தொடர்ந்தேன் தயங்கி!!
கொஞ்சதூரம் போனபின்னே வஞ்சியவள் திரும்பிநிற்க
அஞ்சிநின்று வேறுதிசை பார்த்தேன்! – அவள்
நெஞ்சமதை நானறிய வஞ்சியவள் பெயரறிய
கொஞ்சதூரம் நடந்தபடி வேர்த்தேன்!!
தத்தையவள் எனைநோக்கிச் சித்திரமாய்த் திரும்பிவந்து
பத்திரமாய் ஒருசேதி உரைத்தாள்! – ‘நானுன்
அத்தையவள் பெற்றமகள் பைத்தியமா நீ?’என்று
புத்திமதி சொல்லிவிட்டு முறைத்தாள்!!
உண்மையது புரிந்தவுடன் மென்மையான பெண்மையிடம்
உண்மையான காதலென்று சொன்னேன்! – அவளும்
‘நானுமுனைக் காதலித்தேன் நாணமுற்ற நாள்தொடங்கி’
பெண்மையவள் மென்மையாகச் சொன்னாள்!!
முத்துரத வீதியிலே தத்திவிளை யாடுங்கிளி
சித்திரமாய் என்னருகே வந்தாள்! –அவள்
முத்துதிரும் இரத்தினமாய் மோகனமாய்ப் பத்திரமாய்
முத்தங்கள் பலநூறு தந்தாள்!!
‘குழவியாகப் பார்த்தவுன்னை தலைவியாகப் பார்த்தவுடன்
குழம்பியது என்னறிவு’ என்றேன்! – என்
தலைவியான அவளோடு தலைகோதி சாய்ந்தபடி
மழலையாக வீடுநோக்கிச் சென்றேன்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) - 16-09-2012
2. பதிவுகள் (இணைய இதழ்) - 22-09-2012
3. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 15-10-2012
மழைவெள்ளம்
உனைக் காணவேண்டி
யாகம் நடத்தினால்
யோகம வருமென்று
நம்பிய மக்களை
சோகத் தீயில்
வேகவைத்த
மழைவெள்ளமே...
நீ வந்தபின் உனைக்கண்டு
வணங்கிய எம்மக்களை
பிணங்களாய் மாற்றிய
மழைவெள்ளமே...
சொந்தங்கள் தேடிச்சென்ற
வானம்பாடிகளை
கானம் பாடவிடாமல்
சோகம் பாடவைத்த
மழைவெள்ளமே...
வசிக்க வீடில்லாமல்
குடிசைகளில் வாழ்ந்தவர்களை
நெரிசல்களில் சிக்கவைத்து
பரிசல்களில் தவிக்கவைத்த
மழைவெள்ளமே...
நிழல்தரும் நல்மரங்களையும்
நினைவில் நிற்கும் இளம்மனங்களையும்
வேரோடும் சாய்த்துவிட்டு
ஊரோடும் சாய்த்துவிட்ட
மழைவெள்ளமே...
ஆற்றுப் பாலங்களையும்
வாசற் கோலங்களையும்
சிதைத்துவிட்டு – உயிர்களை
பதைபதைக்க வைத்த
மழைவெள்ளமே...
வாய்க்கால் நிறைய...
கண்மாய் உடைய...
கழனியெல்லாம் நிறைய...
பயிர்கள் அழுக... – உலக
உயிர்களும் அழுக...
மழைவெள்ளமே...
போதும் உன் ருத்ரதாண்டவம்!
எம் தமிழ்மக்கள் உயிர் பாவம்
நீர்சூழ்ந்த கடலுக்கு
வனப்பு அலையே...
மக்கள் அழைக்கும்போது
வந்துவிடு மழையே...
தேவையின் பெயரில்
பெய்துவிடு வான்மழையே...
தேவையில்லாமல் பெய்தால்
உன்பெயர் பிழையே...
மனசாட்சி!
நின்றேன் நான்!
கண்ணாடியில் என்னுருவம்
எனைப் பார்த்துச் சிரித்தது!
‘நீ யார்?’
என்று கேட்டேன்!
‘உன் மனசாட்சி’
என்றது அக்குரல்!
‘நல்ல எண்ணங்களோடு
வாழ்கிறாயா?
நல்ல குணங்களோடு
வாழ்கிறாயா?’
என்றது அக்குரல்!
‘எப்படி வாழமுடியும்?
நான் வாழ்வது
கலியுகத்தில்!’ என்றேன்!
‘காலங்கள் மாறினாலும்
யுகங்கள் மாறினாலும்
மற்றவர்கள் மாறினாலும்
சமுதாயம் மாறினாலும்
நல்ல எண்ணங்களை விட்டு
நல்ல குணங்களை விட்டு
நீ ஒருபோதும் மாறாதே!
உனக்கு கோபம் வரும்போது
அவள் சொன்னதுபோல்
தியானம் செய்!
என்னைக் கூப்பிடு!
மற்றவைகளை
நான் பார்த்துக் கொள்கிறேன்!’
என்று சொல்லிவிட்டு
மௌனமானது
மனசாட்சி!!
காதல் மலர்ந்தது!
கரைபுரண்டு ஓடுதடி வெள்ளம்! – மனச்
சொற்பனத்தில் காதல்கொண்டு சீதளமாய் அவள்வந்து
சொக்கிவிட வைப்பாளே செல்லம்! – அவள்
சுவையாகத் தித்திக்கும் வெல்லம்!!
கனவினிலே வாழ்கின்ற தேவி! – நீயென்
கற்பனைக்கும் கவிதைக்கும் சாவி!! – உன்
அன்பான பார்வையாலும் அமைதியான குணத்தாலும்
அன்பான காதலிலே மேவி! – என்னுயிர்
அழைக்குதடி உனைத்தானே கூவி!!
அன்பாகத் தோளில்சாயும் போது – அவள்
அழகான மங்கையாக மாது! – தமிழ்
பண்போடு பார்போற்றும் பெண்பூவே மண்மீது
பறைசாற்ற வார்த்தைகிடை யாது! – உன்னழகை
பறைதட்டிச் சொல்லிடவா தூது!!
அன்றொருநாள் பேருந்தி லேறி – உன்
அழகுமுகம் கண்டவுடன் மாறி – புதுத்
தென்றலென வான்மேலே தேரேறி மிதந்தேனே
தேவதையுன் நினைவுகளில் ஊறி! – கவிதைத்
தேரேறி உன்னழகைக் கூறி!!
உன்னழகைக் கூட்டுதடி சேலை! – உன்
உணர்வோடு விடியுமதி காலை! – என்
கண்முன்னே எப்போதும் காதலிநீ வேண்டுமடி
காத்திருந்து கால்கடுக்கும் வேளை! – நீயென்
கண்களிலே பூத்தபூஞ் சோலை!!
உடலோடு மின்னுகிற தங்கம்! – நீயென்
உளத்தோடு உளமாக அங்கம்! – காதல்
மடலாக இக்கவிதை மலருனக்கு நானெழுதி
மண்மீது வைத்திடவா சங்கம்?! – காதல்
மலர்ந்துமணம் வீசட்டும் எங்கும்!!
கண்ணீர்!
வியர்வைத்துளி
கண்ணீர்!
அன்பை உணர்த்தும்
உன்னத வழி
கண்ணீர்!
நெடுநாள் பிரிந்திருந்த
அன்பான உறவுகளைப்
மீண்டும் பார்க்க நேர்ந்தால்
தானாய்க் கண்ணீர் வழியட்டும்!
தடுக்காதீர்கள்
தானாய்க் கண்ணீர் வழியட்டும்!!
அன்பை வெளிப்படுத்த
கண்ணீர் விடுங்கள்!
ஆண்மகன்
கண்ணீர்விட்டு கதறியழுதால்
கௌரவக் குறைச்சலென
யாரோ சொன்னார்கள்!
கண்ணீர் இருபாலருக்கும்
பொதுவானது!
உணர்வுகளும் மனமும்
இருபாலருக்கும்
பொதுவானது!!
துக்கம் தலைக்கேறும்போது
கண்ணீர்விட்டு கதறியழுங்கள்!
தவறில்லை!
கண்ணீர ஒரு
வியர்வை சுரப்பி!
கண்ணீர் விட்டால்
கண்ணுக்கு நல்லது!
உடலுக்கும் நல்லது!
துக்கம் தலைக்கேறும்போது
கண்ணீர்விட்டு கதறியழுங்கள்!
தவறில்லை!
இது நான் சொல்லவில்லை!
அறிவியல் சொல்கிறது!!
காதலனை தேடுகிறாள்!
பாலமிட்ட பால்நிலவு பால்வெளியில் பாடுதடா!
கோலமிட்ட காதல்நிலா காதலனை தேடுதடா!!
கன்னத்தின் வீக்கத்தை கண்ணீரின் ஏக்கத்தை
எண்ணங்களை கவிதைகளாய் எழுதுதடா என்பேனா!!
பனிவாடைக் காடுகளில் பகல்நேரம் பாடுகிறேன்!
துணிவோடு நானுனையே துணையாகத் தேடுகிறேன்!!
வெயில்நேரம் வந்தபோதும் குயில்கூவும் சத்தம்!
உயிரோடு பதிந்ததடா உன்நினைவே நித்தம்!!
காற்றோடு பேசுகிறேன் கவிதைவழி பாடுகிறேன்!
நேற்றோடு போனவனே நெஞ்சோடு வாழ்பவனே!!
கொஞ்சிக்கொஞ்சிப் பேசவந்து காதல்தனை வளர்த்தவனே!
வஞ்சியென் மனங்கவர்ந்து வாழ்க்கைத்துணை தந்தவனே!!
மணமேடை ஏறும்முன்னே மணாளனேநீ போனதென்ன!
பிணவாடை வீசுவதுபோல் பிணமாகநான் ஆனதென்ன!!
செத்தாலும் சுகந்தருமே முத்தாக உன்முகம்வருமே
கத்தாத குயில்நானே பித்தாக ஆனேனே!!
மோனநிலை கனவுறக்கம் மங்கையென் உயிரிருக்கும்!
தேனொழுக நீபேச முத்துமுத்தாய் கவிபிறக்கும்!!
எங்கேயோ போனாயே என்னோடு வாநீயே!
மங்காத புகழோடு வாழ்வோம் இங்கேயே!!
கலியுக இந்தியாவே!
வாழ்ந்த காலம்போய்
உறைக்குள் ஆயுதத்தோடு
வாழவைத்துவிட்டது
கலியுக வாழ்க்கை!
அயோத்தியில் உள்ளஇடம்
இராமருக்கா?
பாபருக்கா?
ஏனிந்த சர்ச்சை?
பெயர் இரண்டானாலும்
மதம் இரண்டானாலும்
மனிதநேயம் ஒன்றுதானே
நண்பா...
நான் நாத்திகனா?
இல்லை ஆத்திகனா?
ஆராய்ந்து பார்க்காதீர்கள்!
நான் இந்துவா?
இல்லை இஸ்லாமியனா?
எவரையும் கேட்காதீர்கள்!
நல்ல எண்ணங்களோடு
வாழ்ந்து மடியத் துடிக்கும்
நானும் ஒரு சராசரி மனிதனே!!
ஏ கலியுக இந்தியாவே...
இக்கவி பேசும் மொழிகேட்க
உம் செவியிரண்டையும் தீட்டிக்கேளும்!
ஆத்திகர்கள் என்ற பெயரில்
அயோக்கியர்களாய் வாழ்வதைவிட
நாத்திகர்கள் என்ற பெயரில்
நல்லவர்களாய் வாழுங்களேன்!
இது அறிவுரையல்ல...
அடியேனின் பரிந்துரையே...!!
இயேசுபிரான்!
ஆதவன் தோன்றிவிட்டான்! – எங்கள்
ஆண்டவன் தோன்றிவிட்டான்!! – எங்கள்
துன்பங்கள் தாங்கிட துயரங்கள் நீங்கிட
தூதுவன் தோன்றிவிட்டான்! – இறைத்
தூதுவன் தோன்றிவிட்டான்!!
மாட்டுக் குடிலிலே மரியன்னை மடியிலே
மனிதனாய்ப் பிறந்துவிட்டான்! – இயேசு
புனிதனாய்ப் பிறந்துவிட்டான்!! – அவன்
தொட்டிலில் துயில்கையில் தேவர்கள் வாழ்த்தினர்
தேவனே பிறந்துவிட்டான்! – எங்கள்
ஜீவனாய்ப் பிறந்துவிட்டான்!!
விண்மீன்கள் வாழ்த்திட விண்ணிலே இரவிலே
வின்மீனாய்ப் பிறந்துவிட்டான்! – புது
விடியலாய்ப் பிறந்துவிட்டான்!! – இந்த
மண்ணிலே அன்பின் மகிமையை உணர்த்திட
மெசியாவே பிறந்துவிட்டான்! – இயேசு
மெசியாவே பிறந்துவிட்டான்!!
தச்சனின் மகனாகத் தத்துவ ஞானியாய்
தெய்வமாய்ப் பிறந்துவிட்டான்! – இயேசு
தெய்வமாய்ப் பிறந்துவிட்டான்!! – அவன்
பச்சிளங் குழந்தையாய்ப் பாவங்கள் நீக்கிட
பாரினில் பிறந்துவிட்டான்! – இயேசு
பாரினில் பிறந்துவிட்டான்!!
கல்வாரி மலையிலே கண்ணீரும் சிந்தினான்
கல்லால் அடித்தனரே! – அவனைக்
கல்லால் அடித்தனரே!! – அவனை
சிலுவையில் அறைந்தனர் சவுக்கால் அடித்தனர்
சித்ரவதை செய்தனரே! – அவனைச்
சித்ரவதை செய்தனரே!!
தட்டினால் திறக்குமே கேட்டாலே பெறுவீரே
தேடினால் கிடைக்குமென்றான்! – இயேசு
தேடினால் கிடைக்குமென்றான்!! – அவன்
பட்ட துயரினைப் பார்த்த கணத்திலே
பாவிகள் வருந்தவில்லை! – அந்தப்
பாவிகள் திருந்தவில்லை!!
மேய்ப்பராய் வளர்ந்தான் மேதினியில் வாழ்ந்தான்
மிருகங்களை நேசித்தானே! – இயேசு
மிருகங்களை நேசித்தானே!! – அவன்
தூய்மையாய் வாய்மையாய் உண்மையாய் நேர்மையாய்
தெய்வமாய் வாழ்ந்திட்டானே! – இயேசு
தெய்வமாய் வாழ்ந்திட்டானே!!
அன்பால் கருணையாய் அகிலத்தை மாற்றியே
ஆண்டவனாய்த் தோன்றினானே! – இயேசு
ஆண்டவனாய்த் தோன்றினானே!! – அவன்
முன்பாக மன்றாடி முகந்தாழ்த்தி வணங்குவோம்
மெசியாவே மன்னிப்பாயே! – இயேசு
மெசியாவே மன்னிப்பாயே!!
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. மூன்றாம்கோணம் (இணைய இதழ்) – 25-12-2011
2. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011
எண்ணங்கள் உயரட்டும்!
திண்ணமாய் மறைவதில்லை!
எண்ணங்களை உயர்த்தி விட்டால் – வாழ்வில்
வண்ணங்கள் பலபிறக்குமடா!!
துன்பங்கள் துரத்தி வந்தால்
தூரவிலகி ஓடவேண்டாம்!
இன்பங்களைத் தரத்துடிக்கும்
இறைத்தூதர் துன்பங்கள்தாம்!!
முயற்சியை கைவிடாதபோதிலும் – தொட
முடியாமல்போகும் வெற்றி
அயற்சிவேண்டாம் தோழனே!
அமைதிதான் அப்போதையவெற்றி!!
ஜாதிப்பூசலை மறப்போம்!
சமயப்பூசலையும் மறப்போம்!
இதயவாசலைத் திறப்போம்
இப்போதிலிருந்தே உழைப்போம்!!
கன்னத்தில் கைவைத் தமர்ந்தால் – கவலைகள்
திண்ணமாய் மறைவதில்லை!
எண்ணங்களை உயர்த்தி விட்டால் – வாழ்வில்
வண்ணங்கள் பலபிறக்குமடா!!
எண்ணங்களை உயர்த்திவிடு தாயே!
கைகளில் கிடைத்திட வேணும்!
உன்னில் துவங்குது அண்டம்! – இதை
உணர்ந்திட வேண்டுமடா தோழா!!
எண்ணி லடங்கா உயிர்கள்! – இவை
எல்லாம் படைத்தவன் இறைவன்!!
திண்ணம் நிறைபெற் றோங்கும் – பெருந்
தோள்களில் இருப்பாள் சக்தி!!
எண்ணங்கள் உயர்ந்திடல் வேண்டும்! – இங்கு
எண்ணுவனயாவும் நிகழ்ந்திடல் வேண்டும்!!
விண்ணுலகில் தேவர்கள் கூட்டம்! – இந்த
மண்ணுலகில் மனிதர்நட மாட்டம்!!
திண்ணமாய் நானும் ஓர்நாள் – சக்தி
தாயருள் பெறத்தான் வேண்டும்!!
எண்ணத்தில் அன்புமட்டும் வேண்டும்! – தினமும்
எண்ணுவேன் சக்தியை மீண்டும்!!
என் செல்லக்குழந்தை!
என்னுடைய கவிதைகள்
சிலவற்றை
நீ தற்செயலாய் படித்துவிட்டு
‘நீ பெரிய
கவிஞனாயிட்ட சுரேஷ்’
என்று நீ சொன்னபிறகு தான்
நானும் கவிஞனாகிவிட்டேன்
என்ற ஆத்மதிருப்தி
என்னுள் ஏற்பட்டது!
உன் பெண்குரலை
முதன்முதலில் கேட்டபிறகுதான்
என்வீட்டுக் கண்ணாடிகூட
என்னை அழகனாய்க் காட்டியது!!
தன் குழந்தை
மழலைத்தமிழில் பேசுவதைப் பார்த்து
மகிழ்ச்சியடையும் தாய்போலவே
என் செல்லக்குழந்தையான
நீ செல்லங்கொஞ்சி
பேசுவதைப் பார்த்துப் பார்த்து
நான் மகிழ்ச்சியடைகிறேன்!
பூவோடு சேர்ந்த நாரும்
மணம்பெறுவதைப் போல
உன்னைக் காதலித்த நானும்
இன்று கவிஞனாகிவிட்டேன்!!
அவள் உயிர் அழுகிறது!
நான் உங்களிடம் ஒரு உண்மைச் சம்பவத்தைப் பற்றி சொல்லப் போகிறேன். சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் தான் காதலித்த ஒருவரைப் பற்றி சொன்னாள். அவள் காதலித்த அந்த ஆண் அவள் தினமும் கல்லூரிக்கு செல்லும் பேருந்தின் நடத்துநர் எனவும் அவரின் குறும்புப் பேச்சும் அவரின் அன்பான கனிவான வார்த்தையும் அவளை மிகவும் கவர்ந்ததாகவும் அவரிடம் தன் காதலை சொல்ல முடியாமல் தவித்ததாகவும் ஒருநாள் அவர் இவளிடம் தன்னுடைய திருமண அழைப்பிதழை தந்துவிட்டு போனதிலிருந்து அவரை மறக்கமுடியாமல் இரவு தூங்கமுடியாமல் போர்வைக்குள் அழுததாகவும் உண்மையாய் காதலிப்பவர்களை தான் ஆதரிப்பதாகவும் தான் இப்போது மிகப் பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவனமான CTS ல் வேலைபார்த்து வருவதாகவும் மிகவும் உருக்கமாகவும் சொன்னாள்.
அவளுடைய வாழ்க்கையை நானிங்கு பாடலாக எழுதியிருக்கிறேன்.
அந்த பெண் வேறு யாருமல்ல என் தூரத்து சொந்தமான என் பெரியம்மா மகள். அவள் அவள் கதையை அந்த காரைக்குடி புகைவண்டி நிலையத்தில் என்னிடம் சொல்லிவிட்டு அழுகையை அடக்கிக் கொண்டு என்னை பார்த்தாள். நான் அவள் தலைகோதி விட்டபடி "அழாதே அக்கா" என்று ஆறுதல் சொன்னேன். அவளின் அழுகையை அடக்கிக் கொண்டிருந்த அந்த முகம் இன்னும் என் கண்முன்னே நிற்கிறது. இன்னும் என்னுள்ளே உறைந்து கிடக்கிறது.
பேருந்தில் அவனைக்கண்ட போது – மனதில்
பேருவகை கொண்டாளே மாது! – புது
மாறுதலைத் தந்துவிட மறுதலிப்பும் இல்லாமல்
மனதெல்லாம் அவனின்று ஏது? – அவன்
மனதைச்சொல வார்த்தைகிடை யாது!!
குறும்புகளைச் செய்வதிலே கண்ணன்! – அவன்
குணத்தாலே என்மனதில் மன்னன்! – அந்த
அரும்புமீசைக் காரனவன் அழகுமணி மாறனவன்
அனைத்துலகப் பெண்களுக்கும் அண்ணன்! – அவன்
அள்ளியள்ளிக் கொடுப்பதிலே கர்ணன்!!
நடத்துநராய் அவன்வந்தான் பார்த்தேன்! – அவன்
நினைவாலே போர்வைக்குள் வேர்த்தேன்! – காதல்
தொடங்கியது அன்றேதான் தூங்கவில்லை இன்றுவரை
தேவதைநான் காதலிலே தோற்றேன்! – மனத்
தேறுதலை மாறுதலை ஏற்றேன்!!
அழைப்பிதழை அவன்தந்தான் நேற்று! – என்
அழகான முகந்தனையே பார்த்து! – அங்கு
வாழைமரம் சாய்ந்ததுபோல் வீழ்ந்ததடா என்னுள்ளம்
வாழ்விழந்து நின்றேனே வேர்த்து! – என்
வாழ்வினிலே வீசியது புயல்காற்று!!
இலவுகாத்த கிளிபோலே நின்றேன்! – நான்
இரக்கமின்றி என்மனதைக் கொன்றேன்! – அவன்
அழகான முகம்மட்டும் ஆடுதடா உயிரினிலே
‘அன்பான அத்தானே’ என்றேன்! – அவனை
ஆசையுடன் பார்த்தபடிச் சென்றேன்!!
எப்போதும் காதலில்நான் மூழ்க – இனி
என்றைக்கும் காதல்மட்டும் வாழ்க! – இங்கு
முப்போகம் விளைந்திட்ட முக்கனியைப் போலதினம்
முகந்தெரியாக் காதலர்கள் வெல்க! – இனி
மூவுலகும் காதலரே ஆள்க!!
அம்மா!
என்னைப் பெற்றெடுக்க இடுப்புவலி சுமந்தவளே
கண்களைப் பிரிந்தேதான் கண்ணிமைகள் வாழாது
உன்னைப் பிரிந்தேநான் உயிரோடு வாழேனோ?
எத்தனையோ சொற்கள் அமுதாக இருந்தாலும்
அத்தனையும் அம்மாவென் றழைப்பதற் கீடாமோ?
சோதனைகள் வந்தபோது சோர்வின்றி உழைத்திட்டாய்
வேதனைகள் தாங்கிதினம் வெளியில்நீ சிரித்திட்டாய்
பசியே தெரியாமல் பாசமாக வளர்த்தாயே
பாசத்தைக் குறைவின்றி பரிமாற வந்தாயே
நேசத்தை வளர்த்திட்டாய் நேர்மையை வகுத்திட்டாய்
மாசில்லா நவமணியே மங்கையே நீவாழ்க!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) - 07-03-2012
Sunday, September 4, 2011
கவிபாடுகிறேன்!
தத்திவந்து என்னருகே தளிராடை காட்டிநின்றாள்
புத்தனாக இருந்தநானும் பூமொட்டு முகம்பார்த்து
மொத்தமாக வீழ்ந்தேனே மூர்ச்சையாகிக் கிடந்தேனே
எத்தனையோ அழகுண்டு இயற்கையெனும் படைப்பினிலே
அத்தனையும் உனைப்போல அழகில்லை அழகில்லை
நித்திலமே உன்வதனம் நெஞ்சோடு வாழுதடி
சத்தியமாய் உன்நினைவு செத்தபின்பும் நீளுமடி!
தென்னவளே என்னவளே மன்னவளே சின்னவளே
கண்களிலே அன்புகாட்டி கைகளிலே வளையும்பூட்டி
கொண்டையிலே தாழைசூட்டி கோதைமகள் மதுவூற்றி
என்னருகே வந்துநின்றாள் எழில்கொஞ்சும் முகம்காட்டி!!
முத்துதிரும் இரத்தினமாய் மோகனமாய் சித்திரமாய்
கத்திவிழி போர்செய்தாய் கவிதையெனப் பத்திரமாய்!
மெத்தையிலே வந்தமர்ந்து முத்தங்கள் நீதந்து
தத்தையவள் விழிமூட தந்தனத்தோம் கவிபாட...!!
மோனமாக வந்துவந்து மோகமதைக் கூட்டிவிட்டாய்
தேனொழுக நீபேசி தெள்ளமுதைத் தந்துவிட்டாய்
ஆனவரை ஆனதடி ஆவிபறி போனதடி
ஆணாக நான்பிறந்த அர்த்தமின்று விளங்குதடி!!
இக்கவிதைகள் வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. மூன்றாம்கோணம் (இணைய இதழ்) - 09-12-2011
2. பதிவுகள் (இணைய இதழ்) – 23-12-2011
கலியுகம் வீழட்டும்!
கவிதையோ டொருகாலம்!!
மோதித்தான் பார்ப்போமே! – என்
முன்னே வாடாகாலா!!
ஜாதிப் பிரிவோ டொருகாலம்!
சமயப் பூசலோ டொருகாலம்!!
பாதியில் வந்தவன் நானே! – இப்
பிரபஞ்சமு மென்னுள் தானே!!
ஆதிசிவன் மைந்தனும் நானே! – அந்த
ஆண்டவனின் பிள்ளையும் நானே!!
நீதி நெறியோடு வாழத்தானே – இங்கு
நீசனாய்ப் பிறந்தவன் நானே!!
வீதிகளில் நடக்கின்ற போது – விதி
வலிமைகொண்டு தாக்குதடி தாயே!
ஓதுவேன் உன்பெயரை தினமும் – இங்கு
ஓட்டுவாய் கலியை இன்றே!!
மேதினியில் நிலவட்டும் அன்பு! – இனி
மேவட்டும் கிருதயுகம் தொடர்ந்து!!
அண்ணன் எழுதிய பாடல்!
அன்பான தம்பிப்பாப்பா
அண்ணன் எழுதிய பாடல்கேட்க
ஆனந்தமாய் வாருங்கள்!
தாயிடம் அன்பைக் கற்க வேண்டும்
தந்தையிடம் பண்பைக் கற்க வேண்டும்
நீயும் நாளை உயர வேண்டும்
நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்!!
துள்ளித் திரிந்து விளையாட வேண்டும்
தூய்மையா யுடலைப் பேண வேண்டும்
பள்ளிக்குத் தவறாமல் செல்ல வேண்டும்
பாடங்களைக் கவனமாய் படிக்க வேண்டும்!!
உள்ளத்தில் தூய்மை உனக்கு வேண்டும்
உறுதியும் வாய்மையும் உனக்கு வேண்டும்
கள்ள மில்லா நட்பு வேண்டும்
கருணை பொங்கி வழிய வேண்டும்!!
கலாமின் அறிவுரைகள் கேட்க வேண்டும்
காந்தியின் அகிம்சையும் உனக்கு வேண்டும்
நாளைய இந்தியா உயர வேண்டும்
நம்பிக்கை எப்போதும் உனக்கு வேண்டும்
தடைகளை எதிர்த்து சாதிக்க வேண்டும்
தங்கமாய் நீயும் ஜொலிக்க வேண்டும்
படைகள் பலவந்து எதிர்த்த போதும்
பாசம் மட்டும் மிஞ்ச வேண்டும்
எதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
‘ஏனெதற்கு’ என்று கேட்க வேண்டும்
புதியதோர் உலகு படைக்க வேண்டும்
பழைய வரலாறு உடைக்க வேண்டும்
சாதியின் பெயரும் உனக்கு வேண்டாம்
சமயத்தின் பெயரும் உனக்கு வேண்டாம்
வீதிகளில் பரவும் தீவிர வாதம்
வேதனை தரு முனக்கு வேண்டாமே!!
இக்கவிதைகள் வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) - 03-12-2011
உன் நினைவில்...
மச்சந்தான் கொஞ்சமடி மதிமயக்கும் நெஞ்சமடி
அச்சமில்லை உனைப்பாட ஆசைவந்து அணைபோட
கச்சணிந்த முன்னழகு காவியமோ உன்னழகு!!
எத்தனையோ தமிழிலுண்டு எழில்கொஞ்சும் உனைக்கண்டு
சுத்தமான தங்கமடி சூழ்ந்தபலா அங்கமடி
இரத்தத்தில் வேகமடி இரதியே புதுஇராகமடி
சித்தத்தில் உன்நினைவு சிறுபெண்ணே உன்நினைவு!!
ஓம்சக்தி!
அறிவே பலமே சக்தி சக்தி
அண்டமெலாம் நீயே சக்தி சக்தி
அகிலமெலாம் தாயே சக்தி சக்தி
துன்பமில்லா நிலையே சக்தி சக்தி
துயரில்லா மதியே சக்தி சக்தி
மண்ணுலகில் நீயே சக்தி சக்தி
மாயையைக் கடந்த நிலையே சக்தி சக்தி
உண்மையான உணர்வே சக்தி சக்தி
உருவமில்லாத் தெளிவே சக்தி சக்தி
வன்மையான தோளே சக்தி சக்தி
வலிமையான உளமே சக்தி சக்தி
கண்களில் ஒளிர்வாய் சக்தி சக்தி
காற்றுவழி உடல்புகுவாய் சக்தி சக்தி
பெண்களில் இருப்பாய் சக்தி சக்தி
பேருவகை கொள்வேனே சக்தி சக்தி
அன்பினிலே வாழ்வாய் சக்தி சக்தி
அறிவினிலே உணர்வேன் சக்தி சக்தி
என்னோடு இருப்பாய் சக்தி சக்தி
ஏகாந்த வாழ்வே சக்தி சக்தி
முன்வினைகள் தீர்ப்பாய் சக்தி சக்தி
முக்திபெற வைப்பாய் சக்தி சக்தி
இன்பமான நிலையே சக்தி சக்தி
இருகைகளால் தொழுவேன் சக்தி சக்தி
எப்படி முன்னேறுவாய்?
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?
நம் தமிழ்நாட்டில்
தமிழை முதன்மையாய் படித்தால்
வேலை கிடைப்பது உறுதி
என்றநிலை சாத்தியமில்லாதவரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?
குளிப்பதற்குத் தண்ணீரில்லாவிட்டாலும்
குடிப்பதற்குத் தண்ணீரில்லாவிட்டாலும்
உண்பதற்கு ஒருவேளைகூட
உணவில்லாவிட்டாலும்
‘மடக் மடக்’ என்று
மாட்டுமூத்திரத்தைக் குடிப்பதுபோல
குடிப்பதற்கு சாராயம்மட்டும் போதும்
என்று நீ வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?
முதுகு முழுவதையுமே
ஊரார் பார்க்கும்படி
ஜாக்கெட் அணிவதை
பெருமையாகக் கருதும்
குடும்பக் குத்துவிளக்குகள்
வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?
யார் மேடையேறி
எதைப் பேசினாலும்
யோசிக்காமல் கைதட்டும்
பாமரனாய் நீவாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?
பெற்ற குழந்தைக்கு
பால்கொடுக்க மட்டுமே
வெளியே திறந்துகாட்டவேண்டிய
முன்னிரண்டு முலைக்காம்புகளை
துருத்திக்கொண்டு வெளியே தெரியும்படி
டி-சர்ட், சுடிதார் அணிவதுதான்
நவநாகரீகம் என்று கருதும்
அதிகம் படித்த யுவதிகள் வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?
நட்பு என்ற போர்வைக்குள்
பல்லாண்டுகளாய்
உல்லாசமாய் சல்லாபமாய்
நள்ளிரவுவரை படுக்கையைப்
பகிர்ந்துவிட்டு
அன்றிரவே கருவைக்
கலைத்துவிட்டு
மறுநாள் இன்னொரு ஆணுக்கு
மனைவியாகும் பெண்கள் வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?
கட்டிய மனைவியியே – காசுக்காக
கூட்டிக்கொடுக்கும் கணவனைப்போல்
பற்றிய கொள்கைகளையே
காற்றில் பறக்கவிடும்
அரசியல்வாதிகளை
நீ தலைவனென்று கோஷமிடும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?
நான்கு சுவர்களுக்குள்
கணவன் மட்டுமே காணவேண்டிய
உடல் வளைவுநெளிவுகளை...
குண்டுகுழிகளை...
மேடுபள்ளங்களை...
ஊரார்முன்னே
காட்டிக்கொண்டும்
ஆட்டிக்கொண்டும்
அலைந்து திரிந்துவிட்டு
முதலிரவில் கணவனிடம்
புதிதாய்த் திறந்துகாட்ட
ஒன்றுமே இல்லாத
கற்புக்கரசிகள் வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?
தாய்க்கும் பிள்ளைக்குமுள்ள
புனிதத்தை உணர்த்தும்
தொப்புளைக் கூட
கொச்சைப்படுத்திக் காசுபார்க்கும்
திரைப்படங்களை நீ ஆதரிக்கும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?
வாக்களிப்பது உன்கடமை
எனக் கருதாமல்
கடமையைச் செய்ய
வாயை பிளந்துகொண்டு
காசுவாங்கும் நீ வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?
எப்படி முன்னேறுவாய்?
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?
அம்மாச்சி!
என் அம்மா!
என்அம்மாவைப் பெற்றவள்
நீதான்!!
என்னைப் பெற்றவள்
என்தாயென்றாலும்
நான் தரையில் தவழ்ந்த
நாள் தொடங்கி
நிலைபிடித்து நின்ற நாள்வரை
‘என்னுயிரே நீதான்’ என்று
உன்மடியிலள்ளி எனைக்
கொஞ்சிமகிழ்ந்தவள் நீ!
என்தாய் எனக்குத்
தாலாட்டு பாடியதில்லை!
உன்தாலாட்டைக் கேட்டு
நான் உறங்காத நாளில்லை!!
தொட்டிலில் கிடந்தபடியே
உன் வாய்க்குள்ளும் உடல்முழுதும்
நான் பீச்சியடித்த சிறுநீரைக்கூட
புனிதகங்கையின் தீர்த்தமென்றே
குளித்து மகிழ்ந்தவள் நீ!
அரிதாய்க் கிடைக்கும்
அமிர்தமென்றே
அருந்தி மகிழ்ந்தவள் நீ!!
நான் செய்தசெயல்
தவறென்று தெரிந்தபோதெல்லாம்
தண்டித்து வளர்க்காமல் – எனைக்
கண்டித்து வளர்த்தவள் நீ!
இன்று...
நோயோடு படுக்கையில்
கிடந்த உன்னைப் பார்த்தபோது
நானுருகிப் போனேனே...!!
வலியோடு துடிக்கிறாய்!
விழிமூட மறுக்கிறாய்!
வழியொன்று பிறக்குமடி! – உன்
வலியுங்கூட மறக்குமடி!!
நீயாய் எழுந்துநடப்பாயென்ற
நம்பிக்கையை என்மனதில் நிறுத்தி
உனைப் பிரிந்து நடக்கிறேன்!!
தமிழ்த்தாயே!
செல்லக் குழந்தையடி நீ!
முத்துரதம் போன்றவள் நீ! – இங்கு
முழுநிலவாய் வந்தவள் நீ!
தித்திக்கும் தேன் சுவையாய் – எங்கள்
தென்னாடு உனைப் போற்ற
எத்திக்கும் புகழ் பெற்ற – அன்பான
எம் தமிழ்த்தாயடி நீ!!
நல்ல மொழியுடையாள் நீ! – என்
நாவில் புகுந்தவள் நீ!!
சொல்லும் மொழிகளிலே – தனிச்
சுவை மிகுந்தவள் நீ!!
எள்ளளவும் குறை காணோம் – இங்கு
என் தமிழ்த்தாய் உன்னிடம்!
பள்ளத்தில் வீழ்ந்தாயடி தாயே! – உனைப்
பாவிகள் மறந்தாரடி தாயே!!
கற்ற பழந்தமிழ் நீ! – எனைக்
காப்பாற்ற வில்லையடி தாயே!
உற்ற தாயாய் நீயிருந்தும் – எனக்கு
உதவ வில்லையே தாயே!
மற்றொரு மொழியாம் ஆங்கிலம் – என்
மானங் காக்குதடி தாயே!
பற்றுதல் குறையவில்லை தாயே! – உன்மேல்
பாசம் மறையவில்லை தாயே!!
நீயும் என் னுயிரன்றோ! – எங்கும்
நான் வணங்கும் தெய்வமோன்றோ!
தாயே சரண மென்றேன்! – தமிழ்த்
தாயே சரண மென்றேன்!!
வாயார உனை நானே – பலமுறை
வாழ்த்து கிறேன் தமிழ்த்தாயே!
துயர் வேண்டாம் தாயே! – இனி
துன்ப மில்லை தாயே!!
தென்னகத்தே வளர்ந்த நீ – இனி
தரணியெல்லாம் தழைப்பாய் நீ!
எனைப்போல பலகோடிப் புலவர்கள் – எப்போதும்
இங்குண்டு உனை வாழ்த்த!!
என் னகத்தே உள்நின்று – இங்கு
எனை யியக்கும் தமிழ்த்தாயே!
உன்தாள் பணிந்து தொழுது – இறுதியாய்
உனை நான் வாழ்த்துகிறேன்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011
அருள்வாய் தேவி!
அகந்தை அழியட்டும்!!
அன்பில் உறையட்டும்! என்மதி
அறிவிற் சிறக்கட்டும்!!
தேகம் மெலியட்டும்! – என்னுள்
சோகம் ஒழியட்டும்!!
கோபம் குறையட்டும்! – முன்ஜென்ம
சாபம் பொசுங்கட்டும்! – என்னுள்
செம்மை பிறக்கட்டும்!!
விதியின் வழியை
மதியால் வெல்ல
வழியுரைப்பாய் தேவி! – என்றும்
உன்னருளே என்மனதில் மேவி!!
காதல் குழந்தைகள்!
உன் அப்பா!
பிரம்மனின் பெண்ணுருவம்
உன் அம்மா!!
பேரழகியான
உன்னைப் படைத்ததனால்...
தேநீர் அருந்திவிட்டு
அந்தக் கோப்பையை
கீழே எறிந்துவிடாதே...
என்னிடம் கொடுத்துவிடு!
என் செல்லக் குழந்தையான
உன் இதழ்கள் பட்ட
அந்தக் கோப்பையிலும்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
நம்முடைய காதல்!!
உன் முகத்தில் வழியும்
வியர்வைத் துளிகளை
உன் கைக்குட்டையால்
அடிக்கடித் துடிக்கிறாய்!
உன்னைப் போலவே
உன் கைக்குட்டையும்
அழகாகிக் கொண்டே
வருவதைப் பார்...!!
பொதுவாக காதலிக்க
ஆண் பெண் என
இருவர்தான் தேவை!
ஆனால்...
நம் காதலுக்கு மட்டுந்தான்
நீ நான் நாம்காதல்
என மூவர் தேவை!
நீ என்
பார்வைஎல்லைக்குள்
வாழும்போதெல்லாம்
நான்
உன்னை நேசிக்கிறேன்!
நீ என்
பார்வையை விட்டு
மறைந்தபின்
நான்
நம் காதலை நேசிக்கிறேன்!!
நான்
திருமணம் செய்துகொள்ள
இவ்வுலகில்
எத்தனையோ பெண்களில்
ஒருத்தி உண்டு!
நான் காதலிக்க
என்னுள்ளத்தில்
நீ ஒருத்தி மட்டுந்தான்!!
என் தேவதை
உன் நினைவுகளே
உலகமென்று வாழும்
காதல் பக்தன்நான்!!
இவ்வுலகில் நம்மைப்போல்
காதலிப்பவர்கள் அனைவருமே
மேல்ஜாதி மக்கள்!
காதலிக்காதவர்கள் அனைவருமே
கீழ்ஜாதி மக்கள்!!
நாமிருவரும் பேசிச்சிரித்த
பொழுதுகளிலெல்லாம்
நாம்காதல் கருவுற்று
பல குழந்தைகளை
பெற்றெடுத்து விட்டது!
இன்றுநான் தற்செயலாய்
நாம் பேசிச்சிரித்த
இடங்களுக்கெல்லாம்
போக நேர்ந்தபோது
நம் காதலின் குழந்தைகள்
ஒவ்வொருவரும் தனித்தனியே
தவக்கோலத்தில் அமர்ந்திருப்பதைக்
கண்டேன்!
‘குழந்தைகளே...
ஏனிப்படி அமர்ந்திருக்கிறீர்கள்?’
என வாஞ்சையோடு கேட்டேன்!
‘உன்னையும் உன்காதலியையும்
சேர்த்துவைக்க விருப்பப்பட்டாள்
எங்களின் அம்மா!
நீயுன் காதலியை
முதல்முதலில் சந்தித்த
அந்தப் பேருந்துக்குள்
கடுந்தவம் செய்கிறாள்
எங்களின் அம்மாவான
உங்களின் காதல்!
அவளின் விருப்பத்தை
நிறைவேற்ற
நாங்கள் பிறந்த
இதே இடங்களில்
கடவுளை நோக்கி
தவமிருக்கிறோம்’
என்று சொல்லிவிட்டு
மீண்டும் தவத்தைத் துவக்கின
நம் காதலின் குழந்தைகள்!!